05 ஜனவரி 2016

நான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4

 
கிறிஸ்மஸுக்கு பின்னராய் புது வருடம் வரை  ரெம்ப பிசியாகி விட்டேன்! அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை!

எங்க ஊரில் ஜனவரி ஆறாம் திகதி முடிவதுக்கிடையில் அனைவருக்கும் வாழ்த்துகள் பரிசில்கள் சொல்லி விடலாம் என்பதனால் இதோ உங்களுக்கும் என் அன்பு வாழ்த்துகளை சொல்லி விட்டேன். கடந்ததில் நடந்தவை என பல பதிவுகள் படித்தாலும்  நானும் அவ்வாறு ஒரு பதிவு எழுத வேண்டும் என தோன்றும் போது உங்கள் ஜோதியில் ஐக்கியமாகி விடுவேனாம்!

இந்த நிமிடம் பதிவு ஒன்று போடலாம் என மனதில் உணர்வுகள் தூண்டினாலும்  காரமான, உணர்வுகளை எழுச்சிக்குரியதாக்கும் பதிவு போடாமல் இனிய நினைவுகளை மீட்டுப்பார்க்கும்  என் சிறுவயது நினைவுகள் தொடரையே இவ்வருட முதல் பதிவாய் ஆரம்பிக்கலாம் என தோன்றுகின்றது! புதுவருட வாழ்த்தோடு என் பதிவுகளுக்கும் தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்டு  என்னை உற்சாகப்படுத்தி  ஊக்கம் தரும் அனைத்து அன்புள்ளங்களும் இவ்வருடமும் தொடர்ந்தும் அதே உற்சாகத்தினை தருவீர்கள் எனும் நம்பிக்கையோடு தொடர்கின்றேன்!


எங்கள் வீட்டில் ஐந்து பெண்கள், ஒரு ஆண், அனைவருக்கும் மூத்தவளாய் நான் என்பதால் தங்கை மாருக்கும் தம்பிக்கும் அனைத்து வழியிலும் வழிகாட்டி நான் என சொல்லியே சின்ன வயதிலிருந்து வளர்த்தார்கள். அதனால் அதிகமாய் வெளியில் போகவெல்லாம் விடாமல்  பாடசாலை, டீயூசன் வீடு எனத்தான் என் பொழுதுகள்  போகும். கோயில் செல்லும் போது தங்கையோ தம்பியோ கூட துணையாய் வந்ததாய் நினைவு.

வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவியாய் இருந்தாலும் சின்ன வயதில் மிகவும் பொறுப்புடன் இருந்ததாலும் தானாய் ஏறியதை விட  நானாய் ஏற்ற சுமைகள் அதிகமே...!

அதிருக்க....... சின்ன வயதில் எங்கள் வீட்டு சமையலறைக்கும் கிணற்றடிக்கும் இடையில்  நீண்டதாய் முற்றம்! அது தான் எங்கள் மாலை நேரத்து விளையாட்டு திடல்...!பக்கத்து வீட்டு நண்பர்கள், நண்பிகள் என  ஓரிரு வயது வித்தியாசத்தில் பத்து பதினைந்து பேர் மதிய உணவுக்கு பின் வெயில் சற்று இறங்கியதும் கூடி விடுவோம்.

படம் நன்றி இணையம் 

அதிலும் நாங்கள்   நான்கைந்து தோழியருடன் என் சகோதரிகளையும் இணைத்து எங்கள் வீட்டில் இருந்த லாவுள் மரத்தின் கீழ் கூடுவோம்!

அதே மரத்தில் கயிறு ஊஞ்சல், பலகை ஊஞ்சல் என  ஆளுக்கொரு கிளையில் கட்டி  ஊஞ்சல் ஆடுவதும். மரத்தின் கீழ் உரலை கவிழ்த்தி போட்டு விட்டு மரத்தின் மேலே ஏறி குரங்குகள் போல் தொங்குவதும் தாவுவதும்,இன்னும் மறகக் இயலாத இனிய அனுபவம் தான்.

