31 அக்டோபர் 2016

நடிகையவள் செய்த தப்பென்ன?


பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் பல வகைகளில் விமர்சிக்கப்ட்டாலும் தாமாக விரும்பியும், நிர்பந்திக்கப்பட்டும் பிழைக்க வேறு வழி இன்றியும் பலர் நடிப்புதொழிலுக்குள் வருகின்றார்கள்.
வருபவர்கள் அனைவரும் நாயகி ஆவதில்லை. ஆனாலும் அவர்கள் பிழைக்க வேறு வழி இன்றி அதையும் ஒரு வழியாக்கி கொண்டு தம் இயலாமையை வெளிப்படுத்தாது முன் சிரித்து பின் அழுபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
நடிகை என்பதனால்அவளுக்குள் இருக்கும் திறமைகள் மழுங்கிப்போனதாய் சொல்லி அவளை வெறும் போகப்பொருளாக மட்டும் ரசித்து அவள் கருத்துசுதந்திரத்தினை மறுதலிக்கலாமா?
ஒரு நடிகையின் மரணத்தின் பின் பாவம் அவளுக்கு பரலோகத்தில் இடமில்லை என்றார் ஒரு நண்பர்? அவர் அறிந்தது அவ்வளவு தான்? 
ஏன் அவளுக்கு பரலோகத்தில் இடமில்லையாம்? அப்படி யார் சொன்னார்கள்? அப்படி நியாயத்தீர்ப்பு வழங்க யாருக்கு இங்கே அதிகாரம் உண்டு?

நடிப்பு என்பதும் ஒரு தொழில் தான்,நடிகை என்பதனால் அவள் பாவி என முத்திரை குத்துவோர் தான் மகா பாவிகளாக இறைவன் சமூகத்தில் பார்க்கப்படுவார்கள். தான் செய்வது இன்னதென அறியாமல் செய்யும் அவளையும், செய்வது எதுவென அறிந்தே அனைத்தினையும் செய்யும் உலகத்து நீதிமானகளையும் கடவுள் ஒரே தராசில் வைத்து தான் எடை போடுவார்! ஆம்!அவள் அங்கங்களை ரசித்த பின்பே விமர்சிக்கும் உங்களுக்கும் அங்கே இடம் மறுக்கப்படலாம்!

விபச்சாரம் எனப்படுவது என்னவென பைபிளில் ஒரு விளக்கம் உண்டு. உடலால் இணைதல் மட்டுமே விபச்சாரம் அல்ல ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் அல்லது ஒரு ஆணை இச்சையோடு ரசிக்கின்ற எவளும் அவனுடனே,அவளுடனே விபச்சாரம் செய்தாயிற்று!
அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுவதும் விபச்சாரம் தான்.அடுத்த வீட்டு பெண்ணின் அங்கங்களை அணு அணுவாக ரசிப்பவர்கள் தான் தன் வீட்டுப்பெண்ணை பொத்தி மூடி வைப்பார்கள்.தன்னை போல் பிறனையும் நினைப்பார்கள்.
நான் சினிமா பார்ப்பதில்லை. எனினும் பொதுவாக சினிமா நடிகைகளைக்குறித்து எனக்குள் பரிதாப உணர்வு உண்டு.எந்தச்சூழலில் எதற்காக நடிக்க வந்தார்களோ நாமறியோம், ஆனால் அவர்களுக்குள்ளும் நாம் அறியாத வலிகளும் வேதனைகளும் நிரம்ப உண்டு,
சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சிக்கு பின் அவரின் குடும்பச்சுமை இருந்தது போல் கோவை சரளாவின் சிரிப்புக்கு பின்னும் கண்ணீர் கதை இருந்தது. நடிகை என்பதனால் அவள் வெறும் உடல் அழகை மட்டும் காட்டி சம்பாதிக்கவில்லை,அதன் பின்னால் இருக்கும் சிரமங்களை பாடுகளை நாம் புரிந்து கொண்டோமானால் அவளைப்போல் பரிதாபத்துக்குரிய ஜீவன் யாரும் இல்லை என அனுதாபப்படுவோம்.
எங்கள் கம்பெனியில் ஷூட்டிங்க் குழுவுக்கு சாப்பாடுஆர்டர் வரும் போது பல நாட்கள் அனைவருடனும் நேரில் பழகும் வாய்ப்பு கிடைக்கும். 
இங்கே ஷூட்டிங்குக்காக வரும் கதா நாயகிகள் படும் பாட்டை நேரில் கண்டு வருந்தி இருக்கின்றேன். மைனஸ் டிகிரி குளிரில் கதாநாயகன் உட்பட அனைவரும் கம்பளியும் ஸ்வெட்டரும் குளிர்கால பாதணியும் அணிந்திருக்க அத்தனை குளிரில் மெல்லிய ஆடை அணிந்து வெற்றுப்பாதத்துடன் நடனமாடி கைகால்கள் விறைத்துப்போக நினைத்து பார்க்கவே கஷ்டமாயிருக்கும். ஒரு பாடலுக்காக காடு,மலை,மேடு என அலையும் அலைச்சலுடன் உடல் உபாதைகளும் சேர்த்தே பெண் நாயகிகள் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.

