06 செப்டம்பர் 2018

என்னை செதுக்கிய ஆசிரியர்கள்

ஆசான்கள் என்பவர்கள் வாழ்வியல் வழி காட்டிகள் எனில் எனக்கான என் ஆசிரியர்களும் நல் வழி காட்டிகள் தான்!
இன்று என் ஹோட்டலில் வேலை செய்யும் தம்பி கேட்டார்.
அக்கா நீங்கள் எங்கே எதுவரை தமிழில் படித்தீர்கள்?
நான் ஏன் அப்படி கேட்கின்றாயப்பா என கேட்டேன்.
நிரம்ப விடயம் அறிந்திருக்கின்றீர்கள். நன்கு தமிழ் பேசுகின்றீர்கள். எல்லா விடயங்களையும் விவாதிக்கின்றீர்கள், கெட்டிக்காரியாக இருக்கின்றீர்கள் அக்கா அதனால் கேட்டேன் என்றான்.
இப்பதிவை அவனும் படித்து கொண்டிருப்பான்.
நான் ஏதேனும் சாதித்தேன் எனில் அது எனக்கு கிடைத்த் ஆசிரியர்களின் நற்கொடையால் தான். சிற்பியின் கை களி மண் போல என்னை செதுக்கியவர்கள் என் ஆசிரியர்களே.
காலத்தில் ஓட்டத்தில் எனக்கு கற்பித்த நல்லாசிரியர்கள் பலரின் பெயர் மறந்து விட்டாலும் மறக்க முடியாத நினைவோடு ஒட்டி இருப்பவர்களில் மிக முக்கியமானவர் அக்காலத்தில் கிழக்கு மாகாண வை,எம்,சீ,ஏ தலைவராகவும் எங்கள் மகாவித்தியாலயத்திற்கு அதிபராகவும் சமூகக்கல்வி மற்றும் ஆங்கில ஆசிரியராகவும் இருந்த ஜெயானந்தம் சார் அவர்கள்!
இவர் எனக்கு காட்டிய அக்கறை ஊக்கம் குறித்து நிரம்ப நிரம்ப பேசலாம்! மிக அருமையான, அன்பான ஆசிரியர். என் ஆசியர்களில் நான் நேசிக்கும் ஆசிரியர் இவர்.
இவர் மகளும் என்னுடனிணைந்த ஒரே வகுப்பில் படித்தோம்! மற்றவர்கள் விடயத்தில் எப்படி இருந்தாலும் என்னிடம் ரெம்ப அக்கறையாய் அன்பாய் இருந்தார்! கண்டிப்பு காட்டிய அதே நேரம் திறமை கண்டு ஊக்கம் தந்தார்!
பள்ளிப்பாடம் சம்பந்தமான விடயம் ஏதேனும் செய்யாமல் போனால் அதற்கான காரணம் என்ன என கேட்டு தீர்த்து வைப்பார்! உடனே அடிக்க மாட்டார். அக்காலத்தில் எங்கள் ஏழ்மை நிலை புரிந்து கல்வியை கற்க வழி காட்டினார்.
ஆங்கிலமும், சமூகக்கல்வியும் பல மாணவர்களுக்கும் வேம்பாய் கசக்கும் போது எனக்கு இவரிடம் கற்றதாலோ என்னமோ இந்த பாடங்கள் ரெம்ப பிடிக்கும். சமூகக்கல்வியில் எப்போதும் முதல் மாணவியாய் வர உறுதுணையாய் இருந்தது இவர் பாராட்டுகள் தான்!
ஜெயானந்தம் சார் அக்காலத்தில் பள்ளியின் அதிபராகவும், வை.எம்,சீ, ஏ வின் நிர்வாக தலைவராகவும் இருந்தார். இவர் காலத்தில் பள்ளி நிரமப் முன்னேற்றங்களை கண்டது. ஆனாலும் இவர் செய்தவைகளை மறுதலித்தோர் தான் அனேகம்.
எனக்கு என்றும் மறவா நல் ஆசிரியர் ஜெயானந்தம் சார் அவர்கள்.
2.கந்தசாமி மாஸ்டர்..இன்றைக்கு பிரின்சிபலாய் இருக்கின்றார். எட்டாம் ஒன்பதாம் வகுப்பில் சமூகக்கல்வி சாராக வந்து இரண்டு மாடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததனால் சோர்ந்திருந்த என்னை தூக்கி கோபுர் உச்சியில் வைத்தவர். இவருடைய பாராட்டுக்கள் எனக்கான உந்து சக்தியை தந்தது. என்னுடைய ஒவ்வொரு நோட்ஸை திருத்தும் போதும் என் வகுப்பு மாணவர்களை நோக்கி சொல்வார். இப்படி படிக்கணும், இப்படி செய்யணும் என சொல்லி என்னை உதாரணமாக்கி பாராட்டுவதுடன் பள்ளி அசெம்பிளியிலும் இப்படி சொல்லி பாராட்டுவார். .
அதே போல் என் தங்கை மார்களிடம் அக்கா போல் படித்து ஸ்கூலுக்கு பெயர் எடுத்து தரணும் என சொன்னதும் கடந்த சில வருடம் முன்னால் தம்பி திருமணத்துக்காக நீண்ட இடைவேளையின் பின் கிட்டத்தட்ட 20 வருடங்களின் பின் சொந்த ஊருக்கு போன போதும் என்னை மறக்காது இவள் என்மாணவி என தானாகவே தேடி வந்து தன்னை அறிமுகப்படுத்தி இவள் படித்த படிப்புக்கு ஊரில் படிப்பை தொடர்ந்திருந்தால் ஸ்கூலுக்கும் ஊருக்கும் பெருமை தேடித்தந்து எங்கோ போயிப்பாள் என்றார். நன்றி சார்!