படம் நன்றி இணையம் 

அந்த லாவுட் மரத்தின் பழம் இனிக்கும் எனில்  பழத்துக்கும் பிஞ்சுக்கும் இடைப்பட்ட பருவம் துவர்ப்பாயும் சுவையாயும் இருக்கும் பால்  ஒட்டும். அந்த பருவத்தில் இருக்கும் காயை  நல்ல புளி மாங்காயோடு  பச்சை மிளகாயும் உப்பும் சேர்த்து உரலில் இட்டு துவையல் போல் இடித்து எடுத்தால்  உப்பும் உறைப்புமாய் அது தான் எங்கள் மாலை நேர டிபன்.
லாவுள் பழம் என நாங்கள் சொல்லும் பழம் இது தான்!

கிணற்றினை ஒட்டி... பரவி விரித்து  கிளைகளோடு வருடம் முழுதும் காயும் பழமுமாய்  அம்மரம்  இருந்ததாகவே என் நினைவு.  எங்கள் பசிக்குசோறாகியதும் அம்மரத்தின் கனிகளே! நீண்ட நெடிய  20 வருடங்களின் பின் 2010 ம் ஆண்டில்  அவ்விடம் சென்று பார்த்த போது மரம் இருந்த இடம் குப்பை மேடாக காட்சி தந்தது மனதுக்கு வேதனையை தரும் ஒன்றாகவே இருக்கின்றது!

அந்த நாட்களில்  மாலை நேர விளையாட்டாக நொண்டியடித்தல், கிட்டிபுள்ளு, ஊஞ்சல் ஆடுதல்,,சிலை போல் நிற்றல், கள்ளன் பொலிஸ் விளையாடுவதும்
மழைக்காலங்களில் வெளியில் சேறும் சக்தியுமாய் இருக்கும் என்பதால் வீட்டின் தாள்வாரத்தில்   அமர்ந்து தாயம் விளையாடுவதும் மறக்க முடியாத நினைவலைகள்.

அக்கா வீட்ட போனேன்
முத்துச்சிப்பி தந்தாள்
கொண்டோடி வந்தேன் 
வழியெல்லாம் பாம்பு
பாம்படிக்கத்தடிக்குப் போனேன் 
தடியெல்லாம் ஊத்தை 
ஊத்தை கழுவ ஆத்துக்கு போனேன் 
ஆறெல்லாம் மீன்
மீ்ன் பிடிக்க வலைக்கு போனேன் 
வலையெல்லாம் ஓட்டை
ஓட்டை தைக்க ஊசிக்கு போனேன் 
ஊசியெல்லாம் வெள்ளி 
வெள்ளியடி வெள்ளி 
வானத்தில் வெள்ளி 
போயிலைக்காம்பை நுள்ளி
போட்டு வாடி வள்ளி!

விளையாடும் போது வார்த்தை மனனமாக தவறில்லாமல் இம்மாதிரி பாடலை பாடி விட்டால் நாம்  கெட்டிக்காரர் தான்.

மருத்துவரிதியாக மனித உடலில்அக்குப்பிரசர் முறையில் அந்தந்த பாகங்களுக்கான ஆற்றல் தரு புள்ளி அங்காங்கே இருந்தாலும் பொதுவாக  அனைத்து பகுதிகளுக்குமான ஆற்றல் தரும் புள்ளிகள் உள்ளங்கைகளிலும், கால்பாதங்களின் நடுவிலும் அமைத்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன!  அப்புள்ளிகளை கண்டு விரல் நுனிகளையும் உள்ளங்கைகளையும் மெதுவாக அழுத்தி விடும் போது  முழு உடலுக்குமான  ஆற்றல்தரும் உந்து சக்தி கிடைப்பதோடு உடல்,உள,அறிவு ரிதியாக  ஆரோக்கியமும் கிடைக்கின்றது. 