அரை குறை ஆடை அணிந்த விளையாட்டு விராங்கனைகளை விமர்சிப்போரும் இங்குண்டு, டென்னிஸ் ஆடைகள் நீச்சல் ஆடைகள், உயரம் தாண்டுதலில் போது அணியும் ஆடைகள் என பெண்கள் அணியும் ஆடைகள் அவளின் திறமை யை பின்னிறுத்தி அங்கங்களையே ஆராய்ச்சி செய்ய வைக்கின்றது.வெளி நாடுகளில் அப்படி அல்லவே! அவள் திறமையோடு கருத்தும் மதிப்புக்குள்ளாகின்றது.
சேலை அணிந்து பொட்டும் பூவும் வைத்தால் அவள் பத்தினி! அதனால் தான் இசைக்கச்சேரி செய்யும் பெண்களை பாராட்டுகின்றோம்,கைகூப்பி வணங்குகின்றோம். அவளே ஆடைகளை தளர்த்தி அவள் வசதிக்கு ஏற்ப அணிந்தால் அவள் சித்தினி!
இது எந்த ஊர் நியாயம்? இங்கே அவள் அணியும் ஆடைகள் தான் பேசுபொருளாகின்றதே அன்றி அவள் திறமை அல்லவே?
நடிகையாகட்டும், விளையாட்டு வீராங்கனையாகட்டும், விஞ்ஞானியாகட்டும், டாக்டராகட்டும், ஆசிரியைஆகட்டும் , அரசியல்வாதியாகட்டும், ஏன் குடும்பத்தலைவியாக கூட இருக்கட்டும், அவளின் தனிப்பட்ட குணவியல்புகளையும் தொழிலையும் அவள் சொல்லும் கருத்துக்களோடு ஏன் முடிச்சிட்டு பார்க்க வேண்டும்?
அவளுக்கும் கருத்துச்சுதந்திரம் உண்டு?
நடிகை என்பதனால் அவள் அரசியலில் ஈடுபடக்கூடாது என சொல்லவும் எவருக்கும் உரிமை இல்லை! அரசியலில் ஈடுபட கருத்து சொல்ல அவள் அந்த நாட்டுப்பிரஜையாயிந்தாலே போதும்!
பொதுப்பிரச்சனைகளில் கருத்து சொல்ல அவளுக்கு உரிமை இல்லை என சொல்ல முன் மனவிகாரமின்றி முழுமையான் பரிசுத்தமாய் இருப்போர் முதலில் அவள் மேல் கல்லெறியட்டும்.
நடிக்கும் காலத்தில் அதே நடிகையையும் கனவுக்கன்னியாக்கி கோயில் கட்டுவீர்கள்! அவள் காலம் முடிந்தபின் அவள் தீண்டத்தகாதவள் ஆவதெப்படி?
ஒரு கருத்தினை நடிகர்கள் சொன்னால் அவனுக்கு பாலாபிஷேகம் செய்வீர்கள்! கட்டவுட் வைத்து தெய்வம் ஆக்குவீர்கள்? பாலினம் பார்த்து நியாயம் தீர்க்கும் நீதிபதிகளே கொஞ்சம் சிந்தியுங்கள்! தொழிலென வரும் போது ஆணென்ன? பெண்ணென்ன?
உலக வரலாற்றில் நடிகைகள் அரசியலில் ஆளுமை செய்ததும் வெற்றியடைந்ததும் உண்டு. குஷ்பூ எனும் ஒருத்திக்கான பதிவு இதுவல்ல. அனைத்து நடிகைகள் குறித்தும் ஜெயலலிதா உட்பட அனைவருமே போகப்பொருளாக விமர்சிக்கப்படுவதை காணும் போது இப்படி ஒரு பெண் ஆண் நடிகர்களை குறித்து பேசினால் அதுவும் உங்கள் வீட்டுப்பெண்கள் பேசினால் எப்படி உணர்வீர்கள் என எதிர்கேள்வி கேட்க தோன்றுகின்றது!
அத்தனை கோடி மக்கள் தொகையில் சரிபாதி ஆண்கள் இருந்தாலும் தமிழ் நாட்டை ஆள்வதற்கும் அனைவரையும் ஆட்டிவைப்பதற்கும் முன்னாள் நடிகையான ஒரு பெண்ணால் முடிந்ததெனும் போது நடிகை என்பதனால் அவள் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது.
தான் செய்வதை மறைக்காது வெளியரங்கமாய் இருக்கும் நடிகைகளை விட உள் மன விகாரங்களோடு இருக்கும் பலரின் கருத்துக்களை தான் நாம் புறம் தள்ள வேண்டும்.