என்றைக்கும் மறக்க முடியாத வார்த்தையை அன்று பலர் முன்னிலையில் சொன்னீர்கள்.எனக்கான பொக்கிஷமாக உங்கள் வார்த்தைகளே இருக்கின்றது.
கந்தசாமி மாஸ்டரும் இந்தப்பதிவை படிக்கலாம் என நினைக்கின்றேன்.
3.குமார் மாஸடர். கணக்கு டீயூசன் சொல்லித்தந்தவர்.இவரால் என் தோழிகளின் அம்மா மாரே பொறாமை பட்டார்கள் அக்காலத்தில். எனக்கு பாடம் சொல்லித்தர அவசியமே இல்லாமல் புத்தகத்தில் இருக்கும் உதாரணங்களை வைத்தே பட்டென புரிந்து கணக்கு போடுவேன் என பாராட்டி பாராட்டியே ஏத்தி விட்டு கடைசியில் எனக்கு தெரியாது என எதையும் சொல்லகூடாது எனும் நிலைக்கு கொண்டு வரும் படி ஆராயும் மனபாங்கை கொண்டு வந்தவர்! இவரும் நான் ஊருக்கு சென்றிருந்த போது கந்தசாமி மாஸ்ட்ருடன் இணைந்து என் பள்ளிக்காலங்களை நினைவு படுத்தினார்கள். எனக்கு கற்பிப்பது தனக்கு இலகுவாக இருந்ததாக சொன்னதை கேட்டபோது நெகிழ்ந்தேன்.
நாங்கள் எங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை மறக்காதிருப்பது சாதாரணம், ஆனால் நமக்கு கற்பித்த ஆசிரியர்கள் நம்மை மறக்காது பல வருடங்கள் கடந்தும் நினைவில் வைத்திருப்பது நமக்கான கீரிடம் அல்லவா?
4.விஜயா டீச்சர் ஆறாம், ஏழாம் வகுப்பில் தமிழ் கற்பித்த ஆசிரியை! எனக்குள் இலக்கிய இலக்கண ஆர்வமும் நான் பேசும் தமிழும் வாசிக்கும் கவிதைக்கும் அடிப்படை வித்தானவர்! தமிழ் பாடத்தில் புத்தகத்தில் இருப்பதை ஒருவர் சத்தமாக படிக்க அவர் அது குறித்து விளக்கம் சொல்வார்!
அவர் வகுப்பெடுக்கும் போதெல்லாம் என்னை தான் பந்திகள் வாசிக்க சொல்வார். அதற்கு சொல்லும் காரணம்! வசனங்களை தெளிவாக அனைவருக்கும் புரிவது போல் நிறுத்தி வாசிப்பேன் என்பார். பாராட்டுவார். ஊர் விட்டு வந்தும் தமிழ் ஆர்வத்தை விதைத்தவர் என் தமிழாசிரியை எனில் மிகை இல்லை!
5.மாதினி, மாலா டீச்சர்! விஞ்ஞான ஆரிசியை என்பதை விட சகோதரிகளான இவர்களை அக்கா என அழைத்து பின்னர் டீச்சர் என அழைத்தேன். ஸ்கூல் விட்டு வந்தால் மாலை நேரம் முழுதும் கணக்கும் , விஞ்ஞானமும் சொல்லி தரும் டீச்சர்கள் இவர்கள்!
6.கோகிலா டீச்சர்.ஒரு வருடம் தமிழ் ஆசிரியையாய் கற்பித்தார்.இவர் எனக்கு ஆசிரியை ஆக முன் கோகிலா ஆண்ட்டி என அழைத்து பின் ஆசிரியரானாலும் எனக்கு கற்பிக்கும் முன் அவள் எடுக்கும் பாடங்களுக்கு பேப்பர் திருத்து பணிக்கு என்னையும் அழைப்பார்.ஆறாம் ஏழாம் வகுப்பில் படிக்கும் போதே ஸ்கூல் பரிட்சை நேரம் பேப்பர் திருத்த என்னை அழைப்பார். அவருடன் இணைந்து திருத்துவேன். எனக்கு ஆசிரியை ஆனபின் . என் கிளாஸ் பரிட்சைபேப்பரெல்லாம் நான் திருத்தி இருக்கின்றேன். அதனால் கிளாஸில் எப்போதும் ஒரு கெத்து இருக்கும்!
பரிட்சை பேப்பர் முடிவு வெளிவர முன்பே எனக்கு எல்லோரின் மாக்ஸும் தெரிந்து இருக்கும். அதனால் வரும் கெத்து அது. ஹாஹா.
7.ஜோன்சன் மாஸ்டர். தடியோட தான் வருவார். இவரிடம் அடிவாங்காத மாணவர்கள் இல்லை. நான் எப்படியோ தப்பி விடுவேன்! ஆனால் ஒரு முறை பாடமெடுக்கும் ஆசிரியர் வராத போது பசங்க சத்தம் போட்டார்கள் என வகுப்பு பொறுப்பாய் இருந்த எனக்கு கையில் ஒரு அடி போட்டார்! 
வலி எனில் பயங்கர வலி! முதலும் கடைசியுமாய் அடி கொடுத்து மறக்க முடியாத ஆசிரியர் பட்டியலில் சேர்ந்து கொண்டார்.