அவ்வகையில் அக்கால நண்டூரி நரியூரு எனும்  பாடலுடன் கூடிய விளையாட்டும் இன்னும் பல பாடல்களும் குழந்தைகளுக்கு உடல், உள், அறிவு ரிதியான வளர்ச்சிக்கு உதவிய ஒன்றென்றால் ஆச்சரியப்படுவீர்கள்!

ஆனாலும் அது தான் நிஜம்!

விளையாட்டை  நன்கு கவனித்து பாருங்கள். சின்ன வயதில்’அழும் குழந்தைகளை சிரிக்க வைக்க அவர்கள் கையை நீட்ட சொல்லி விட்டு  கைவிரல்கள் ஐந்தினையும் விரல் நுனிகளை மெதுவாக தொட்டு ஒவ்வொன்றாக மடக்கி இது அம்மாவுக்கு, இது அப்பாவுக்கு ஏன உறவின் அழைப்பையோ,  அல்லது  இது சோறு , இது பருப்பு, இது பொரியல் என உணவுவகைகளில் பெயரையோ சொல்லி  விரல் நுனிகளை பிடித்து மடித்து விடுவார்கள். அதன் பின் மீண்டும் விரல்களை நிமிர்த்தி உள்ளங்கையில்  நமது முழங்கைகளால் பால் கடைவது போல் ஆடைக்கடை, மோடைக்கடை என சொல்லி கடைந்து விட்டு உடனேயே நடுவிரலிலிருந்து நண்டு ஊருவது போல் நண்டூருது நரிஊருது...நண்டூருது நரிஊருது...நண்டூருது நரிஊருது...அக்குளு கிளு கிளு......விரல்களால் ஊர ஆரம்பித்து  அவர்கள் தோள் பட்டை வரை சென்று அக்குளுக்குள் விட்டு கிளுகிளுப்பு ஊட்டி சிரிக்க செய்வார்கள்.அழும் குழந்தை சிரிக்கும் போது நம் மனமும் மகிழும்.

மனித விரல் நுனியோடு உடலிலிருக்கும் அனைத்து நரம்பின் பாகங்களும் தொடர்பு படுவதனால் விரல் நுனியை தொடுவதனால் முழு உடலுக்குமான ஆரோக்கியமும் பேணப்படுகின்றது எனும் போது குழந்தைகளுக்கு சிறு தொடுகை மூலமான இப்பயிற்சி தாய் சேய் அன்புடன் உடல், உள, ஆரோக்கியத்துக்கும் வித்திட்டது என்றால் அதில் தவறில்லை!

இத்தகையை புள்ளிகளை கண்டு தொடுகை மூலம்குணப்
படுத்தலைத்தான்  முற்காலத்தில் நம்ம்சித்தர்களின் வர்மக்கலை எனும் குணப்படுத்தல் இருந்தது. அதைத்தான் அக்குப்பிரசர் என சீனர்கள்  கொண்டு வந்து  இக்காலத்தில் வியாபாராமாக்கி கொண்டிருக்கின்றார்கள்.

சின்ன சின்ன விளையாட்டுக்களில் கூட எத்தனை அறிவியல் சிந்தனையோடு நம் முன் சென்றவர்கள்   நமக்காக பல அரிய விளையாட்டுக்களை கற்று தந்தார்கள் என நினைக்கும் போது மலைப்புதான் தோன்றும். அவைகளையெல்லாம் விட்டு நாம் விலகி வந்ததனால் நாம் கண்ட நன்மை என்ன?

