10 மார்ச் 2023

மரவள்ளிக்கிழங்கு அறுவடை / பாடசாலை தோட்டம்

கிழக்கு மாகாணம், அம்பாறை வளர்த்தாபிட்டி பாடசாலையின் மரவள்ளிக்கிழங்கு அறுவடை.
கடந்த வருடம் நாட்டின் நெருக்கடி நிலையை தொடர்ந்து வீட்டு தோட்டம் / பாடசாலை தோட்ட முன்னெடுப்புக்களில் நாட்டின் பல பகுதிகளிலும் வீட்டு தோட்ட விதைகள், நாற்றுக்கள். தடிகளை வழங்கி இருந்தோம். நடவு செய்யப்பட்டவைகள் பல தடைகளை கடந்து பலனை தந்து கொண்டிருக்கின்றன. பலருடைய வீட்டு தோட்டங்களில் இராசவள்ளிக்கிழங்கு, வற்றாளைகிழங்கு, கொச்சிக்காய், தக்காளி காய்த்து சிறந்த பயனை தருகின்றதாக தகவல் தந்து கொண்டிருக்கின்றார்கள்.
பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், எங்கள் உயிர்ப்பூ மகள்கள் நிலக்சனா, மனோதினிக்கும். மரவள்ளி தடிகளை இலவசமாக தந்துதவிய மட் / களுதாவளை பிரதேசத்தை சேர்ந்த சௌந்தராஜன் ஐயா அவர்களுக்கும் இந்த திட்டங்களுக்குரிய நிதி அனுசரனை, ஆதரவுகளை த்ந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். அம்பாறை வளர்த்தாபிட்டி பாடசாலையின் மரவள்ளிக்கிழங்கு அறுவடை.

பொத்துவில் அக்/ அல்- இஷ்றாக் மகா வித்தியாலயத்தில் பாடசாலை தோட்டம்

#உயிர்ப்பூ பாடசாலை தோட்டம் 07.12.2023 டிசம்பரில் முதல் அறுவடையாக கிடைத்த மரக்கறிகள், மிளகாய்களை புகைப்படங்களில் காணலாம். இப்பாடசாலையில் தோட்டத்தின் மண் வளப்படுத்தும் படியாக சணல் விதைகளும் விதைக்கப்ப்ட்டிருக்கின்றன. மிக சிறப்பான முன்னெடுப்ப்பை தொடர்கின்றார்கள்.
அதிபர் அவர்கள் வாட்சப்பில் கூறிய கருத்தை இணைத்துள்ளேன். பொத்துவில் அக்/ அல்- இஷ்றாக் மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலை தோட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை தோட்டச் செய்கையில் பல மட்ட பாராட்டைப் பெற்றதாக உள்ளது. விவசாய பாடம் ஒரு பிரதான பாடமாக உள்ளது. தோட்டச் செய்கையில் ஆர்வமுள்ள மாணவர்கள் உள்ளனர். இங்கு தோட்டம் சிறப்பாக உள்ளது. ஆயினும் குறைகளுமுள்ளது.அதிலும் பயிர் பாதுகாப்பு மிகக் கடினமானதாக உள்ளது. குரங்குகள் அட்டகாசம் மிக அதிகம். இப்பாதுகாப்பு ஏற்பாட்டை செய்வதில் பாடசாலை நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்கின்றது. இந்நிலையில் எமது பாடசாலைக்கு சென்ற 2022.11.30ஆம் திகதி கள விஜயம் உயிர்ப்பூ நிறுவன உறுப்பினர்கள் 03கொண்ட குழு மேற்கொண்டது. இதன் போது இத்தோட்ட மேம்பாட்டிற்காக உபகரணங்கள், மண் வளத்தைப் பேண சணல் விதைகள் வழங்கி வைக்கப்பட்டது. இதற்காக என்னுடையதும் பாடசாலை சார்பாமதுமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது தோட்டம் அறுவடைக்காக காத்திருக்கின்றது. இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் தினங்களில் இந்நிகழ்வு இடம் பெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் எனக்கான பயிர் காப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமானால் இன்னும் வினைத்திறனுடன் இத்தோட்டத்தினை மேற்கொள்ள முடியும் என்பதையும் இதனை உயிர்ப்பூ நிறுவனத்தினூடாக எதிர்பார்த்துள்ளேன் என்பதையும் கண்ணியத்தோடு தெரியப்படுத்துகிறேன். நன்றி. பொத்துவில் அக்/ அல்- இஷ்றாக் மகா வித்தியாலயத்தில் பாடசாலை தோட்டம்
#பாடசாலை_தோட்டம் #ஆல்ப்ஸ்_தென்றல்_நிஷா #உயிர்ப்பூ 26.02.2023