சில வருடங்களுக்கு முன் கன்னட படப்பிடிப்புக்காக சுவிஸ் வந்த மாளவிகா குருப்புக்கு உணவு ஆர்டர்கள் எங்கள் ஈவன்ஸ் சார்பாக செய்த போது என் கண்வர் மற்றும்   நண்பருடன்  என் வீட்டில் எடுத்த புகைப்படம் இது!

அவர்கள் ஆர்டர் செய்த உணவை  எங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் ரயில்வே ஸ்டேசனுக்கு கொரியர் செய்ய சொல்லி இருந்தார்கள் அன்றைய நாள் குளிரில்  வெளியில் நிற்கவே முடியாத சூழலில் இந்தபெண் இந்த ஆடை மட்டும் அணிந்து வெடவெடவென நடுங்கி விறைத்து போயிருந்ததை கண்டு அனைவரையும் எங்கள் வீட்டுக்கு அழைத்து வைந்து  சுடு நீர் வைத்து கொடுத்து  தொடர்ந்த சூட்டிங்க் தேவைக்குரிய சுடு நீர்  முதல் நேனீரும்  வைத்து பிளாஸ்கில் கொடுத்து அனுப்பினேன்! 

29 அக்டோபர் 2016

அகல் மின்னிதழில் தித்திப்பாய் தீபாவளி

அப்போதெல்லாம் இலங்கையில் பாடத்திட்டத்தில் மூன்றாம் வகுப்பிலிருந்து அதாவது இப்போதைய ஆண்டு நான்கிலிருந்து தான் ஆங்கிலப்பாடம் ஆரம்பம்.

A for Apple
B for Ball

என படம் போட்டு நம் கண்ணில் முதல் முதலாக மூன்றாம் வகுப்பு ஆங்கிலப்புத்தகத்தில் தான் அப்பிளையே காட்டி இருப்பார்கள். அழகாய் சிவப்பு வர்ண ஆப்பிள். பார்க்கத்தான் அழகுசுவைத்தால் வெறும் பச்சைத்தண்ணீரின் சுவை தான் என்பதை நான் எட்டாம் ஆண்டில் படிக்கும் போது தான் புரிந்து கொண்டேன். .

மூன்றாம் வகுப்பில் படிக்கும் போது படமாய் பார்த்து அதன் அழகில் மயங்கினாலும் பாடசாலை விடுமுறையில் கொழும்புக்கு சித்தி வீட்டுக்கு வரும்போது பழக்கடைகளில் அழகாக குலை குலையாக கட்டித்தொங்க விட்டிருக்கும் அப்பிள் பழம் பார்த்தும் அதன் விலை சாப்பிடும் ஆசையை தூரமாக்கி விட்டிருக்கும். ஒரு ஆப்பிள் 20 தொடக்கம் 30 ரூபாய் வரும். அப்போதெல்லாம் என்அப்பாவின் மாத சம்பளமே 1500 தான் வந்திருக்கும் என நினைக்கின்றேன். ஒரு கிலோ பிரெட் மூன்று ரூபாயும்,ஆப்பம் ஒரு சோடி ஒரு ரூபாயும் விற்ற காலத்தில் இருபது ரூபாய் என்பது அக்காலத்தில் பெரிய தொகை தானே?