அத்துடன் இன்னொரு விளையாட்டாய் கைகளை விரித்து உள்ளங்கையில் கிள்ளி எடுத்த படியே 
கிள்ளிக் கிள்ளிப் பிறாண்டி
கீயா மாயாப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ....
என கேட்கும் போது சொல்லும் பூவை வைத்து விரல்களை மடக்கி  கொண்டு வருவார்கள்.
முருங்கைப்பூ) என சொன்னால் 
முருங்கைப்பூவைத் திண்டவளே
முன்னடிக் கஞ்சி குடிச்சவளே
பாதி விளாங்காய் திண்டவளே
பாவட்டங் கையை ம-ட-க்-கு
என ஒவ்வொரு விரலாய் மடக்கி வருவார்கள், முழு விரல்களும் மடங்கி விட்டால் கைகள் இரண்டையும் சேர்த்து குவித்து பாதி விட்டமாய் பிடித்தபடி
பாட்டன் குத்து 
பறையன் குத்து 
பிள்ளையார் குத்து 
பிடித்து பார் குத்து 
என சொல்லி குத்துவார்கள். அப்படி குத்தும் போது பிடித்து பார் குத்து  என வரும் போது கைகளை குவித்து குத்தும் கையை பிடித்து விட்டால்  நாம் எதிராளியின்  இரு கையையும்  சேர்த்து  கும்பிடுவது போல் ஒட்டி பிடித்த படியே  கூப்ப வேண்டும் கள்ளப்பூனை நான் எங்க செல்லத்துக்கு சமைத்து வைத்த சோத்தை களவெடுத்து தின்ன வந்தியா? என் செல்லத்தோட சாக்லெட்டை பறிக்க வந்தியா என கேட்டு கேட்டு  கூப்பியபடி இருக்கும் கரங்களில் வெளிப்பக்கமாக செல்லமாய் அடிக்க வேண்டும். அடிக்கும் அடிபடாதவாறு கைகளை எடுத்து விட்டால் விளையாட்டு முடிந்து விடும்.  கைகளில் அடி பட்டு விட்டால்  அடி தொடரும்.

விளையாடும் போது மிகவும் சுவாரஷ்யமாக இருப்பதால் குழந்தைகள் வாய்விட்டு சிரித்து நம்மையும் சிரிக்க வைப்பார்கள்.

இந்த மாதிரி விளையாட்டுக்கள் விரல்களுடனும் கைகளில் முழுப்பாகத்துடனும் தொடர்பு படுத்தி  தொடுகை உணர்வோடு அக்குப்பிரசர் ஆற்றல் தரும் புள்ளிகளையும் தொட்டு செல்வதால் உடல், உள வளர்ச்சி ஆரோக்கியம் பேணப்படுகின்றது  இம்மாதிரி விளையாட்டுக்களை நமக்கென விட்டு சென்ற முன்னோர்களை நாம் அதன் அருமைபெருமை அறியாமல் அதெல்லாம் பழங்காலம் என கிண்டல் செய்யும் நிலையில் இருக்கின்றோம். 

அன்று உறவின் பெயர்கள், உணவின் பெயர்கள், பூக்கள், பழங்கள், காய்களின் பெயர்கள்,விலங்குகளின் பெயர்கள் எல்லாம்  மனனம் எனும் பெயரில்திணீக்காமல்  குட்டிக்குட்டி பாடல்கள் மூலம் இயல்பாகவே சொல்லிக்கொடுக்கப்பட்டது! இன்று அவையனைத்தையும் மனப்பாடம் எனும் பெயரில் திணிக்கின்றோம். 

சிந்திப்போம்!!!!!!!!!

நான் சின்னவளாய் இருந்தபோது.- 3 பதிவின் தொடர்ச்சியாக
எமது சின்னசிறார்கள் எண்களை இலகுவாக கற்கபாவலர் துரை மூர்த்தி அவர்களின் பாட ல் ஒன்றையும் இங்கே பகிர்கின்றேன்! இம்மாதிரி பாடல்களை  சொல்லி கொடுக்கும் போது நம் வீட்டு குழந்தைகள் எண்களோடு பல புதிய விடயங்களையும் கற்பதை காண முடியும்

ஒன்று - எண்ணின் தொடக்கம் ஒன்று
இரண்டு – விழிகள் நமக்கு இரண்டு
மூன்று – முத்துத் தமிழ் மூன்று
நான்கு – விலங்கின் கால் நான்கு
ஐந்து – உலோக வகை ஐந்து
ஆறு - சுவையின் வகை ஆறு
ஏழு – இசையின் வகை ஏழு
எட்டு – சிலந்திக்குக் கால் எட்டு
ஒன்பது - மணியின் வகை ஒன்பது
பத்து – தமிழின் பாட்டு பத்து!