அதன் பின் யார் சத்தம் போட்டாலும் அவர்கள் பெயரை பிளக்போர்டில் எழுதி அதனால் பசங்க கிட்ட ஸ்கூல் முடிந்த பின் அடி வாங்குவது வேற கதை!
அக்காலத்தில் வை,எம் சீ,ஏ யால் நடத்தின வகுப்புக்களும், அதை நடத்திய ஆசிரியைகளும் என் உயர்வின் பின்னால் குறிப்பிடத்தகக் இடம் பெறுவார்கள். தியாகி ஆண்ட்டியின் பெயர் மட்டுமே நினைவில் இருக்கின்றது. இலவச மாலை வகுப்பெனினும் பயன் தரும் பல விடயங்கள் கற்க நிர்வாக மனேஜ்மெண்ட் அறிந்திட உதவியாக இருந்தது அந்த இடம்!
இன்னும் பல டீச்சர் இருக்கின்றார்கள். எல்லோர் பெயரும் நினைவில் இல்லை.
நான் சுவிஸ் வந்த பின் எனக்கு ஜெர்மன் எழுத்துக்களை அரிச்சுவடியிலிருந்து கற்பித்து இலங்கையில் நான் படிக்கும் காலத்தில் எப்படி ஆசிரியர்களால் முன் நிறுத்தப்படுவேனோ அப்படியே இங்கும் வகுப்புக்களில் என் நோட்ஸ்களை ஏனைய மாணவர்களுக்கு உதாரணமாக எடுத்து கொடுக்கும் படி புது மொழியிலும் பள்ளிக்காலத்தில் ஆர்வத்தை தந்த ஆசிரியர்களாக ஜேர்மன் மொழியை கற்பித்த ஆசிரிவர்கள் இருந்தார்கள். தொழிற்கல்வி நேரங்களிலும், பயிற்சி வகுப்புக்களிலும் அருமையாக வழி காட்டினார்கள்.
கம்யூட்டர் பயன் படுத்த ஆரம்பித்த காலத்தில் தமிழ் தட்டச்சிட தெரியாது தடுமாறி வேறு தளங்களில் இருக்கும் தட்டச்சு பலகையில் தட்டச்சிட்டு முத்தமிழ் மன்றத்தில் பதிவேன். அதனால் நிரம்ப எழுத்து பிழைகளும், பதிவுகளில் தாமதமும் இருக்கும். அதை புரிந்து தமிழ் தட்டச்சிட எனக்கு வழி காட்டி இணைய வசதிகளை எப்படி பாதுகாப்பாக பயன் படுத்தலாம் என கற்பித்த 
Sudhakar Subramanian அண்ணாவும் எனக்கு ஆசிரியரானார்.