இலங்கை போக்குவரத்துசபையில் பேருந்து நடந்துனராய் அப்பா வேலை செய்ததால் போகுமிடமிருந்தெல்லாம் சீஷனுக்குரிய பழங்கள் மூட்டை மூட்டையாக வீட்டுக்கு வந்தாலும் அப்பிள்பழம் மட்டும் எனது எட்டாம் வகுப்பு வரை எட்டாக்கனியாகவே இருந்தது.சாப்பிட்ட போதோ அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை கதையாகிப்போனது,

இப்போது நான் சொல்ல வந்ததுமூன்றாம் வகுப்பு படிக்கும் போது அதேஆங்கிலப்பாடப்புத்தகத்தில் கோக்கனட் ரொபி அதாவது தேங்காய்ப்பூ பர்பி செய்வது எப்படி என செய்முறை விளக்கத்தோடு இருந்தது. அதை ஆங்கில ஆசிரியரும் வகுப்புமாணவருமாய் சேர்ந்து செய்தது தான் என் வாழ்வில் முதல் இனிப்பு செய்த அனுபவம்,

தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுத்து சீனிப்பாகில் போட்டு கிளறி இறுகி வந்ததும் தட்டில் கொட்டி ஆறியதும் சின்ன சின்ன துண்டுகளாய் வெட்டி எடுத்தால் அதான் தேங்காய்ப்பூ அல்வா!
என் நினைவில் நீங்காது நிற்கும் முதல் இனிப்புச்சிற்றுண்டி தேங்காய்ப்பூ அல்வா தான்!
தீபாவளிச்சிறப்பிதழுக்கு இனிப்புவகை வேண்டும் என அகல் மின்னிதல் கணேஷ் எனும் சதயா கேட்டதும் என் நினைவில் நான் முதல் முதலில் செய்த தேங்காய்ப்பூ பர்பி தான் நினைவில் வந்து சென்றது.

நன்றி கணேஷ்!

அகல் மின்னிதழ் வாசகர்களுக்காக இலங்கையின் சிற்றுண்டிகள் சிலவற்றை பகிர்கின்றேன்!

1.வாய்ப்பன் எனும் சிற்றுண்டி இலங்கையில் யாழ்ப்பாண மக்களிடம் மிகவும் பிரபல்யமானது,குறுகிய நேரத்தில் செய்ய முடிவதோடு மூன்று நான்கு நாட்கள் வைத்து சாப்பிட முடியும்.
சிறுவர்கள் விரும்பிச்சாப்பிடும் சத்தானதும் செலவு குறைவானதுமான தின்பண்டம் வாய்ப்பன்அதை செய்வது எப்படி என பார்க்கலாம்.

வாய்ப்பன்
***************

கோதுமை மா 500 கிராம்
கனிந்த வாழைப்பழம் அல்லது 4
சீனி 200 கிராம்.
பேக்கிங்க பவுடர் அரை தே.கரண்டி
ஒரு துளி உப்பு
சமையல் எண்ணெய்

செய்முறை
*****************
கோதுமைமா,சீனி,பேக்கிங்கபவுடர்,உப்பு போன்ற அனைத்தினையும் ஒன்றாக கலந்து விட்டு வாழைப்பழத்தினை நன்கு நசித்து மாக்
கலவையுடன் சப்பாத்தி மா பதத்துக்கு பிசைய வேண்டும்தண்ணீர் சேர்க்காமல் வாழைப்பழத்திலேயே பிசைந்து எடுத்தால் நல்லது.
பிசைந்து வைத்த மாவை ஒரு மணி நேரம் காற்றுப்புகாமல் மூடி வைக்கவும்,
அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும் மாவில் கொஞ்சம் எடுத்து உள்ளங்கையில் வைத்து கோலிக்குண்டை விட கொஞ்சம்பெரிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு நன்கு பொரித்தெடுக்கவும்.எண்ணெய் அதிக சூடாக இருந்தால் வெளிப்பக்கம் வெந்து உள்ளே வேகாமல் இருக்கும் என்பதால் அடுப்பை மிதமான சூட்டில் வைத்தே பொரித்தெடுக்க வேண்டும்.


2.வட்டிலப்பம் எனும் இனிப்பு சிற்றுண்டி இலங்கை முஸ்லில் மக்களிடையே மிகப்பிரபல்யமான சிற்றுண்டி! முட்டை சேர்ப்பதால் முட்டை மணம் வருவது பலருக்கு பிடிப்பதில்லை ஆகினும் நான் செய்யும் முறையில் முட்டை வாசனை வராது!அனைவரும் விரும்பி உண்ணும் படியும் இருக்கும்,

வட்டிலப்பம்
*****************
   
கித்துள் அரை மூடி
பிரவுன் சீனி 250 கிராம்
முட்டை எட்டு
பால் ஒரு லீட்டர்
ஏலக்காய் ஆறு