எனது பதிவுகளில் நினைவில் இருப்பதை தட்டச்சிட்டு பகிர்வதனால் பாடல் வரிகளில் தவறுகள் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. பாடல் வரிகளில் மாறுதல்கள் இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்.  

தொடர்வேன்!

23 கருத்துகள்:

  1. பாட்டன் குத்து, பேரன் குத்து நாங்களும் விளையாடி இருக்கோமில்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா!மிக்க மகிழ்ச்சிப்பா!தொடர்வோம்.
      நன்றி!

      நீக்கு
  2. எனக்கு இந்த பாட்டெல்லாம் ஒன்னு கூட ஞாபகம் வர மாட்டுது.. அது என்னது லாவுட் மரம்?தெரியலை எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா? லாவுள் பழம் எனில் என்ன என படம் இணைத்துள்ளேன் பாருங்கள். உங்க ஊரில் வேறு பெயரில் அழைக்கப்படலாம்.

      நீக்கு
  3. இனிய நினைவுகள்.....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்ல.. உங்களுக்கும் எங்கள் அன்பின் வாழ்த்துகள் சார்!

      நீக்கு
  4. எதையோ இழந்தது போல் உணரவைக்கிறது. பால்ய கால நினைவுகள். அருமையான தொடர், தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜம்தான். கருத்துக்கு நன்றிப்பா

      நீக்கு
  5. அக்கா நீங்கள் என்றோ கடந்து வந்த பாதையை இன்றும் அதே பொலியுடன் எங்களுக்கு தந்துள்ளீர்கள் மிக் மிக அருமை
    அதிலும் பிள்ளைகளை சிரிக்க வைக்க நாம் உபயோகிக்கும் மந்திரி ம்
    நண்டூருது நரிஊருது...
    நண்டூருது நரிஊருது...
    நண்டூருது நரிஊருது...
    அக்குளு கிளு கிளு
    சூப்பர் அக்கா அருமையா க உங்களுக்கு ஞாபக சக்தி உள்ளது பாராட்டுக்கள்

    அக்கா தந்த முத்துச்சிற்பி பாடல் சூப்பர் நாங்களும் விளையாடி இருக்கிறோம்
    அத்தோடு வந்த
    கிள்ளிக் கிள்ளிப் பிறாண்டி
    கீயா மாயாப் பிராண்டி
    கொப்பன் தலையில் என்ன பூ.
    சூப்பர் அக்கா
    அப்றம் இலக்கமும்அதன் விளக்கமும் இன்னும் சிறப்பு வாழ்த்துக்கள் அக்கா இன்னும் தொடருங்கள்
    நன்றியுடன் நண்பன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்ம்ம்ம்ம் நினைவு இருக்கின்றது தானே!? அது போதும். தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
    2. பதிவை திருத்தினேன் கவனியுங்கள் முஸம்மில்

      நீக்கு
  6. இதே பாடல்களோடு நாங்களும் விளையாடியிருக்கிறோம் அக்கா இப்போதுதான் எனக்குப் புரிகிறது எமது தமிழர் பண்பாட்டு வாழ்க்கை அந்தக்காலத்தில் இவ்வாறு பின்னிப் பிணைந்ததாகவே இருந்திருக்கிறது அதனால்தான் அத்தனை விடயங்களும் பரிமாறப்பட்டிருக்கிறது

    அருமையான பதிவு தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஹாசிம்! நிரம்ப விடயங்கள் காரணங்கள் புரியாமலே நாம் பின்பற்றி இருக்கின்றோம்! கருத்திடலுக்கு நன்றிப்பா!

