என்வீட்டு சமையலறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என்வீட்டு சமையலறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 டிசம்பர் 2023

கானாந்தி,முல்லை,முசுட்டைக்கீரையும் புளிமாங்கா சொதியும்

நாங்கள் குடியிருந்த வீட்டில் வேலியில் கானாந்தி செடி மரமாகி,அதில் மேல் முல்லை கொடியும் படர்ந்து வளர்ந்து நின்றது. கானாந்தி,முல்லை,முசுட்டை கீரையின் துளிர்களை ஆய்ந்து அலசி புளி மாங்காயும் கீரி மீனும் சேர்த்து தேங்காய்ப்பால் சொதி வைச்சால் கீரைகளின் வாசமும் தேங்காய்ப்பாலின் வாசமும் சேர்ந்து ஊரையே விருந்துக்கு அழைக்கும். சோத்துக்குள் சொதியை விட்டு தின்று விட்டு சொதிக்குள் சோற்றை தேடி அப்படியே தட்டோடு குடிப்போம்.
கானாந்தி செடி கீரைகளை ஆய்ந்து கழுவி வைச்சிட்டு... மீன் அல்லது இறாலை சுத்தப்படுத்தி அதுக்குள் மஞ்சள் உப்பு,பச்சமிளகாய்,புளிமாங்காய் சேர்த்து தண்ணீர் விட்டு அவிய விடணும்,அவிந்ததும் இரண்டாம் மூணாம் தேங்காய்ப்பால் விட்டு கொதிக்க விட்டு பின் இலைகளை போட்டு மூடி ஒரு நிமிடம் விட்டு திற்ந்து தலைப்பாலை விட்டு அதுவும் கொதி வர இறக்கிரனும். கீரைகளை அதிகம் அவிய விட கூடாது.
பொன்னாங்கன்னி,வல்லாரை, திராய் கீரைகள் வயலில் சேற்று நிலத்தில் 2/12 அடி சுற்றளவுக்கும் அதிகமாகப் படரும்.மத்ததெல்லாம் வீட்டு வேலிகளிலும் குப்பை மேட்டிலும் தோட்டத்தில் வளர்ந்து வீட்டில் முற்றத்தில் முருங்கை மரங்களும் அதில் கீரையும் பூவும் காயும் எப்பவும் கிடைக்கும், அதிலும் மாரிகாலம் வந்தால் அடிச்சி ஊத்தும் மழையில் மரங்களெல்லாம் குளிச்சி சுத்தமா நிக்கும், பூச்சிபுழுக்கள் எல்லாம் மழைத்தண்ணீரில் அலசிப்பட்டு போயிரும், நாலு நாள் மழை பெய்ந்தாலே மரங்கள் எல்லாம் துளிர் விட்டு இளம் தளிருடன் பார்க்கவே பரவசமாக நிற்கும். வெள்ளத்தில் எல்லாம் அள்ளுப்பட்டு போவதனால் வேலியில் மரத்தில் படரும் கீரைகளும் காய்களும் தான் சமையலுக்கு.
முல்லை
தூதுவளை, முருங்கை, கறிவேப்ப்பிலை கீரைகளின் துளிர்களை பிடுங்கி அலசி சோத்துபானையில் கஞ்சி வடிச்சதும், அதுக்கு மேல் வாழை இலை போட்டு மூடி நெருப்பை அணைச்சி விட்டால் கொஞ்ச நேரத்தில் கீரை துளிர்கள் அவிந்து இருக்கும். அதோட பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், உப்பு, தேசிப்புளியும் சேர்த்து அம்மியில் அரைச்ச சம்பலுக்கு சுடு சோறு இருந்தால் வேற கறி வேண்டாம் தான்.
பீர்க்கை கொடியும் நாடங்காயும், புடலங்காயும் முருங்கை மரத்தில் படந்து கிடப்பார். பீர்க்கை வீட்டு தேவைபோக அல்லயவருக்கு கொடுத்தும் காய் அப்படியே காய விட்டு காய்ந்து பாத்திரம் தேய்க்கவும்,. முதுகு தேய்க்கவும் பாவிப்பம். பீர்க்கங்காய், நாடங்காய், வத்தவக்காய்க்கெல்லாம் மணப்பு கருவாடு போட்டு சொதி, புடலங்காய் பால் கறி, கத்தரிக்காய் பால் கறி மணப்பு கருவாடு போடாமல் சமைக்க மாட்டோம். லாவுட் பழம் மரம் கிணற்றடியில் பெரிதாக வளர்ந்து நின்றது. லாவுட் காயும் புளிமாங்காயும், உப்பும் போட்டு உரலில் இடிச்செடுத்தால் அது தான் பின்னேரம் டிபன். லாவுட் பழமும் மாரி காலம் தான் பழுக்க தொடங்கும். தானே பழுத்து பழங்கள் நாலா வெடிச்சி விழும், மாவு போல் செம்ம ருசியான பழம், சின்ன வயதில் நான் அதிகம் லாவுட்காயும் பழமும் சாப்பிட்டிருக்கேன்.
பாத்திரம் தேய்க்கவும், முதுகு தேய்க்கவும் காய்ந்த பீர்க்கங்காய்
திராய் நல்ல கசப்புச் சுவை கொண்டது. நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது. திராய்,குறிஞ்சா இரண்டும் சமைக்கும் போது கீரையில் நீர் இருக்க கூடாது. நீரில் வேக விட்டால் கசப்பு அதிகரிக்கும், கழுவி காய வைத்த பின் அரிந்து சுண்டல் செய்யணும், மீன் அவித்து பிசைந்து தேங்காய்ப்பூவும் சின்ன வெங்காயம் நிரம்ப போட்டு உப்பும் தேசிப்புளியும் சேர்த்தால் கசப்பு குறைந்து விடும், நான் கீரைகளுக்கு தேசிப்புளி சேர்க்காமல் சும்மா சமைப்பேன்.மீன் போடாமலும் சுண்டல் செய்யலாம். திராய் சுண்டலை போல் மீனும் புளிமாங்காயும் சேர்த்து செய்யும் அவியலுக்கு கடைசியா திராயை தூவி விட்டு கிளறி விட்டால் செம்மயா இருக்கும்.
எங்கட வடகோவை ஐயா கீரை பத்தி போட்ட பதிவில் நான் கானாந்தி கீரையை விட்டு விட்டீங்களே என கேட்டனா... அவரும் கானாந்தி கீரையோட படம் போட சொல்லி கேட்டாரா.அவர் கேட்டதும் கீரையோட படம் மட்டும் போட்டால் திண்ட சோறு செமிக்காது அல்லோ? அதனால் கானாந்தி கீரையோட சேர்த்து கதையும் சொல்லிட்டேன். 😻😻😻 ப்டங்கள் இணையத்தில் இருந்து எடுத்தேன்.