செய்முறை
*****************
ஏலக்காயை வறுத்து மிக்சியில் இட்டு பொடியாக்கிக்கொள்ளவும்.
கித்துளை தூளாக்கி கொள்ளவும்.
தூளாக்கிய கித்துள்பிரவுன் சீனிமுட்டைபால் அனைத்தினையும் மிக்சியில் இட்டு நன்கு கித்துள்சீனி கரைந்து வரும் வரை அடிக்கவேண்டும்.
அடித்த கலவையில் ஏலக்காய் பொடியையும் தூவி கலக்கவும். ஏலக்காய் பொடி நன்கு சேர்ந்தபின் வடிகட்டிமூலம் வடித்து ஆவியில்வேகவைக்கும் 
ஸ்டீமர் அல்லது இட்லி சட்டிக்குள் வைக்கும் படியாய் ஒரு பாத்திரத்தில் 
ஒன்றரை மணி நேரங்கள் அவித்தெடுக்கவும்.

ஒன்றரை மணி நேரம் சென்றதும் மூடியை திறந்து குச்சியால் நடுவில் குத்தினால் கலவை குச்சியில் ஒட்டாமலிருந்தால் வெந்து விட்டதென புரிந்து கொள்ளலாம்,

நன்கு அவிந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைத்து குளிர்சாதனப்
பெட்டியில் வைத்து மூன்று நாட்கள் வரை பயன் படுத்தலாம். பரிமாறும் போது அழகாக உருண்டைகளாய் கரண்டியால் அள்ளியும் சின்ன சின்ன சதுர துண்டுகளாக வெட்டியும் பரிமாறலாம்.வாழைப்பழ துண்டுகளை அலங்கரிப்புக்கு பயன் படுத்தலாம்.

டிப்ஸ்
********
* கட்டித் தேங்காய்ப்பால் அல்லது பசும்பால் என இரண்டிலும்  செய்யலாம்.
*இனிப்பு தேவைக்கு ஏற்ப கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்
*வேக விடும் முன் நெய்யில் வறுத்த முந்திரியை மேலே தூவி விடலாம்.
*இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக விடஒன்றரை மணி நேரம் ஆகும், வீட்டில் மைக்ரோவேவ் ஓவனில் செய்ய வேண்டுமெனில் அதற்கான தட்டுக்களில் ஊற்றி 150c  வெப்ப நிலையில் 45 நிமிடங்கள் சூடாக்க வேண்டும்.

கித்துள் என்பது கித்துள் மரத்திலிருந்து கிடைக்கும் வெல்லம். கித்துள் பனங்கட்டி, கித்துள் பாணி எனவெல்ல்லாம் கிடைக்கும், பனையைபோல் ஒரு மரம்!

கித்துள் வெல்லம்


3.ப்ருட் சலாட் என்றதும் பழங்களையெல்லாம் ஒன்றாக்கி மிக்ஸ் பண்ணுவது தானே அதில் என்ன விஷேசம் இருக்கின்றது என நினைப்போம்அதுவே ஐஸ்கிரிம் கடைகளில் போய் சாப்பிடும் போது வீட்டில் செய்வதில் இப்படி சுவை வருவதில்லையே எனவும் நினைப்போம் அல்லவா?அதன் அழகுக்காகவும் சுவைக்காகவும் ஐஸ்கிரிம் கடைக்கு செல்லத்தேவையே இல்லை.வீட்டிலேயே செய்யலாம்,

ஐஸ்கிரிம் கடைகளில் சாப்பிடும் அதே சுவையுடனான ப்ருட்சலாட் எப்படி செய்வது என பார்க்கலாமா?

ப்ருட்சலாட்
 *********************

அப்பிள் 2
பியர்ஸ் எனும் பேரிக்காய் 1
அன்னாசிப்பழம் பெரிய துண்டுகள்
மாம்பழம் 1
வாழைப்பழம் 1
விரும்பினால் மாதுளம் பழம்
எலுமிச்சம்பழம் சிறிதளவு
ஆரஞ்சு கலரின் ஒரு துளி
அன்னாசி எசென்ஸ் ஒரு துளி
சீனி 100 கிராம்
ஆரஞ்சு சின்ன துண்டு

செய்முறை
*****************
50 மி.லீட்டர் தண்ணீரில் 100 கிராம் சீனியை கலந்து ஆரஞ்சு பழத்துண்டினை தோலுடன் போட்டு அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். கொதித்ததும் ஆரஞ்சை எடுத்து வீசி விட்டு ஆற விடவும்.ஆரஞ்சு பழம் சேர்க்காமலும் பாகு காய்ச்சலாம்.