எனக்காக வாழ்க்கை பாடத்தை போதிக்கும் என் மகன் கப்ரியேலும் எனக்கு ஆசிரியரே.. நான் சோர்ந்து போகும் நேரங்களில் நச்சென அவன் சொல்லும் ஆலோசனைகள் தான் எனக்காக் விடிவிளக்காக இருந்திருக்கின்றது.
எங்களை பொய் சொல்ல கூடாது என சொல்லி தந்து விட்டு நீங்கள் மட்டும் ஏன் பொய் சொன்னீர்கள் என சில சந்தர்ப்பங்களில் தடுமாறி நிற்கும் நேரம் என்னை அதட்டி உருட்டும் என் மகளும் எனக்கு ஆசிரியையே.
நான் இன்றும் புதியவைகளை தேடிக்கற்கும் மாணவியாக்வே இருக்கின்றேன். தினம் தினம் எனக்காக புதிய பாடங்களை நான் காண்போர் கற்பித்துகொண்டே இருக்கின்றார்கள்.
என் வாழ்க்கையில் ஒவ்வொரு கால கட்டங்களிலும் ஒவ்வொருவர் எனக்கு வாழ்க்கை பாடத்தை போதிப்பவர்களாகவே இருந்திருக்கின்றார்கள்.
அனைவருமே எனக்கு கல்விக்கண் திறந்தவர்களாய் தான் இருந்தார்கள்!
என் உயர்வு எதனால் என்றால் எனக்கு கிடைத்த ஆசிரியர்களால் என்பேன்.
ஆசிரியர்கள் நல்லதாய் அமைந்தால் படிக்கும் பாடங்களும் இனிப்பாய் ருசிக்கும் என்பதற்கு நானும் என் ஆசிரியர்களுமே உதாரணம் தான்!
படிப்பை நேசித்தேன். டாக்டராக வேண்டும் எனும் கனவுடன் படிப்பை தொடர்ந்திருந்தால் நனவாகி இருக்கும் என்பது நிச்சயம்.
விபத்தும் அதை தொடர்ந்த வலிகளும், வெளி நாட்டு வாழ்க்கையும் எனக்கு இன்று பணத்தை,மதிப்பை, உயர்வை தந்திருந்தாலும் உள் மனதில் எதையோ இழந்தது போன்ற ஏக்கம் தொடரத்தான் செய்கின்றது!
படிக்கும் நேரம் படிப்பும் அதன் அவசியமும் புரியாது நாம் விளையாட்டாய் இருக்கின்றோம்! ஆனால் என்ன தான் பணம் குவிந்தாலும் படிப்பும் அதனால் வரும் கனமும் எதனுடனும் ஒப்பிட இயலாதது!
இந்த நாளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை காணிக்கை ஆக்குகின்றேன்.