பாடசாலைத்தோட்டத்தில் பச்சை மிளகாய் பயிர்செய்கை

புகைப்படத்தில் இருக்கும் பச்சை மிளகாய், இரத்தின புரி காவத்தை தமிழ் பாடசாலைதோட்டத்தில் இயற்கை முறை பயிர் செய்கை. ( செத்தல் மிளகாய் )காய்ந்த மிளகாய் விதைகளை தூவி நாற்று உருவாக்கிய ஒரு தொட்டிச்செடியிலிருந்து விளைந்தவைகள்.தக்காளிகளும் தற்பொழுது காய்த்திருக்கின்றன. பாடசாலை தோட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதை குறித்தும் இனி கவனம் கொள்ள வேண்டும். ( வேலி இல்லாத பாடசாலை தோட்டம் என்பதனால் சுமார் 200 தொட்டிச்செடிகளிலிருந்து பல செடிகளை பாடசாலை விடுமுறை காலத்தில் களவெடுத்து சென்றிருக்கின்றார்கள். ) எதிர் வரும் காலங்களில் ஒவ்வொருவரும் தமது சிறிய தற்சார்பு வீட்டு தோட்டம் ஒன்றை உருவாக்கிகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்வோம். உணர்த்துவோம். பச்சைமிளகாய்

19 ஜூலை 2022

கல்லாற்றின் கூனி கடையலும் சுடு சோறும்

கல்லாற்றின் கூனி கடையலும் சுடு சோறும் ( முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன் ) நிஷாவும் மட்டக்களப்பின் சிறப்பு கல்லாற்றின் ஆற்றங்கரை பக்கமாக களுதாவளை - மண்டூர் பக்கமிருந்து தோணியில் ( வள்ளம் ) வரும் பெண்கள் இருவர் குழுவாக இடுப்பளவு நீரில் இறங்கி நின்று சல்லடை போல் இருக்கும் சேலையின் இருபக்கமும் பிடித்து கொள்வார்கள். அதை தண்ணீரில் மேல் தாலாட்டுவது போல் முன்னும் பின்னும் நீருக்குள் ஆட்டி ஆட்டி அசைக்கும் போது கூனி அந்த துணிக்குள் சேரும். இதனை "கூனி வடித்தல்" என்னும் சிறப்பு பெயர் கொண்டும் அழைப்பர். அதே பெண்களே கல்லாறு சந்தைக்கு கொண்டு விற்பார்கள். இறாலின் இளநிலை பருவமான கூனி இராசவள்ளி கூழ் போல் நிறம் இருக்கும். பூவரசு இலைக்குள் அடங்கும் ஒரு பங்கு. 🌺🌺 ஐம்பது சதம் .😂 கூனி உடன் ஆற்றின் மண் சிப்பி இருக்கும். அதை அரிச்சி அரிச்சி கழுவி எடுக்கணும்.
கூனி கடையல் பச்ச மிளகாய் அவிச்சி கடைஞ்சு நல்ல புளி மாங்காயும் உப்பும் மஞ்சளும் சேர்த்து சுத்தமாக்கிய கூனி சேர்த்து அளவான தண்ணி விட்டு மூடி விட்டால் பத்து நிமிடத்தில் அவிந்து விடும். மீண்டும் மாங்காயை அகப்பையால் கடையும் போது கூனி மாங்காய் கொச்சிக்காய் எல்லாம் சேர்ந்து செம்மமையா இருக்கும். அதே போல் கூனி இங்கே சுவிஸில் தாய்லாந்து கடையில் வாங்கி சமைத்து இருக்கின்றோம். ஆனால் போத்தலில் அடைக்க பதப்படுத்தும் போது அதன் இயற்கையான சுவை மிஸ்ஸிங்

 மட்டக்களப்பில் இருந்து எமக்கு வரும் பொருட்களில் 
 * கல்லாற்று கூனி
 * திராய் வற்றல் 
 * குறிஞ்சா கீரை வற்றல் 
 * பொட்டியான் கருவாடு கட்டாயம் இருக்கும்

 கெளுத்தி மீன் 
சள்ளல் மீன்
 செல்வன் மீன்
 குஞ்சி மீன் எல்லாம் விசேஷம்🤣

 ஆறு, குளங்களில் மீன், இறால் பிடித்தல், மீன்களை வாங்கி விற்றல், கூனி, ஐயாமாசி வடித்தல் போன்ற ஆபத்தான தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்களை கண்டு வளர்ந்தனால் உழைத்து பிழைத்தலில் அருமை எமக்கும் உணர்த்தப்பட்டிருந்தது. எங்கள் ஊரில் அக்காலங்களில் பெண் தொழில் முனைவோர்கள் அதிகமாக இருந்தனர். வீட்டு ஆண்கள் வேலைக்கு போனாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் பல தொழில்களை செய்து சிறு வருமானம் பெறும்படி இருந்தது. முக்கியமாக பத்தாம் வகுப்பில் பரிட்சை எழுதி விட்டு காத்திருக்கும் காலங்களில் பெண்களுக்கான தொழில் பயிற்சிகளை ஆரம்பித்து விடுவார்கள். 

 இதை குறித்து அடுத்த பதிவில் தொடர்ந்து எழுதுகின்றேன்.

 வேலையத்தவர்கள் மனசில் தான் ஆயிரம் குத்தல்களும் குடைச்ச்ல்களும் உருவாகும் என்பதை புரிந்து கொண்டால் இக்காலத்தில் என்ன நடக்குது என்பதை இதை வாசிப்பவர்கள் சிந்த்னைக்கே விடுவோம். போவோமா ஊர்கோலம் இந்த பூலோகம் எங்கெங்கும்