19 ஜூலை 2022

கல்லாற்றின் கூனி கடையலும் சுடு சோறும்

கல்லாற்றின் கூனி கடையலும் சுடு சோறும் ( முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன் ) நிஷாவும் மட்டக்களப்பின் சிறப்பு கல்லாற்றின் ஆற்றங்கரை பக்கமாக களுதாவளை - மண்டூர் பக்கமிருந்து தோணியில் ( வள்ளம் ) வரும் பெண்கள் இருவர் குழுவாக இடுப்பளவு நீரில் இறங்கி நின்று சல்லடை போல் இருக்கும் சேலையின் இருபக்கமும் பிடித்து கொள்வார்கள். அதை தண்ணீரில் மேல் தாலாட்டுவது போல் முன்னும் பின்னும் நீருக்குள் ஆட்டி ஆட்டி அசைக்கும் போது கூனி அந்த துணிக்குள் சேரும். இதனை "கூனி வடித்தல்" என்னும் சிறப்பு பெயர் கொண்டும் அழைப்பர். அதே பெண்களே கல்லாறு சந்தைக்கு கொண்டு விற்பார்கள். இறாலின் இளநிலை பருவமான கூனி இராசவள்ளி கூழ் போல் நிறம் இருக்கும். பூவரசு இலைக்குள் அடங்கும் ஒரு பங்கு. 🌺🌺 ஐம்பது சதம் .😂 கூனி உடன் ஆற்றின் மண் சிப்பி இருக்கும். அதை அரிச்சி அரிச்சி கழுவி எடுக்கணும்.
கூனி கடையல் பச்ச மிளகாய் அவிச்சி கடைஞ்சு நல்ல புளி மாங்காயும் உப்பும் மஞ்சளும் சேர்த்து சுத்தமாக்கிய கூனி சேர்த்து அளவான தண்ணி விட்டு மூடி விட்டால் பத்து நிமிடத்தில் அவிந்து விடும். மீண்டும் மாங்காயை அகப்பையால் கடையும் போது கூனி மாங்காய் கொச்சிக்காய் எல்லாம் சேர்ந்து செம்மமையா இருக்கும். அதே போல் கூனி இங்கே சுவிஸில் தாய்லாந்து கடையில் வாங்கி சமைத்து இருக்கின்றோம். ஆனால் போத்தலில் அடைக்க பதப்படுத்தும் போது அதன் இயற்கையான சுவை மிஸ்ஸிங்

 மட்டக்களப்பில் இருந்து எமக்கு வரும் பொருட்களில் 
 * கல்லாற்று கூனி
 * திராய் வற்றல் 
 * குறிஞ்சா கீரை வற்றல் 
 * பொட்டியான் கருவாடு கட்டாயம் இருக்கும்

 கெளுத்தி மீன் 
சள்ளல் மீன்
 செல்வன் மீன்
 குஞ்சி மீன் எல்லாம் விசேஷம்🤣

 ஆறு, குளங்களில் மீன், இறால் பிடித்தல், மீன்களை வாங்கி விற்றல், கூனி, ஐயாமாசி வடித்தல் போன்ற ஆபத்தான தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்களை கண்டு வளர்ந்தனால் உழைத்து பிழைத்தலில் அருமை எமக்கும் உணர்த்தப்பட்டிருந்தது. எங்கள் ஊரில் அக்காலங்களில் பெண் தொழில் முனைவோர்கள் அதிகமாக இருந்தனர். வீட்டு ஆண்கள் வேலைக்கு போனாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் பல தொழில்களை செய்து சிறு வருமானம் பெறும்படி இருந்தது. முக்கியமாக பத்தாம் வகுப்பில் பரிட்சை எழுதி விட்டு காத்திருக்கும் காலங்களில் பெண்களுக்கான தொழில் பயிற்சிகளை ஆரம்பித்து விடுவார்கள். 

 இதை குறித்து அடுத்த பதிவில் தொடர்ந்து எழுதுகின்றேன்.

 வேலையத்தவர்கள் மனசில் தான் ஆயிரம் குத்தல்களும் குடைச்ச்ல்களும் உருவாகும் என்பதை புரிந்து கொண்டால் இக்காலத்தில் என்ன நடக்குது என்பதை இதை வாசிப்பவர்கள் சிந்த்னைக்கே விடுவோம். போவோமா ஊர்கோலம் இந்த பூலோகம் எங்கெங்கும்