20 ஜூன் 2018

தினகரனும் தீர்க்கதரிசனமும்!

எரே 14:14. தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்ல வேண்டியது என்னவென்றால் .......!
ஒன்றும் தரிசியாதிருந்தும் தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!
நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும் போது.... பொய்க் குறியைச் சொல்லுகிறீர்கள். ஆகையால் நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார். எசே 13:2,3,7.
எரே 14:14. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பியதுமில்லை அவர்களுக்கு கற்பித்ததுமில்லை! அவர்களோடே பேசினதுமில்லை..... அவர்கள் தங்கள் இருதயத்தின் கபடத்தை உங்களுக்கு தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்.
மனதில் தோன்றுகின்றதை கூறும் இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று கர்த்தர் நம்மை எச்சரிக்கிறார்.
நியாயத்தீர்ப்பு நாளில் 
ஆண்டவரே! ஆண்டவரே! 
உம்முடைய (இயேசு) என்னும் நாமத்தில்தீர்க்கதரிசனம் உரைத்தோமல்லவா ? பிசாசுகளை துரத்தினோம் அல்லவா? அற்புதங்களை செய்தோம் அல்லவா? என்பார்கள்
ஆனால் இயேசுவோ இவர்களைப் பார்த்து அக்கிரம செய்கைக்காரர்களே என்னைவிட்டு அகன்று போங்கள், உங்களை நான் ஒருகாலும் அறியேன் என்று அவர்களுக்கு சொல்லுவேன் என்கின்றார்.
மத் 7:22,23.

2 பேதுரு 2:1-3 
1.கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2.அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
3.பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதல்ல தேவனுடைய வசனம் உங்களுக்கு சொல்வது எதுவென மட்டும் நிதானித்து கொள்ளுங்கள்.
தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம், அன்பு ஒருக்காலும் ஒழியாது. என 1 கொரிந்தியர் 13 ல் சொல்லப்படுவது போல் அழியாமல் நிலைப்பது அன்பும், நம் மனதில் நான் உருவக்குத்திக்கொள்ளும் தேவ வசனமும் தான்.

உங்கள் சொந்த புத்தியினாலும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கும் ஞானத்தினாலும் வசனம் சொல்வதை ஆராய்ந்து, நிதானித்து , தியானித்து சரியானதை பற்றிக்கொள்ளுங்கள்.
ஆமேன்

ஏமாளிகளாய் நாம் இருக்கும் வரை நம்மை ஏய்ப்போரும் ஏய்த்துகொண்டிருப்பார்கள்.

மக்களுக்காக மக்களே குரல் கொடுத்தால் தான் இனி அவர்களுக்கான விடுதலையும், விடிவும் என புரியவைத்து கொண்டிருக்கின்றது காலம்.
இனிவரும் காலங்களில் எவரையும் தனித்து தலைமைப்படுத்தாமல், மக்களை ஏமாந்த கோணங்கிகளாக்கி தலைமேல் மிளகாய் அரைக்க நினைப்போரை இனம் கண்டு ஒதுக்குவது, ஒதுங்குவதும் தான் நம்மை மீட்சிப்படுத்தும்.
நம்மை கோமாளிகளாக்கி, மூளைச்சலவை செய்து, என்ன சொன்னாலும் தமிழன் நம்புவான்,தமிழனே இளிச்சவாயன் தான் என நம்மை ஏய்க்கும் நமக்குள் இருக்கும் ஓநாய்களை முதல் நாம் இனம் கண்டு கொள்(ல்) வோம்.
அன்று மக்கள் கல்வியறிவில் குறைந்தோராய் இருந்ததனால் அவர்களை ஏமாற்றுவது இலகுவாக இருந்தது. இன்றைய நம் சமூகம் கல்வி அறிவில் மேன்மை யடைந்தும் இன்னும் அதே ஏமாளித்தனம் தொடருமானால் நாம் கற்ற கல்வியினால் என்ன பயன்?
யார் சொன்னாலும் எதை சொன்னாலும் நம்புவதை முதலில் நிறுத்துங்கள் தமிழ் மக்களே!
கொஞ்சம் சுய புத்தியாலும், அறிவாலும் ஆராய்ந்துணருங்கள்.இன,மத பேதங்களை விதைத்து உங்கள் மனக்கண்களை குருடாக்கி இருப்போரை இனம் காணுங்கள்
நாம் விடுதலை அடைய வேண்டியது அன்னியனிடமிருந்தல்ல!
நமக்குள் இருக்கும் அறியாமையிலிருந்தும், 
நம்மை ஏய்க்கும் நம் சக தமிழரிடமிருந்தும் 
நாம் முதலில் விடுதலை அடைய வேண்டும்.