ஆப்பிள்,பியர்ஸ்,அன்னாசிப்பழங்களை தோல் சீவி சின்ன சின்ன துண்டுகளாக வெட்டவும்அப்பிள் பழம் தோல் சீவினால் நிறம் மாறி விடும் என்பதனால் வெட்டியதும் சிறிதளவு எலுமிச்சைசாறு கலந்து விடவும்மாம்பழம் பாதியை சின்ன துண்டுகளாக்கி பழக்கலவையுடன் சேர்க்கவும்,மீதிப்பாதியை மிக்சியில் அடித்து கூழாக்கி பழக்கலவையுடன் சேர்த்து ஆறவைத்திருக்கும் சீனிப்பாகையும் ஆரஞ்சு வர்ணத்தினையும் இட்டு நன்கு கலந்த பின் அன்னாசி எசென்சையும் சேர்க்கவும்.

பழக்கலவையை மூடி குளிர்சாதனபெட்டியில் வைக்கவும்இக்கலவையை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து மூன்று நாட்கள் பயன் படுத்தலாம்,பரிமாறும் போது வாழைப்பழங்களை சிறு துண்டுகளாக வெட்டிகலந்து பரிமாறவும்,

டிப்ஸ்
**********
*கஜூத்துண்டுகளை நெய்யில் வறுத்து மேலே தூவலாம்,
*அன்னாசி,மாம்பழஜெல்லிகளை பச்சை சிவப்பு வர்ணங்களில் செய்து பழங்களை கப்பில் இடும் போது இடையிடையே தூவி விடலாம்.
*டூட்டிப்ருட்டி பழங்களையும்தூவலாம்.
*ஒரு கரண்டி வனில் ஐஸ்கிரிம் சேர்த்தும் பரிமாறலாம்,.

அவரவர் வசதிக்கேற்ப விருந்தினை ரோயல் விருந்தாக்கும் ப்ருட்சாலட் இது!
                   
அகல் மின்னிதலில் படிக்க இங்கே செல்லுங்கள்.
http://agalmagazine.weebly.com/2980300829863006299729953007-2970300729932986302129863007298029963021-2016/3169335

படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்ததே! நன்றி!

எண்ணப்பறவை சிறகடித்து........!

நாங்கள் ஐந்து பெண்கள், ஒரு தம்பி! குடும்பம் பெருகிய பின் கஷ்ட ஜீவனம் தான்.வாடகையில்லாத வாடகை வீடு!
பண்டிகை காலத்தில் அம்மா எப்படியோ கஷ்டப்பட்டு மண்ணெண்ணை வாடையோடு வரும் சீத்தை துணி கல்முனைமார்க்கெட்டில் மொத்தமாக வாங்கி விடுவார்.
இரண்டு விதமான துணியில் கிறிஸ்மஸுக்கு ஒரு சட்டை புதுவருடத்துக்கு ஒரு சட்டை. ஐந்து பெண்களுக்கும் ஒரே துணி, டிசைன் மாறி இருக்கும், தம்பிக்கு மட்டும் ரெடிமேட் ரௌசரும், சேட்டும் அது அனேகமாய் தவிட்டு கலரில் பள்ளிக்கூட உடுப்பாயும் இருக்கும். வருடத்துக்கு அந்த இரண்டும் தான் எங்களுக்கு புது ஆடை.அப்பாவின் தங்கை கொழும்பில் இருந்து அவர் பெண்களின் சட்டைகளை கொடுத்து விடுவார். அந்த சட்டைகள் அளவுக்கேறப் எங்கள் அனைவருக்கும் மீதிக்காலத்துக்கு பகிரப்படும்.
அச்சு முறுக்கு சோகி என அந்த சூழலுக்கு ஏற்ப பலகாரமும் கட்லட்,அல்லது கூனி வடையோ செய்து அதை கொண்டு சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போனால் கைவிசேடம் தருவார்கள். ஒருரூபாய், மூன்று ரூபாய் என அவரவர் வசதிக்கு தகுந்த படி இருக்கும். அதனால் இந்த பலகாரம் காவி வேலைக்கு எங்களுக்குள் போட்டி இருக்கும். தம்பியை கூட்டிப்போனால் கொஞ்சம் கூடுதலாய் காசு தருவார்கள் என்பதனால் அன்று மட்டும் நான் நீ என அடிபடுவோம்! அவன் எங்கள் எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாய் இருந்தான்.
அம்மா இறைச்சி சமைத்தால் ஊருக்கே வாசனை வரும், அதிலும் மாமாவுக்கு அம்மாவின் கைச்சமையல் எனில் நிரம்ப பிடிக்கும், வீட்டில் விருந்துச்சாப்பாடு. அதான் ஆட்டுஇறைச்சிக்கறி சமைத்து மாமா வீட்டுக்கு கொண்டு போனால் மாமி ஐந்து ரூபா தருவார்! அதனால் அன்று மட்டும் உளவாரம் அதாங்க உபகாரம் எனும் கைவிசேடக்காசு சிரித்துக்கொண்டே மாமாவும் தருவார்!மற்ற நாளில் மாமா என்றாலே பயம் தான்!
அன்று இருட்டிய பின் கல்முனையிலிருந்து பாபூஜி ஐஸ்கிரிம் வண்டி ஸ்பீக்கர் சத்தத்தோட வரும். ஊர் எல்லையில் வரும் போதே அதன் சத்தம் கேட்கும், பாட்டும் லைட்டுமாய் வரும் வண்டிக்கு பின்னால் தெருவின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஓடுவோம்.
அப்பா வீட்டில் இருந்தால் தான் ஐஸ்கிரிம் கிடைக்கும்.அப்போதானே காசும் வீட்டில் இருக்கும்.அப்பா இல்லாத நாளில் ஐஸ்கிரிம் வண்டி வந்தால் வண்டியை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே நிற்போம்!
இன்றைக்கு மாதத்துக்கு நான்கு தடவை புதுத்துணி எடுத்தாலும் அக்காலத்தில் பண்டிகை எனில் அதிகாலையில் தலைக்கு குளித்து சீத்தைத்துணி சட்டையை மகிழ்ச்சியோடு அணிந்து சர்ச்சுக்கு போய் வந்து பலகாரங்கள் சாப்பிட்டதை போல் சுவையாய் இல்லை.
வயிறு நிறைய சாப்பிட தின்பண்டம் இருக்கின்றது.கப்பேர்ட் நிறைந்த துணிகள் இருக்கின்றது. ஆனாலும் எதையோ இழந்தது போல் உணர்வும் மனதில் ஆழத்தில் உறங்கிக்கொண்டே இருக்கின்றது!