நூல் கோல் கிழங்கு கறியும், கீரை சுண்டலும்

நூல் கோல் கிழங்கு கறியும், கீரை சுண்டலும் புகைப்படத்தில் இருப்பது இன்றைய மதியம் எனக்கான உணவு : என் தோட்டத்தில் விளைந்த நூல் கோல் , சமைக்க தேவையான ஒற்றை பச்ச மிளகாயும். செர்ரி தக்காளியும் வீட்டுத்தோட்டத்தில் நூல் கோல் கிடைக்கும் நாட்களில் இந்த கிழங்கை பிரதான உணவாகவும், அதன் கீரையும் உப உணவாகவும், அரிசியும் எடுத்து கொள்ளலாம்.
நூல் கோல் கிழங்கு தேங்காய்ப்பால் கறி கிழங்கை தோல் சீவி அளவான சதுர துண்டங்களாக வெட்டி கழுவி கொள்ளுங்கள். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி, பச்ச மிளகாயும் நறுக்கி போட்டு மஞ்சளும், உப்பும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். முக்கால் பதம் வேகி வரும் பருவத்தில் நல்ல கட்டி தேங்காய்ப்பாலை விட்டு கொதிக்க விட்டு எடுத்தால் அருமையான நூல் கோல் பால் கறி தயார். விரும்பினால் கருவாட்டு துண்டு, மாசி சேர்க்கலாம். நான் இப்பொதெல்லாம் அசைவ உணவுகள் தவிர்ப்பதால் மரக்கறியாக்வே சமைத்து எடுப்பேன். மரக்கறிகளை கரையும் படி வேக விடாமல் முக்கால் பதத்தில் கடித்து உண்பது போல் வேக விட்டு சமைத்து எடுப்பது ஆரோக்கியமானது.
நூல் கோல் கீரை சுண்டல் சின்ன வெங்காயம் தேங்காய்ப்பூ பச்ச மிளகாய் மீன் விரும்பினால் சேர்க்கலாம். இலையின் நடுவில் இருக்கும் தண்டுகளை வெட்டி எறிந்து விட்டு கீரையை நன்றாக கழுவி இலையின் மேல் இருக்கும் நீரை உதறி எடுத்த பின் மிக மெல்லியதாக அரிந்து கொள்ளவும். மீன் சேர்த்து சுண்டுவது என்றால் மீனை சுத்தம் செய்து பச்சை மிளகாய், மஞ்சள் உப்பு சேர்த்து அவிய விட்டு பின்னர் மீனை தனியே எடுத்து முள் நீக்கி கொள்ளவும், முள் நீக்கிய மீனை மீண்டும் சட்டியில் போட்டு ஒரு கடையல் கடையவும். மீன் சேர்க்காமல் சுண்டல் செய்ய பச்சை மிளகாயை கட்செய்து மஞ்சள் உப்பு சேர்த்து அவை அவியும் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும், மிளகாய் அவிந்த பின் அகபையால் கடைந்து விட்டு கீரையை அதனுள் சேர்த்த்து ஒரு நிமிடம் மூடி விடவும், தேங்காய்பூ ( தேங்காய் மலிவாக கிடைத்தால் ருசிக்கேற்ப தாராளமாக சேர்க்கலாம். ) சேர்த்து கீரையுடன் ஒரு நிமிடம் கிளறி விடவும், தேங்காய்ப்பூ சேர்த்த பின் மூடி போட்டு மூட வேண்டாம். இறுதியில் நறுக்கிய வெங்காயமும் சேர்த்து வெங்காயம் அவிய விடாமல் கடிபடும் பருவத்தில் இருக்கும் போதே அடுப்பில் இருந்து இறக்கி விடவும். இந்த மாதிரி கீரை சுண்டலுக்கு நான் புளி சேர்ப்பது இல்லை. அதிகரித்து வரும் விலை ஏற்றத்தை சமாளிகவும் அரிசி யின் தேவையை குறைக்கவும், ஒரு வேளை உணவில், இரண்டு பங்கு கிழங்கு கறி, அதே அளவு கீரை சுண்டல். ஒரு பங்குக்கும் குறைவாக அரிசி சோறு சேர்த்து கொள்ளலாம்.(மீன்,இறைச்சி உணவு கிடைத்தால் இந்த அளவுகளில் மாற்றம் செய்யலாம் )
அரிசியின் தேவை : ஒரு நபருக்கு தேவையான அரிசியின் சரியான அளவைக் கொடுப்பது கடினம், ஏனென்றால் எல்லா அரிசியும் ஒரே மாதிரி இருக்காது! புழுங்கல் அரிசி அதிக எடை கொண்டது.100 கிராம் சமைக்கப்படாத அரிசி 200-300 கிராம் சோறாக மாறும். எனவே சமைக்கப்பட்ட அரிசியின் எடை இரட்டிப்பாகவோ அல்லது மூன்று மடங்காகவோ இருக்கலாம்.
உணவில் அரிசி முக்கிய உணவாக இருந்தால், ஒரு நபருக்கு 100 கிராம் முதல் 120 கிராம் வரை பச்சை அரிசி தேவைப்படும். அரிசி உடன் பக்க உணவுகளுக்கு, ஒரு நபருக்கு 20-60 கிராம் உலர் அரிசி போதுமானது. உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்து கொண்டால் வளர்ந்த ஒரு நபருக்கு 50 கிராம் போதுமானது. பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு உணவு வழங்கும் திட்டங்களில் மரக்கறிகளை கீரைகளை அதிகமாகவும் அரிசியை உப உணவாகவும் எடுத்து கொண்டால் ஒரு கிலோ அரிசியில் 2500 - 3000 கிராம் சோறு கிடைகுமானால் 20 சிறுவர்களுக்கு 120 - 140 கிராம் சமைத்த அரிசி சோறும் 120 - 150 கிராம் மரக்கறிகளையும் சேர்த்து கொள்ளலாம். இதனுடன் பழங்களும் சேர்க்கும் போது அதுவே நிறையுணவாகி விடும். அதிருக்க மலையக மரக்கறிகளில் நோக்கல் என ஒரு நாற்றுக்கு பெயர் இருந்தது. அது என்ன மரக்கறி என எனக்கு புரியவே இல்லை. நோக்கல் என தட்டச்சிட்ட போது நாங்கள் இங்கே kohlrabi என அழைக்கும், நூல்கோல் கிழங்கு படம் கிடைத்திருந்தது. இதை ஊரில் நோகூட் என அழைத்ததாக நினைவு. நூல் கோல் மருவி நோக்கல் ஆகி நோ கூட் எனவும் அழைக்கப்படுகின்றதா?

13 டிசம்பர் 2020

அவித்த பீட்ரூட்..

பீட்ருட் 

பிரபாவிடம் பீட்ரூட் வாங்கி வாங்கோ என்றேன். பிரெஷ் இல்லையாம் என்று அவித்து பதப்படுத்திய BIO பீட்ரூட் அரை கிலோ பாக்கெட் இரண்டு வாங்கி வந்திருந்தார். 

இது அவித்த பீட்ரூட்.. 








மண் இல்லாமல் சுத்தமாக கழுவி, உலர வீட்டு  காற்று  புகாமல்  பாக்கெட் செய்து  100 °C  யில் ஆவியில் அவித்து குளிர் படுத்தி பிரிட்ஜ் ல் வைத்து மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம். 

தோல் சீவி சின்னதாக நறுக்கி, வெங்காயம் சில்லி தூள், உப்பு சேர்த்து எண்ணெய் விடாமல்   நான்ஸ்டிக் சட்டியில் மூடி ஐந்து - பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேக வீட்டு எடுத்தால் சூப்பர் கறி ரெடி. 

பொதுவாக கிழங்கு வகைகளை உடனே வாங்கி சமைப்போம். அல்லது சில நாட்கள் வைத்து பயன் படுத்துவோம். வாரம், மாதம் என்று வைத்திருக்க முடியாது. 

அப்படின்னு நான் பலர் நினைக்கின்றோம். 

ஆனால் அவைகளை சுவையும், ஊட்ட சத்துக்களும் மாற்றம் அடையாமல் பதப்படுத்தி பாதுகாக்கும் போது மாதங்கள், வருடங்களுக்கு பயன்படுத்த முடியும்.