தமிழர்கள் முட்டாள்கள் தான் என்பதை புரிந்து, அவர்களை ஏமாற்றி,ஏய்த்து பிழைக்க நினைப்போரின் கபடங்கள் புரியாமல் இருக்கும் வரை நாங்களும் தேசியவாதிகள் தான்.அப்படிப்பட்ட போலிப்பாராட்டுதல்கள் எமக்கு வேண்டாம்.
ஏன்? எதற்கு? எப்படி? என கேள்விகளை கேட்டால் சமூகவிரோதிகள் என முத்திரை குத்தப்படுவோம். ஒதுக்கப்படுவோம்.
யார் என்ன சொன்னாலும் ஏன், எதுக்கு, எப்படி என சிந்திக்காமல் நம்பும் தமிழர்கள் இருக்கும் வரை ஏமாறுவோர் ஏமாறிக்கொண்டே இருப்போம்.

கடந்த வார செய்திகள்.......!
1.இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் பணி புரிந்த இராணுவ அதிகாரியின் மாறுதலை தொடர்ந்த பிரியாவிடை நிகழ்வும், கௌரவப்படுத்தலும் கண்ணீரும் நமக்கு சொல்வது என்ன?
மக்கள் மனங்களை கவரும் படி செயல் பட்ட அவரின் செயல்பாடுகள் எதிரியின் சூழ்ச்சி என சொல்லி மக்களை விமர்சிக்கும் தகுதி எமக்கிருக்கின்றதா?
எங்கள் மக்களை நாங்கள் ஏன் கைவிட்டோம்? பேசியும் ஏசியும் நாங்கள் கண்டவை என்ன?
இதுவரை எதை இலக்கு வைத்து எம் போராட்டம் இருந்தது?
போராட்டத்தின் இலக்கு திசை மாறி விட்டதையும் இழப்புக்கள் நம்மை பூஜ்ஜியத்தில் கொண்டு விட்டிருப்பதையும் புரிந்து கொண்டோமா?
2.மீண்டும் பிரதமர் மோடி...!
பால்.தினகரனின் தீர்க்கதரிசனமும் அதைத்தொடர்ந்த விமர்சனங்களும் .
பைபிள் வசனம் சொல்வதை தவிர ஏனையதையெல்லாம் திரித்துவமாக திரித்துக்கூறுவோரை தேவனின் தூதர்களாக நம்பிக்கொண்டிருக்கும் மக்களே தெளிவு பெறுங்கள். 
வேத வசனம் சொல்வதை ஆராய்ந்து சரியானதை பற்றிக்கொள்ளுங்கள்.

3. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள்,தீவிர வாதிகள் அல்ல. சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு

வழங்கப்பட்ட தீர்ப்பின் சாரம்.
விடுதலைப்புலிகள் சுவிஸ் நாட்டில் சட்டத்தின் படி கிரிமினல்களாக செயல்பட்ட்டார்கள் என்பதை நிருபிக்கும் படி கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானவையாக இல்லை.சுவிஸில் தொடரப்பட்ட வழக்கில் அவர்கள் கிரிமினல் குற்றவாளிகள் இல்லை.
Tamil Tigers sind keine kriminelle Organisation

விடுதலைப்புலிகளின் அமைப்புக்கு உதவுவதற்காக   நிதிமோசடி, வங்கி  மோசடி, ஏய்ப்பு, மிரட்டல்  போன்ற குற்றச்சாட்டுகளுடன் கைது செய்யப்பட்டு  13 நபர்கள் மீது தொடரப்பட்ட குற்றவியல் சட்டம் (Criminal law)  வழக்கில் மூவர் மீது மட்டும் குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டனையும், தண்டப்பணமும் செலுத்த  நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கின்றது. ஏனையோரை  கிரிமினல் குற்றவாளிகள் இல்லை, என விடுதலையாக்கியதுடன் சுவிஸுக்குள் விடுதலைப்புலிகள் கிரிமினல் குற்றவாளிகளாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் போதுமாக வில்லை என தீர்ப்பளித்திருந்தார்கள். 

இந்த தீர்ப்பு பல பத்திரிகைகளில் ஜேர்மன் , பிரேஞ்சு மொழிகளில் விபரமாக பகிரப்பட்டிருந்தும் , தமிழ் மொழி பெயர்ப்புக்களில் 
கிரிமினல்களுக்கும், பயங்கரவாதிகளுக்குமான புரிதலும் சட்ட நடவடிக்கைகளும் எத்தகையது உணராமல் முழுப்பூசணிக்காயை சேற்றில் மறைத்து சுவிஸ் நீதிமன்றம் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் அல்ல என தீர்ப்பளித்து விட்டதாக போலியான மாயையை உருவாக்கி மக்களை ஏமாற்றுவோர் இத்தனை பட்டும் இன்னும் திருந்த வில்லை என உணர வைக்கின்றார்கள்.
செய்திகளை மொழி பெயர்க்கும் போது வார்த்தைகளை மாற்றிப்போடுவது எதிரிகள் நம்மை நோக்கி கேலி செய்ய மட்டுமல்ல நமமை நம்பியவர்கள் நம்பிக்கைக்கு நாமே வைக்கும் வேட்டு எனவும் உணராமல் செயல் படுவோரையும் இனம் காண்போம்.
எது நடந்தாலும் யாருக்கோ தானே என ஒதுங்கிச்செல்லும் மன நிலையிலிருந்து நாம் விடுபட்டு இன்றையை விதை நாளை விருட்சமாகி எம் சந்ததிகளை பாதிக்கும் எனும் புரித்துணர்வை அடையும் நாளே நமக்கான விடியல்களை தரும்.
வீரன் என்பவன் எத்துணை விமர்சனத்துக்கும் உட்படுத்து முடியாதவனாக தன் சொல், செயல் அனைத்திலும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும்.
ஆனால் இங்கே நடப்ப்து என்ன?
யார் சமூகத்துக்கானவர்கள்?
இன்றைய நிலையில் நம் தேவைகள் என்ன? சிந்திப்போம்.
நாம் போலி தேசியம் பேசும் வியாதிகளாக இருக்காமல் சமூகத்தை குறித்து சிந்தித்து செயல்படும் சமூக விரோதிகளாக மாறுவதில் தப்பே இல்லை.

23 டிசம்பர் 2017

பக்தி


பக்தி முத்தி சக்தியே சரணமென்பார்
சித்தி பெறவே சுத்தி வந்தேனென்பார் 
முக்தியைத்தேடி புத்தியைத்தொலைப்பார்
நித்திய வாழ்வே நிரந்தரமென்பார் 
சித்தம் கலக்கிட பித்தனாயலைவார்! 
கொத்திடும் காக்கைக்குணத்தினை மறைப்பார் 
வித்தைகள் காட்டி வியக்கவும் வைப்பார் 
உத்திகள் செய்தே யெம்மை அசைப்பார்
பக்தியின்றியே பக்தன் போலலைவார் 
சித்தன் நானென்றே ஏத்தி வைப்பார் 
எத்தனுக்கெத்தன் உண்டென உணர்ந்தே
பக்தனே நீயுன் புத்தியை தீட்டு! 😍