ஆம் ஒரே வார்த்தையாய் ... பேசாதே! பாராதே! செய்யாதே! இப்படி தே தே என தேவைக்கும் மேலேசொல்லும் போது சொல்லும் நமக்கு நம் சொல் தேனாய் தான் இனிக்கின்றது. அதை நாமே செயல் படுத்தி பார்க்கும் போது தான் அதன் கஷ்ட நஷ்டம் புரிகின்றது...!
ஆனாலும்??
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி .என்பர்.அது எனக்கு இச்சூழலில் நன்கு பொருந்தும் எங்கேயோ எப்படியோ இருந்த நான் இந்தபக்கம் வந்து .. கண்ணை கட்டி காட்டில் விட்டது போல திக்குதெரியாமல்அலையும் படி ஆனதே என முதல் நாள் நொந்தே போனேன்! வலையும் வேண்டாம், மீனும் வேண்டாம் ஆளை விடுங்கப்பா என சம்ஸிடம் சொல்லியும் ஆனது!
ஆனாலும் குமார் விடுவதாயில்லையே! தளம் திறந்ததோடு தன் வேலை முடிந்தது என செல்லாமல் என்னை ஊக்கப்படுத்தி அதை போடுங்க அக்கா இப்படி எழுதுங்க அக்கா என பதிவும் போட வைத்து... அதுக்கு விளம்பரமும் செய்து... இன்னும் கடவுட்,பேனர் தான் பாக்கி...எனும்படிக்கு என்னை பதிய வைக்க தன் சிந்தனை சிறகை விரித்து என் மனசெல்லாம் பரந்து பறக்கும் குமார் இருக்க என் மனதில் தோன்றுவதை பதிவதற்கு பயம் ஏன் எனும் தைரியத்தினையும் தந்து விட்டார்.
தம்பியுடையான் சண்டைக்கஞ்சானாம்.. நானும் அஞ்ச மாட்டேன்பா.. அதான் எங்க சேனைப்படை எனக்கு பாதுகாப்பா தினம் தினம் திட்டி திட்டி, தட்டிக் கொட்டி .. அப்படி செய்யக்கா.. இப்படி செய்யக்கா உன் கூட யாமிருக்க பயமேனக்கா என வழி நடத்துகின்றதே! என் கைவிரலை பிடித்து வழி நடத்தி எழுத வைக்காதது தான் பாக்கி!
நினைத்து பார்க்கின்றேன்.. இத்தனைக்கும் நான் என்ன தவம் செய்தேன்? எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து வாழ்ந்து... இது வரை முகம் பாராமலே... மனம் உணர்ந்து என்னை உயிர்ப்பிக்கும் இவர்கள் அன்புக்கு நான் என்ன செய்து விட்டேன்?அபிப்ராய பேதங்களும் புரிதலின்மையும்.... உடன் பிறந்தோரையேயே விரோதியாக்கும் இக்காலத்தில் நிஷா அக்கா என அழைத்து அன்னையைபோல் பாசம் காட்டி என்னுள் அடங்கி என்னை அடக்கும் அன்பை கொட்டும் இவர்கள் யார்?
சொல்லத்தானே வேண்டும்!
எங்கள் சேனையில் அன்பு மட்டும் தான் பேசும். மதமும்,இனமும் மொழியும் பேசுவது என்ன.. உரசக்கூடச்செய்யாது. எம் அன்பு புரியாதோருக்கு புதிர் தான். புரிந்தோரோ... எம் ஜோதியில் தாமும் ஒருவராகி என்னுள் உயிர்ப்பர்!
ஆம் உயிர்ப்புத்தான்... மனிதம் மறந்த இப்பூவுலகில் மனிதராய் வாழ நாம் ஒவ்வொரு நொடியும் உயிர்க்க வேண்டி இருக்கின்றதே! எனக்கு மட்டும் விதிவிலக்காகுமா?
என்னை சுற்றி ஒரு வட்டம் என்னை உயிர்ப்பிக்க.... இரவும் பகலும் இருபத்தி நான்கு மணி நேரமும் பாதுகாப்பாய் இருக்கின்றார்கள் என்பதே என்னை வானுயரும் உயரத்தில் கொண்டு போய் விட்டிருக்கின்றது என சொல்வேன்..!
நாடோடியாய் புகலிடம் தேடி வந்த நாட்டில். நாலு பேர் பார்த்து ஆச்சரியப்பட நான் ஏதேனும் சாதித்தேன் எனில் அதற்கு முதல் காரணம் நான் கொண்ட இறை நம்பிக்கை எனில் இறையின் வழிகாட்டலாய் என்னை வழி நடத்தியதெல்லாம் என் சுரேஷ் அண்ணா,சுதா அண்ணா,முஸம்மில், சம்ஸ், ஹாசிம்,, குமார், பானு, ஜானி எனும்பெரும்படையணி தரும் உந்து சக்தி தான். இவர்களின் உற்சாகம் தரும் வார்த்தைகள் தான் என்னை இத்தனை நாளும் இயக்கியது என்பேன்.
பூஜ்ஜியமாயிருந்த என்னை... உன்னால் முடியும்மா.. நீ சாதிப்பே என என்னை உயர்த்திய ஒவ்வொருவர் பற்றீயும் அவர்கள் எனக்காக செய்தவை பற்றியும் தான் நான் முதலில் உங்களுடன் பகிரபோகின்றேன்..
நானும் பிறந்தேன், வாழ்ந்தேன், மறைந்தேன் என்றில்லாமல் எதையேனும் செய்தேன் என எவரேனும் சொன்னால் அதன் பின்னால் இறைவனின் கருணையோடு.. என் மேல் நான் கொண்ட நம்பிக்கையோடு ,என்னவர்,என் மகன், மகள் துணை மட்டுமல்ல... என்னை சுற்று பூச்சரமாய் சூழ்ந்து நிற்கும் என் அன்பு பாசமலர்களும் தான் காரணம்..!
எதையும் சொல்தல் எளிது தான்..அதை செய்தல் செந்தணலை கடப்பது போலிருந்தாலும்... என் பாதம் படும் இடமெல்லாம் குளுமையாயிருக்க வேண்டுமே என எனக்காக பாடு படும் என் உடன் பிற்வாமல் என்னுடன் பிறப்பாய் ஆனோருக்கு இந்த வலைப்பூவும் பதிவுகளும் சமர்ப்பணம்!
இப்பட்டியலில் இனிமேல் இதை படிக்கும் நீங்களும் சேரலாம்.
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்பென்னும் நாடாச் சிறப்பு.