இதை குறித்து முன்னரே தற்சார்பு  குழுவில் எழுதி இருந்தேன். விவசாய  உற்பத்தி அதிகமாகி சந்தைப்படுத்தல் வாய்ப்புகள் குறையும் போது ( திடீர் lockdown , ஊரடங்கு) அல்லது   விலை மலிவான காலங்களில் வாங்கி வீட்டு தேவைகளுக்கு சேமித்தும் வைக்கலாம். 

சுவிஸ் ல் ஒன்பது மாதம் குளிர், மூன்று மாதம் மட்டுமே வெயில் .. அதிலும் மழைக்காலம், காலா நிலை மாற்றம் என்று பெரும்பாலும்  குளிர் காலமே அதிகம் என்றாலும் கிராமத்து மக்கள் கிடைக்கும் வெயிலில்  அடுத்து வரும் குளிர்காலத்துக்கு தேவையான காய், பழங்கள், கிழங்குகள் என்று விளைவித்து  பதப்படுத்தி சேமித்து நிலவறைகளில் அடுக்கி விடுவார்கள். 



இங்கே நகர்ப்புற மக்களும், வெளி நாட்டவரும் தான் அதிகளவில் சூப்பர் மார்க்கட் நுகர்வோராக  இருக்கின்றார்கள். கிராம மக்களுக்கு அங்கங்கே சிறிய மளிகைக்கடைகள் ( பால், இறைச்சி, பிரெஷ் பழங்கள், காய்கள், சாலட்  ) இயற்கையான உற்பத்திகள் அவசர தேவைகளுக்கு வாங்கி கொள்ள முடியும்.

https://www.facebook.com/100000786292216/posts/3483198908382951/?d=n

28 ஜூன் 2019

முருங்கை இலையும்,தேங்காய்பூவும் / வெயில் என்றால் வெயில்.

வெயில் என்றால் வெயில்.
மேனி உருகி வியர்வையில் குளிக்க வைக்கும் வெய்யில். தரையில் தார் உருகும் வெய்யில்..



ஆனாலும் நம்ம வேலை நம்ம பாட்டில் நடக்கத் தான் வேண்டும்.
ஏழு கடலும், மலையும் கடந்து வந்த முருங்கை இலையும்,தேங்காய்பூவும் /சேர்ந்த சுண்டல், கத்தரிக்காயும் கருவாடும் சேர்த்த தேங்காய்ப்பால் கறி.சமைத்து சாப்பிட்டு சட்டி பானையெல்லாம் கழுவி வைத்தும்விட்டேன். 
பங்கு கேட்டு வந்திராதிங்கப்பா...😍😍




கொய்யாப்பழம் சாப்பிட்டாச்சு😛
அன்ன மின்னா பழம் பழுக்கட்டும் என வைத்திருக்கேன். 

அதுவும் பங்கு கிடைக்காதுப்பா..😻😻
                                  

அன்னபின்னா பழம்,, நான் குடியிருந்த கோயில் வீட்டில் தினம் திணட பழமாக்கும். லாவுட் பழ மரமும், அன்னமின்னாவும் பசிக்கு கொறித்த காலம் அது.

18 செப்டம்பர் 2017

குறிஞ்சா இலைச்சுண்டலை அறிஞ்சோமா!?



கொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள்

சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செடி வகைத்தாவரம். Gymnema sylvestre என்றழைக்கப்படும் .சிறுகுறிஞ்சா இலைகள் குடலை சுத்தப்படுத்தும் தன்மை வாய்ந்ததாகவும் நீரழிவு நோயாளர்களை இன்சுலின் எடுப்பதை தவிர்க்க செய்வது என்பதும் அறிவியல் ரிதியில் இன்னும் நிருபிக்கப்படா விட்டாலும் அனுபவத்தில் நீரழிவு நோயாளர்களுக்கு அரு மருந்து என்பதில் ஐயமே இல்லை என்பேன்.

Dregea volubilis எனும் பெயரில் இருக்கும் பெருங்குறிஞ்சா இலை கசப்பாக இருக்கும் இந்த இலை மூலிகைத்தன்மை வாய்ந்தது. இதன் கசப்பும் நீரழிவு நோயாளர்களுக்கு நல்லதென்பர்.


செடிவகை சிறு குறிஞ்சா இலைகள்

இவ்விலைகள் குறித்து தகவல்களை விக்கிமீடியாவிலும் இன்னும் தொகுக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் தொகுக்கலாம், திருத்தலாம் எனும் விதிமுறை விக்கிமீடியா தளத்தின் மீதான நம்பிக்கையை பொய்த்து போக செய்கின்றது. என்றாலும் இயலும் போது இயலுமானோர் அத்தளத்தின் தகவல்கல் பூர்த்தியாக்கப்படுமானால் எதிர்கால சந்ததிகளுக்கு பயன் தருவதாய் இருக்கும்.

சிறு குறிஞ்சா தென்,மத்திய இந்தியா மற்றும் இலங்கையின் வெப்பமண்டலக் காடுகளில்வளரும். இச்செடி தென் இந்தியாவில் அதிகமாக விளைவிக்கப்பட்டு இன்சுலின் தயாரிப்புக்கும் இன்னபிற மருத்துவத்துக்காகவும் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

சுவிஸுக்கும் ஏற்றுமதியாகும் இலைகளில் இவ்விலைகளும் இருக்கின்றது. இங்கே எம்மவர் வீட்டுச்சமையலில் குறிஞ்சா இலைக்கும் பங்குண்டு.



                                       பெருங்குறிஞ்சா கொடி இலையின் காய்கள்
பெருங்குறிஞ்சா இலைகளின் காய் முற்றி வெடித்து சிதறுவதனால் காற்றின் மூலம் விதைகள் தானாகவே நிலத்தில் விழுந்து முளைக்கும் தாவரமாகும்.. தடித்த வலிமையான இலைகளோடுவேலியிலோ, முருங்கை போன்ற கிளைகள் கொண்ட பெரிய மரங்களிலோ பந்தல் இட்டோ வளரும் கொடி வகை தாவரம். இது.
                                       
படர்ந்திருக்கும் கொடி இலைகள்
கொடியில் படரும் பெருங்குறிஞ்சா இலைகளை ஒவ்வொரு இலையாக பறித்து , அதன் காம்பை கிள்ளி தண்ணீர் விட்டு கழுவி, தண்ணீர் இல்லாமல் துடைத்து பத்து பதினைந்து இலைகளை ஒன்றின் மேல் ஒன்றை வைத்து அடுக்கி சுருட்டு போல் சுருட்டி நடுவில் பாதியாக்கி இடது கையில் பிடித்து கொண்டு வலது கையில் கூரான் பிளேட்டினால் அல்லது சின்ன கத்தியால் மிக மெல்லியதாக சீவி எடுப்பார் அம்மா. அப்போதெல்லாம் எங்கள் ஊரில் வாரத்துக்கு ஒரு தடவையேனும் குறிஞ்சா இலை சுண்டல் எனும் பொரியல் இருக்கும்,