தொடர்வேன்!
அனைவருக்கும் 
இனிய தீபத்திருநாள் 
நல் வாழ்த்துகள்! 

19 அக்டோபர் 2016

மாலு பான் ரெடி!

மாலுபாண்
**************
இலங்கையில் மிகப்பிரபல்யமான சிற்றுண்டி மாலுபான்.சிங்களமொழியில் மீனுக்கும் சமைத்த கறிக்கும் மாலு என சொல்வார்கள், சமைத்த கறியை வைத்து செய்யும் பன்!

பன்னுக்குள்  மீன், இறைச்சி, முட்டை மரக்கறி என எதைவேண்டுமானாலும் பிரட்டல் கறியாக செய்து  பேக் செய்து எடுப்பதே மாலு பான் எனப்படும், 

பாண் செய்ய தேவையான பொருட்கள்; 
*******************************************
கோதுமை மா 500கிராம். பத்து பன் செய்யலாம் 
ஈஸ்ட்-.20 கிராம்
சீனி 1 தே.கரண்டி
உப்பு ஒரு தே. கரண்டி 
வெதுவெத்ப்பான நீர் 250 மி.ல்லீ
பாண் செய்யும் முறை;
*************************

சீனி ஈஸ்ட்-. வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து வைக்கவும்
கோதுமை மாவை பாத்திரத்தில் போட்டு உப்பு ஈஸ்ட் தண்ணீர் சேர்த்து பிசையவும்.
சப்பாத்தி மாவுக்கு பிசைவது போல் கைகளில் ஒட்டாத பதம் வந்ததும் காற்றுப்போகாமல் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
கறி செய்ய தேவையான பொருட்கள்
*****************************************

மீன் (ப்ரெஷ் மீன் அல்லது ரின்னில் அடைக்கப்பட்டது.)
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
வெங்காயம் பூண்டு, இஞ்சி, சீரகம் கடுகு கறிவேப்பிலை மிளகாய் தூள் சுவைக்கேற்ப
கறிசெய் யும் முறை;
***********************

