03 மார்ச் 2020

கோவிட்_19 ( கொரோனா வைரஸ் )

கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் உள்ள நகரங்களுக்கு வேகமாக பரவுகின்றன.
அவதானமாக  இருங்கள்!

கொரோனா வைரஸ் தென் துருவத்தைத் தவிர ஒவ்வொரு கண்டத்திலும் பரவியுள்ளது. இந்த வைரஸ் சீனாவில் தோன்றியது. ஆனால் இந்த வைரஸ் சீனாவில் பரவியதை விட வேகமாக சீனாவுக்கு வெளியே பரவுகிறது. இதுபோன்ற நிலைமை உலகில் ஏற்படுவது இதுவே முதல் முறையாகும்.

கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிக மக்கள் நெருக்கமாக வசிக்கும் மற்றும் குழுமி வேலை செய்யும் நகரங்களில் உள்ள மக்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரு நகரங்களுக்கு  இது ஒரு பெரிய சவால். உலகெங்கிலும் உள்ள நகராட்சிகள் எவ்வாறு சமாளிக்கப் போகின்றன என விழி பிதுங்கி நிற்கின்றன.

வைரஸ் பரவுவதற்கான முக்கிய வழிகளில் பொது போக்குவரத்து ஒன்றாகும்.

இருமல் அல்லது தும்மும்போது, ​​ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் வைரஸ் பரவுகின்றன.

பொது போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு வைரஸ் ஆறு மடங்கு அதிகமாக பரவ வாய்ப்புள்ளது.

இதனால்தான் தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரானில் உள்ள அதிகாரிகள் அனைத்து பேருந்துகள் மற்றும் ரயில்களிலும்,ரயில் நிலையங்களிலும்  கிருமிநாசினி தெளிக்கும் செயல்முறையைத் தொடங்கினர்.

அதிக எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் அரங்கங்கள் போன்ற இடங்கள் இந்த வைரஸ்கள் பரவுவதற்கு வழிவகுக்கும், மேலும் கொரோனா வைரஸ் காரணமாக சில விளையாட்டு நிகழ்சிகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீனாவின் ஷாங்காயில் நடக்கவிருந்த  'ஃபார்முலா வன்' பந்தயத்தை ஒத்திவைக்க வேண்டியிருந்தது.

சிக்ஸ் ஏசியன் லீக் போட்டியை  ஈரான் தள்ளி வைத்துள்ளது.

இத்தாலிய அணிகள் கலந்து கொள்ளவிருந்த  கால்பந்து மற்றும் ரக்பி போட்டிகளை ஐரோப்பாவின் பல நாடுகள்  ரத்து செய்ய முடிவு செய்துள்ளன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் மிகப்பெரிய விளையாட்டு டோக்கியோ ஒலிம்பிக்காக இருக்கலாம். இது ஜூலை 24 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால்  விளையாட்டுகள்  மட்டுமே பாதிக்கப்படவில்லை. மத விழாக்கள் மற்றும் புனித யாத்திரைகளுக்கும் இது ஒரு சவாலாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்களுக்கு மக்காவை தடை செய்ய சவூதி அரேபியாவும் முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முனைப்பாக சிறப்புத் திட்டங்களை ஏற்படுத்தி பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

ஜப்பான், ஈரான், தாய்லாந்து மற்றும் ஈராக்கில் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் மூடப்பட்டுள்ளன.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா பள்ளிகளை மூட முடிவு செய்யவில்லை. ஆனால் இங்கிலாந்தில் நான்கு பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிப்பு செய்யப்பட்டன. இத்தாலிக்கு விஜயம் செய்த குழந்தைகள் அந்த பள்ளிகளில் இருப்பதால் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவிய நாடுகளுக்கு யாராவது சமீபத்தில் சென்றிருந்தால், அப்படியான பெற்றோர்களை வீட்டிலேயே இருக்கவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகெங்கிsலும் உள்ள பல வணிக மற்றும் முக்கியமான தொழில்நுட்ப மையங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

சான் டியாகோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஏற்கனவே அவசரகால நிலையை அறிவித்துள்ளன. ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களை வரவேற்க கைகுலுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பேஸ்புக் மார்ச் மாதம் திட்டமிடப்பட்டுள்ள   அதன் ஆண்டு வர்த்தக மாநாட்டை ரத்து செய்துள்ளது.

சான் டியாகோவில் நடைபெறவிருக்கும் உலகின் மிகப் பெரிய இணைய பாதுகாப்பு மாநாட்டிலிருந்து விலகிச் செல்ல பல உலக முன்னணி ஆதரவாளர்கள் மற்றும் கண்காட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

உடல் வெப்பநிலை உயர்ந்தால் அல்லது சுவாசக் கோளாறால் அவதிப்பட்டால் வீட்டிலிருந்து வேலை செய்வது நல்லது என்று அமெரிக்காவின் தொற்று நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது.

பொது விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு கைகளை நன்கு கழுவுவது முக்கியம் என்பதையும் பொதுமக்களுக்குக் அதைக் கற்பிப்பது முக்கியம் என்றும்  அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
- கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்
- இருமல் அல்லது தும்மும்போது வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளுங்கள்.
- சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் தொடர்பைத் தவிர்க்க வேண்டும்
- காட்டு விலங்குகள் அல்லது வீட்டு விலங்குகளை பாதுகாப்பற்ற முறையில் தொடாதீர்கள்

மருத்துவமனைகள் :
புதிய கொரோனா வைரஸுக்கு எதிராக இதுவரை எந்த மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், வளர்ந்து வரும் நோய் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரே வழி மட்டுமே மருத்துவமனையில் உண்டு.

அத்தகைய நோயாளிகளுடன் பணிபுரியும் மருத்துவமனை ஊழியர்கள் பாதுகாப்பு ஆடைகளை அணிந்து, நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வைரஸ் மிகவும் மோசமாக பரவிய ஒரு நாட்டிலிருந்து வருபவர்களை  தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று இங்கிலாந்தின் அதிகாரிகள் கட்டளை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொடங்கிய வுஹான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டதைப் போலவே, பல இத்தாலிய நகரங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவினால், இதைவிட பாதுகாப்பு கொடுக்க வேறெந்த வழியும் இல்லாதிருப்பதாக  நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தங்கள் தேகரோக்கியத்துக்கு தாங்களே பொறுப்பாக கவனிக்க வேண்டிய ஒரு நிலை மக்களுக்கு  ஏற்பட்டுள்ளது.

குறிப்பு : மக்களை காப்பாற்ற விரும்பிவோர் இந்த தகவலை பகிருங்கள். அவர்களில் ஒருவர்தான் நீங்கள் என்பதை மறவாதீர்கள். அவர்களால் நீங்கள்  பாதிக்கப்படலாம்.

- ஜீவன்
நன்றி Jeevan Prasad

கோவிட்_19  ( கொரோனா வைரஸ் )



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!