குறிஞ்சா கீரை சுண்டலின் விஷேசமே அந்த கீரையை நாங்கள் மிக மெல்லியதாக அரிந்து எடுப்பதில் தான் இருக்கின்றது. சிலர் காய்கள் கட் செய்யும் பலகையில் வைத்தும் அரிவார்கள். ஆனால் எங்கம்மா, பக்கத்து வீட்டு அக்காக்கள், ஏன் என் தங்கைகள், தங்கை மாமியார் எல்லாம் இப்படி இடது கட்டைவிரல் சுட்டுவிரல் பிடிக்குள் பிடித்துக் கொண்டு வலது கையால் வெட்டும் வேகம் பார்த்து அதிசயித்திருக்கின்றேன்.

எனக்கு குறிஞ்சா கீரை சாப்பிட நிரம்பவே பிடிக்கும், சுடச்சுட சோறும், இந்த கீரை சுண்டலும் ஏதேனும் மீன் பொரியலும் சின்ன வெங்காயம் பச்சையாக இரண்டும் கிடைத்தால் போதும். வேறு கறியோ கூட்டோ வேண்டாம், எனக்கு இக்கீரையினை அரிந்தெடுக்கும் பொறுமை இல்லாததனால் இங்கே கடைகளில் கிடைத்தாலும் வாங்குவதில்லை. எந்தங்கை அடிக்கடி குறிஞ்சாகீரை சுண்டல் செய்வாள்.

மட்டக்களப்பில் அதுவும் பெரியகல்லாற்றுச்சாப்பாட்டுக்கென தனி கைமணமும் பக்குவமும் உண்டு.. அந்த ஊர் கிணற்று நீரின் சுவையும் அவ்வூர் சமையலை ருசியாக்குகின்றதெனில் மிகையில்லை. அத்தோடு ஜாதி,மதம்,இனம்,அந்தஸ்து,தகுதி, தரம் பார்க்காது அறிந்தவர், அறியாதோர் என்றில்லாமல் வீட்டுவாசலுக்கு வரும் எவரையும் விருந்தோம்பி அனுப்பும் குணமும், உபசரிப்பும் அன்பும் கூட கல்லாற்றுச் சாப்பாடு சுவைக்க அதிக முக்கிய காரணங்களாக இருக்கின்றது..

இலங்கை உணவில் கிழக்கு மாகாணம் அதிலும் மட்டக்களப்பு விருந்தோம்பலுக்கும், உணவின் சுவைக்கும் பெயர் போனது. இதை அக்காலத்தில் வடக்கிலிருந்து கிழக்குக்கு வேலை மாற்றம் பெற்றோ ஏதேனும் தேவைக்காகவோ பயணம் செய்யும் ஆண்களை மாந்தீரிகம் செய்து மயக்குவதாகவோ, பாயோடு ஒட்டும் படி மருந்து வைப்பதாகவோ சொல்வார்களாம். மட்டக்களப்புக்கு செல்லும் ஆண்களும் பெரும்பாலும் அங்கேயே பெண் எடுத்து வாழ்க்கையில் செட்டிலாகி விடுவதும் இக்கதைகளை நிஜங்களாக்கினாலும் உண்மைக்காரணமாய் உபசரிப்பும் விருந்தோம்பலும், உணவின் சுவையும் தான் அடிப்படைக்காரணங்களாய் இருந்திருக்கின்றது. இருக்கின்றது.

குறிஞ்சா கீரை சுண்டல் செய்வது எப்படி என பார்க்கலாமா?
குறிஞ்சா இலைகள் பத்து
ஒரு கைப்பிடி தேங்காப்பூ
ஐந்து பச்சை மிளகாய்
20 சின்ன வெங்காயம் தோல் உரித்து மெல்லியதாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
மஞ்சள், உப்பு
நான் வெஜ் சாப்பிடுபவர்கள் எனில் மீன் துண்டுகள் சேர்க்கலாம். வெஜ் எனில் சேர்க்காமல் விடலாம்,

எப்படி சமைக்கலாம்?
குறிஞ்சா கீரையை மேலே சொன்னபடி கழுவி துடைத்து அரிந்து எடுத்து கொள்ள வேண்டும்

பச்சைமிளகாயை நடுவில் கட் செய்து இரண்டாக்கி கொஞ்சம் நீர் விட்டு பாத்திரத்தில் போட்டு மஞ்சள் துளியும் உப்பும் சேர்த்து அவிய விட வேண்டும். பாத்திரத்தினை மூடி அவித்தால் மஞ்சள் வாசனை கீரையில் சேராது.

மீன் சேர்ப்பது எனில் மீனையும் கழுவி துண்டாக்கி பச்சை மிளகாய் சட்டிக்குள் போட்டு அவித்து கொள்ள வேண்டும். மீன் அவிந்ததும் தனியே பிரித்து அதன் முட்களை நீக்கி உதிர்த்து கொள்ள வேண்டும்.

பச்சை மிளகாய் அவிந்ததும் கரண்டி கொண்டு கடைந்து விட்டு வெஜ் கீரை சுண்டல் செய்ய விரும்புவோர்.. சூரிய காந்தி எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொஞ்சம் விட்டு அதனுள் கீரையை இட்டு கிளறி விட்டு உடனே தேங்காய்ப்பூவை சேர்த்து இரண்டு மூன்று தடவை கீரையுடன் கலந்து தேங்காய்ப்பூ சுண்டியதும் வெங்காயத்தினை சேர்த்து பாதி வெந்த பருவத்தில் ஒரே நிமிடத்தில் அடுப்பை விட்டு இறக்கி விட வேண்டும்.வெங்காயம் நன்கு அவியக்கூடாது. வெந்தும் வேகாமலும் பல்லில் கடி பட வேண்டும். அப்போது தான் கீரைச்சுண்டலே சுவையாக இருக்கும்,

குறிஞ்சா கீரை அதிகம் வேக விட்டால் கசப்பு அதிகமாகும், கீரை போடும் போது பாத்திரத்தில் தண்ணீரும் இருக்க கூடாது. பச்சை மிளகாய் அவித்து கடைந்ததும் அதன் நீர் வற்றி விட்டதா என கவனித்து கீரையை போட்டு கிளறவும். இவ்வகை கீரை சுண்டலுக்கு நீர் இருந்தால் அதிக கசப்புத்தன்மை இருக்கும், தேவையான அளவு உப்பும் சேர்த்தால் போதும், 

மீன் சேர்ப்பவர்கள் பச்சைமிளகாய் கடைந்தது முள் இல்லாமல் உதிரியாக இருக்கும் மீனை போட்டு கிளறி அதன் பின் மேலே சொன்ன முறையில் கீரை, வெங்காயம், தேங்காய்ப்பூ சேர்த்து கிளறி இறக்க வேண்டும்..