      நீக்கு
  7. எனக்கு கிச்சு கிச்சு தாம்பாளம் கிய்யா கிய்யா தாம்பாளம் இன்றும் நினைவு இருக்கின்றது பழைய நினைவுகளை மீட்டெடுத்து நிறைய விடயங்கள் தந்தீர்கள் அருமை வாழ்த்துகள் தொடர்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் எனக்கும் தான் ரெம்ப பிடித்த பாடல்கள் இவை.

      நீக்கு
  8. படிக்கும்போதே சின்ன வயது மலரும் நினைவுகள் தோன்றுகிறது... சின்னவளாகவே இருந்திருக்கக் கூடாதானு ஏக்கம் வருகிறது...
    இதுல சில பாடல்கள் இங்கேயும் சிறு வயதில் பாடி ஆடி இருக்கிறோம்...

    தொடருங்கள் நிஷா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் மாறத்தான் ஆசை வருகின்றது பானு!

      நீக்கு
  9. மலரும் நினைவுகளில் சொல்லும் பாடல்களை பால்யத்துக்கு ஒரு பரவசப் பயணம் மேற்கொள்ள வைக்கிறது...
    அழகான எழுத்து.... வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  10. இனிமையான குழந்தைப்பருவத்து நினைவுகளைத் தட்டி எழுப்பிய பதிவு. பிள்ளையார் குத்துப் பிடிச்சுக்கோக் குத்து, நண்டூறுது நரியூறுது விளையாடியிருக்கின்றோம். அருமை அருமை...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார், சுற்றத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய மனமார்ந்த புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி துளசி சார்.உங்களுக்கும் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

      நீக்கு
  11. பழய நினைவுகளை ஏக்கத்துடன் நினைக்க தூண்டும் பதிவு,,

    பதிலளிநீக்கு
  12. என் ஆசிரியர் ஒன்றாம் வகுப்பில் சொல்லிக்கொடுத்தது:

    ஒன்று யாருக்கும் தலை ஒன்று
    இரண்டு முகத்தில் கண்ணிரண்டு
    மூன்று முக்காலிக்குக் கால் மூன்று
    நான்கு நாற்காலிக்குக் கால் நான்கு
    ஐந்து ஒரு கை விரல் ஐந்து
    ஆறு ஈக்குக் காலாறு
    ஏழு வாரத்தின் நாள் ஏழு
    எட்டு சிலந்திக்குக் கால் எட்டு
    ஒன்பது தானிய வகை ஒன்பது
    பத்து இரு கை விரல் பத்து

    இது தவிற கதைகள் பாட்டு ரூபத்தில் “காலை மாலை அடுப்பு மூட்டி, காப்பி அப்பம் தோசை சுட்டு, கடைத்தெருவில் விற்று வந்தாள் ஓர் கிழவி” (இப்பாடல் முழுதும் தெரிந்தவர்கள் எனக்கு mgtcons1745@gmail.com என்ற முகவரிக்கு எழுதலாம்). தவிற ‘காக்கா காக்கா கருப்பண்ணா,காலையிலே எழுப்பண்ணா’ என்ற பாடலின் முழு வரிகளும் வேண்டும். இன்னொரு பாடல்: தங்கையே பார், தங்கையே பார், சைக்கிள் வண்டி இதுவே பார், சிங்காரமான வண்டி, சீமையிலே செய்த வண்டி, இரும்பாலே செய்த வண்டி, எங்கெங்கும் ஓடும் வண்டி, மாடில்லை குதிரையில்லை மாயமதாய் பறந்திடும் பார், அக்காளும் தங்கையும் போல் அவை போகும் அழகைப்பார்’ பாடலின் முழு வரிகள் வேண்டும்.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!