சுடச்சுட சோறும் கீரை சுண்டலும் உடலுக்கும் நல்ல ஆரோக்கியமாய் நோய் நொடி அண்ட விடாமல் வாய்க்கும் உருசியாய் கிடைத்த அருமந்த உணவுகளை விட்டு நாங்கள் நெடுந்தொலைவு வந்து விட்டோம்.

கீரைகள் சமைக்கும் போது என் பிள்ளைகளுக்கும் கொடுத்து பழக்கி இருப்பதனால் இன்னும் எங்கள் வீட்டில் கீரைக்கறிகளுக்கு இடம் உண்டு.

குறிஞ்சா இலைப்படங்கள் இணையத்தில் இருந்தே எடுத்து பகிர்ந்துள்ளேன்.

இந்தப்பக்கம் வந்து படிப்பவர்கள் உங்கள் கருத்துக்களை இட்டால் நானும் தொடர்ந்து எழுதும் உயிப்பூவை பெறுவேன் அல்லவா?

17 செப்டம்பர் 2017

வெந்தயக்குழம்பும் அம்மம்மாவும்

செவ்வாயும் வெள்ளியும் விரதம்!
மரக்கறிதான் சாப்பிடணும்,
சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி கொஞ்சூண்டு தேங்காய்எண்ணெய் விட்டு வதக்கி வெந்தயம் தூவி புளிக்கரைசலைவும் கொச்சிக்காத்தூளுடன்   உப்பும் போட்டு ஒரு கிண்டு கிண்டி விடுவா.அம்மாடியோவ்.. இன்னும் கொஞ்சம் சோறு தா என நாலு தட்டு சோறு தின்னுவோம் வெந்தயக்குழம்பு அன்னிக்கு முழுக்க கையில் வாசனையோட இருக்கும்.
அப்படியே வேலி ஓரத்தில் நிற்கும் தூதுவளையில் இரண்டு கைப்பிடி பிடுங்கி சோத்துப்பானையில் கஞ்சி வடிச்சி அந்த சூடு சோத்துக்கு மேல் வாழையிலையை போட்டு அதுக்கு மேல் தூதுவளையையும் பச்சைமிளகாய் நாலையும் வைச்சு மூடி வைச்சிருவா. எரியும் விறகை அணைச்சி தணலில் வேக விட்டால் பத்து நிமிடத்தில் தூதுவளையை பச்சைமிளகாயுடன் சின்ன வெங்காயம் ஒரு பிடி தேங்காப்பூ வைச்சி அம்மியில் அரைச்செடுத்தால்....சுடச்சுட சோறும் தூதுவளை பச்சடியுமாய் அமர்க்களம் தான்.
அம்மம்மா கைச்சமையல் ஒருவிதம் என்றால் அம்மா சமையல் இன்னொரு விதம். எதை செய்தாலும் அன்பையும் அக்கறையையும் அள்ளி சமைப்பார்கள் என்பதனால் ருசியும் தனி.
சின்ன வெங்காயம் சின்ன சீரகம் தாளிச்சு தேங்காய்ப்பூ போட்டு அரைச்சி எடுக்கும் சட்னியும் தோசையும் எங்கம்மா சுட்டால் ஊருக்கே வாசனைவரும். அப்படி ஒரு ருசி எங்கேயும் சாப்பிட கிடைக்கவே இல்லை.
அப்பல்லாம் தூதுவளை பச்சடி,, கறிவேப்பிலை துளிரில் பச்சடி, முருங்கைக்கீரை துளிர் பச்சடி குறிஞ்சா கீரை சுண்டல், கானாந்தி முல்லை லெச்சகட்டை கீரைக்குள் புளி மாங்காயும் கீரி மீனும் போட்டு சொதி என எளிய உணவு தான், வீட்டு ஓரத்தில் வேலியில் வளரும் கீரைகளை கொண்டே சமைப்பார்கள்.
கெழுத்தி மீன் புளிமாங்காய் உப்பவியல்
கூனியும் புளிமாங்காயும் கடையல்
சள்ளல் மீன் மிளகு தண்ணீர்
ஆத்தில் பிடிக்கும் செல்வமீன் உப்பவியலோ பொரியலோ பசித்து ரசித்து ருசித்து  வசித்தோம். 

16 வயதில் சுவிஸுக்கு வந்து 13 வருடம் கழிச்சு 29வயதில் ஊருக்கு போய் ஊர் நினைவில் ஊர்ச்சாப்பாட்டை தேடினேன்.
எல்லாமே தொலைந்து போயிருந்தது. தொலைந்து தொலைவாய் நானும் போயிருந்தேன்.
எங்கே தேடியும் கிடைக்காத இனி என்றும் கிடைக்கவே கிடைக்காத பொக்கிசநினைவுகள் இனிமையானவை

23 ஜூன் 2017

கறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி?

பேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில்  பொட்டுச்சிரட்டை  படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச்சுவது எப்படி என இணையத்தில் தேடினால் சரியாக தரவுகள் இல்லை என்பதனால் நாமாவது நமக்குத்தெரிந்ததை எழுதிப்பதிவாக்கி விடலாம்  என நினைத்து பொட்டுக்காய்ச்ச ஆரம்பித்து விட்டேன். 

புகைப்படம் நன்றி இணுவையூர் மயூரன் 

சிறுவயதில் எங்கள் வீட்டில்  அம்மா தேங்காய்ச்சிரட்டைகளில் பொட்டுக்காய்ச்சி ஊற்றி காயவைத்தும் வைப்பார். வருடக்கணக்கில் அந்த பொட்டுச்சிரட்டை பயன் படும். 

ஸ்டிக்கர் பொட்டு அதிகம் பாவனைக்கு வராத காலங்களிலும்  தினம் பள்ளி செல்லும் போது  சிரட்டையில் இருக்கும் மையை கொஞ்சம் தண்ணீர் தெளித்து தடவினால் கறுப்பு மையாக வரும். அதை  நெருப்புக்குச்சியின் குண்டு முனைப்பக்கமாக  ஒட்டி  நெற்றியில் நடுவில் மேலிருந்து கீழாக  ⧫  கோடு போட்டு கீழே அதே குச்சியின் முனை அளவு ஒரு டொட் வைப்போம். 

                                     
அதிலும் முக்கியமாக சின்னக்குழந்தைகளுக்கு  ஆணானாலும், பெண்ணானாலும்  மூன்று வயது வரையேனும்  நெற்றியில் பெரிதாகவும் கன்னத்தில் சிறிதாகவும் ஒரு பொட்டு வைத்து அழகு படுத்தி விடுவார்கள். எங்கள் வீட்டிலும் இதற்காகவே பொட்டுச்சிரட்டை காலியாகாமல் காய்ச்சப்பட்டு நிரப்பப்பட்டு கொண்டிருக்கும். கன்னத்தில் வைக்கும் குட்டி வட்டம் திருஷ்டிக்கானது என்பதும் நம்பிக்கை தான். 

படம் இணையத்திலிருந்து 

ஸ்டிக்கர் பொட்டு எனும் பெயரில் விதவிதமான வடிவங்களிலும்,வர்ணங்களிலும்  பொட்டுக்கள் வந்த பின்னும்  இந்த சிரட்டைப்பொட்டுக்கு மவுசு இருக்கத்தான் செய்தது.. கொஞ்சம் வளர்ந்த பின் சந்துப்போட்டெனும் பெயரில் குட்டி டப்பாவில் சிவப்புக்கலர் பொட்டு வாங்கித்தந்தார் அம்மா. அதை  நெற்றிக்கு வைத்ததை விட கைவிரல்களுக்கு கியூரெக்சாக  பூசியே சீக்கிரம் முடிந்து போகும், விரல்களுக்கு பூசப்பட்ட சாந்துபொட்டும் அடுத்த  ஒரு மணி நேரத்தில் பட்டை பட்டையாக கழண்டு உரிந்து விடும். அப்போதெல்லாம் எங்களுக்கு சிரட்டைப்பொட்டுத்தான் உதவும். 
                                                படம் இணையத்திலிருந்து 
அதே போல்   கைவிரல்கலுக்கு மருதோன்றி இலைகளை தேடி அரைத்து விரலில்  பத்து போட்டுக்கொண்டு விரல் சிவந்து விட்டதா என  போட்ட மருதோன்றி பத்தை  தூக்கி தூக்கி பார்த்து விரல்களை தவிர உள்ளைங்கையிலும்  அதிகம் சிவந்து  அழுகை அழுகையா வர வைக்கும். மருதோன்றி  இலைகளை  அம்மியில் அரைத்தால் அதற்கும் அடி விழும், பயந்து பயந்து ஒழித்து மறைத்து அரைத்து  விரலில் ஒட்டிக்கொண்டு அதையும் மறைந்து விடலாம் என நம்பிய  காலங்கள் அவை.  

அரிசிக்குறுனையில் தான் அப்போதெல்லாம்   பொட்டுக்காய்ச்சுவார்கள், இப்போது சவ்வரியிலும் காய்ச்சுகின்றார்கள். அரிசிக்குறுணையை விட சவ்வரிசி விலை அதிகம் என்பதனால் பெரும்பாலும் அரிசிக்குறுணை தான் பொட்டுக்காய்ச்ச பயன் படும். வசதி இருப்போர் சவ்வரிசியிலும் காய்ச்சலாம்.சவ்வரிசிப்பொட்டு சற்று அதிக பசைத்தன்மையோடிருக்கும்.

பொட்டுக்காய்ச்சுவது எப்படி?

ஒரு கைப்பிடி சவ்வ்ரிசி அல்லது அரிசிக்குறுணையை  மண் சட்டியில் (மண் சட்டி கிடைக்காவிட்டால் வாணலியில் காய்ச்சலாம்.)   போட்டு அடுப்பை பற்ற வைத்து நிதானமாக மிதமான சூட்டில் வறுக்கும் போது குறுணை  முதலில் வறுபட்டு   நிறம் மாறி  தொடர்ந்து வறுக்க கறுப்புக்கலராகி நல்ல மைக்கறுப்பாகும் போது  அப்படியே திரண்டு   ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும் பதத்தில்  ஒரு கப் தண்ணீரை விட்டு  கொதிக்கும் வரை காய்ச்ச வேண்டும். இதனுடன் சிறிது பர்வ்யூம் சேர்த்தால் . பொட்டு வாசனையாக இருக்கும், செவ்வரத்தம் பூவின் சாறு அல்லது தேங்காய் எண்ணெய் கொஞ்சம் விட்டு காய்ச்சினால் பொட்டு பளபளவென  இருக்கும். நாங்கள்தேங்காய் எண்ணெய்  ஒரு துளி விட்டுக்காய்ச்சுவோம். 

பொட்டுக்காய்ச்ச முன் காய்ச்சிய மையை ஊற்ற  தேங்காய்ச்சிரட்டையை இருபக்கமும் நல்லா வளவளப்பாக  பளீச் என சீவி தயார் செய்து கொள்வது முக்கியம். பொட்டுக்காய்ச்சியதும் அதை சிறு துணியினால் வடிகட்டி எடுத்தால்  சகடுகள் எல்லாம் தனியாகி  திக்காக இருக்கும்   மையை அதற்கென தயாராக இருக்கும் சிரட்டையில்    ஆப்பச்சட்டியில் மா ஊற்றி சுழட்டுவது போல் சிரட்டைக்குள் சுழற்றினால்    சிரட்டையில் பரவலாக ஒட்டும். எனினும் சிறிது நேரத்தில் கீழே வடிந்து நடுவில் சேரும். கவலை வேண்டாம். அப்படியே ஆற விட வேண்டும்.. பொட்டுக்காய்ச்சி ஆறவைத்து பதப்படுத்தும் பணி ஒரு நாளில் முடியாது என்பதை புரிந்து  பொறுமையாக 
காய்ச்சிய மையை  சிரட்டையில் ஊற்றி சுழட்டி  ஒரிடத்தில் அசைக்காமல் காய விட வேண்டும். இரண்டாம் மூன்றாம் நாளில்     மை சிரட்டையின் நடுவில்  தேங்கி  மேலே  பாலாடைபோல் படர்ந்து இருக்கும் அதை உடைத்து மீண்டும்   சில தடவை  சிரட்டைக்குள் பரவலாக படும்படி சுத்தி  காய வைக்க வேண்டும். இப்படி முழு மையும்,  சிரட்டையில் பரவலாக சம நிலைக்கு வரும் வரை  சிரட்டையை சுழற்றி காய விட்டால்  ஒரு வாரத்தில் மை இறுகி பொட்டுப்பதத்தில் வந்து விடும். 

அதில் ஒரு துளி நீர் விட்டு குழைந்தால் பொட்டு தயார். கடைகளில் வாங்கிப்பயன் படுத்தும் பொட்டுக்களில் இரசாயனங்களை சேர்த்து தோலுக்கு ஒவ்வாமை வரலாம். ஆனால் வீட்டில் இவ்வாறு காய்ச்சி பதப்படுத்தி பயன் படுத்தினால் வருடக்கணக்கில் அந்த பொட்டுச்சிரட்டை  குறைந்த செலவில் ஆரோக்கியமானதாகவும் நீண்டகால பயனுடனும் இருக்கும், 

19 ஜூன் 2017

சட்டியுடன் ஒட்டி உறவாடும் தோசையை பிரிப்பது எப்படி?

டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
தோசை வார்க்கும் சட்டிகளில் பரோட்டா, சப்பாத்தி, போன்றவைகளும் எண்ணெய் சேர்த்த பொரியல்வகைகளும் செய்தால் சட்டியிலிருந்து தோசை கிளம்பாமல் ஒட்டிக்கொண்டு அடம்பிடிக்கும், இரும்புச்சட்டியிலோ, நான்ஸ்டிக் சட்டியிலோ தோசை வார்க்க முன் சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதன் மேல் சமையல் உப்பை தூவி கோல்ட் கலராகும் வரை வறுத்து கொட்டி விட்டு சட்டியை கழுவி அல்லது நன்கு துடைத்து மீண்டும் சூடாக்கி எண்ணெய் தடவி தோசை வார்த்து பாருங்கள் முதல் தோசை அடம் பிடிக்கும், இரண்டாம் தோசை ஜம்ம்ம்முன்னு இலகுவாக மேலே கிளம்பி வரும், புதிய ஆப்பச்சட்டியைப்பழக்கவும், புதிய தோசைக்கல், சட்டிகளை பழக்கவும் இதே முறை தான்.

19 அக்டோபர் 2016

மாலு பான் ரெடி!

மாலுபாண்
**************
இலங்கையில் மிகப்பிரபல்யமான சிற்றுண்டி மாலுபான்.சிங்களமொழியில் மீனுக்கும் சமைத்த கறிக்கும் மாலு என சொல்வார்கள், சமைத்த கறியை வைத்து செய்யும் பன்!

பன்னுக்குள்  மீன், இறைச்சி, முட்டை மரக்கறி என எதைவேண்டுமானாலும் பிரட்டல் கறியாக செய்து  பேக் செய்து எடுப்பதே மாலு பான் எனப்படும், 

பாண் செய்ய தேவையான பொருட்கள்; 
*******************************************
கோதுமை மா 500கிராம். பத்து பன் செய்யலாம் 
ஈஸ்ட்-.20 கிராம்
சீனி 1 தே.கரண்டி
உப்பு ஒரு தே. கரண்டி 
வெதுவெத்ப்பான நீர் 250 மி.ல்லீ
பாண் செய்யும் முறை;
*************************

சீனி ஈஸ்ட்-. வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து வைக்கவும்
கோதுமை மாவை பாத்திரத்தில் போட்டு உப்பு ஈஸ்ட் தண்ணீர் சேர்த்து பிசையவும்.
சப்பாத்தி மாவுக்கு பிசைவது போல் கைகளில் ஒட்டாத பதம் வந்ததும் காற்றுப்போகாமல் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
கறி செய்ய தேவையான பொருட்கள்
*****************************************

மீன் (ப்ரெஷ் மீன் அல்லது ரின்னில் அடைக்கப்பட்டது.)
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
வெங்காயம் பூண்டு, இஞ்சி, சீரகம் கடுகு கறிவேப்பிலை மிளகாய் தூள் சுவைக்கேற்ப
கறிசெய் யும் முறை;
***********************

ப்ரெஷ் மீன் என்றால்:சுத்தம் செய்யப்பட்ட மீன், மஞ்சள் துள், உப்பு சேர்த்து அவித்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு,வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும் கடுகு, சீரகம் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு, வெங்காயம் வதக்கி உருளைக்கிழங்கு உப்பு சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும்.
அடிப்பிடிக்காதபடி அடிக்கடி கிளறி கிழங்கு பாதிவெந்ததும் பிசைந்த மீன், சில்லி பவுடர் அல்லது கறிமிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும்..
கறி நன்றாக அவிந்து சேர்ந்த்தும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
பிசைந்து வைத்த மாவில் சிறிது எடுத்து உள்ளங்கைகளில் வைத்து தட்டையாக தட்டி நடுவில் கறி வைத்து மூடி உருண்டைகளாக்கவும்.
கடைசியாக முட்டை மஞ்சள் கருவை நன்றாக அடித்து பூசி ஒவனில் 200_220 டிகிரி சூட்டில் 25-- 30 நிமிடங்கள் வைத்து பேக் பண்ணி கோல்ட் கலரில் வந்ததும் வெளியே எடுக்கவும்.
*பாண் நன்றாக ஊதி வர ஒவனை அடிக்கடி திறக்கக்கூடாது
**மரக்கறி பான் தேவை என்பவர்கள் மீன் போடாமல் துருவிய கேரட், லீக்ஸ் போட்டு கிழங்குடன் பிரட்டி எடுங்கள். அப்படியே முட்டைக்கு பதில் கொஞ்சம் ஓவனில் வைக்கும் முன் பாலை பூசி விடுங்கள், பான் மெதுமையாக இருக்கும், 
***அவசரமாகவும், இலகுவாகவும்  செய்ய வேண்டும் எனில் முழுக்கிழங்கை அவிய விட்டு தோலுரித்து பிசைந்து வெங்காயம் மசாலாவை தாளித்ததும் அவித்த கிழங்குத்துண்டங்களை போட்டு பிரட்டி எடுக்கலாம்,
****முட்டையை அவித்து கோதுடைத்து  பன்னுக்குள் அப்படியே வைத்தும் பேக் செய்யலாம்.

மாலு பான் ரெடி! ஆனால் யாருக்கும் கிடையாது!அனைத்தினையும் நாங்களே சாப்பிட்டு முடித்து விட்டோமாக்கும்!
******************************************