ப்ரெஷ் மீன் என்றால்:சுத்தம் செய்யப்பட்ட மீன், மஞ்சள் துள், உப்பு சேர்த்து அவித்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு,வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும் கடுகு, சீரகம் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு, வெங்காயம் வதக்கி உருளைக்கிழங்கு உப்பு சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும்.
அடிப்பிடிக்காதபடி அடிக்கடி கிளறி கிழங்கு பாதிவெந்ததும் பிசைந்த மீன், சில்லி பவுடர் அல்லது கறிமிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும்..
கறி நன்றாக அவிந்து சேர்ந்த்தும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
பிசைந்து வைத்த மாவில் சிறிது எடுத்து உள்ளங்கைகளில் வைத்து தட்டையாக தட்டி நடுவில் கறி வைத்து மூடி உருண்டைகளாக்கவும்.
கடைசியாக முட்டை மஞ்சள் கருவை நன்றாக அடித்து பூசி ஒவனில் 200_220 டிகிரி சூட்டில் 25-- 30 நிமிடங்கள் வைத்து பேக் பண்ணி கோல்ட் கலரில் வந்ததும் வெளியே எடுக்கவும்.
*பாண் நன்றாக ஊதி வர ஒவனை அடிக்கடி திறக்கக்கூடாது
**மரக்கறி பான் தேவை என்பவர்கள் மீன் போடாமல் துருவிய கேரட், லீக்ஸ் போட்டு கிழங்குடன் பிரட்டி எடுங்கள். அப்படியே முட்டைக்கு பதில் கொஞ்சம் ஓவனில் வைக்கும் முன் பாலை பூசி விடுங்கள், பான் மெதுமையாக இருக்கும், 
***அவசரமாகவும், இலகுவாகவும்  செய்ய வேண்டும் எனில் முழுக்கிழங்கை அவிய விட்டு தோலுரித்து பிசைந்து வெங்காயம் மசாலாவை தாளித்ததும் அவித்த கிழங்குத்துண்டங்களை போட்டு பிரட்டி எடுக்கலாம்,
****முட்டையை அவித்து கோதுடைத்து  பன்னுக்குள் அப்படியே வைத்தும் பேக் செய்யலாம்.

மாலு பான் ரெடி! ஆனால் யாருக்கும் கிடையாது!அனைத்தினையும் நாங்களே சாப்பிட்டு முடித்து விட்டோமாக்கும்!
******************************************

15 அக்டோபர் 2016

கேள்விக்குள் ஒளிந்திருப்பது என்ன?



சமீபத்தில் ஒரு திருமண விருந்துபசாரம் எமது Hegas Catering Services ஊடாக இரவு விருந்துக்கு ஆர்டர் வந்திருந்தது.
என் நிர்வாகத்தின் கீழ் ஆறு உதவியாளர்களும் ஒரு வாகன சாரதியுமாக சரியான நேரத்துக்கு போய் சேர்ந்தாலும் சில பல காரணங்களால் பவ்வே மேசையை தயார் செய்வதில் சின்ன சின்ன சங்கடங்கள்
அன்றைய மெனுவாக கொத்துரொட்டி, பூரி, பிரைட் நூடில்ஸ், சோறு அதற்குரிய கறிகள், கூட்டுக்கள், பொரியல்கள் என... அனைத்தும் தயாராய் சென்றாலும் மெயின் உணவான பூரி, நூடில்ஸ், பரோட்டாக்கொத்து எப்போதுமே உடனடியாக மண்டபத்தில் இருக்கும் சமையலறையை பயன் படுத்தி தான் செய்வோம், உடனடியாக செய்து பரிமாறுவது தான் எமது சிறப்பே! 
சுவிஸில் எப்பக்கத்தில் இருந்தாலும் விருந்து மண்டபத்து சமையலறை யில் அடுப்பு வசதிகள் இல்லை எனில் அதற்கேற்ப காஸ் அடுப்பு ஒழுங்குகளோடு செல்வோம்.
அன்றைய நாள் விருந்தில் மேலே குறிப்பிட்ட் உணவுகளை ஆயத்தம் செய்ய எமக்கு ஒரு மணி நேரம் தேவை என்பதனால் மூன்று உதவியாளர்கள் அதற்கான ஆயத்தங்களிலும் ஒருவர் பாத்திரங்களை கழுவுவதிலும் இருவர் பவ்வே மேசைக்குரிய ஆயத்தங்களிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

அனைத்தும் என் மேற்பார்வையில் நடைபெறும் என்பதனால் பெண் என்பதனால் பலரின் பார்வை என்னை ஆச்சரியமாய் பார்ப்பது சாதரணமானது. நீங்களா இதை முன் நின்று செய்கின்றீர்கள் என கேட்பவர்கள் சிலர்?
****எங்கள் வீட்டுப்பெண்கள் இப்படி செய்யமாட்டார்கள் நீங்கள் கிரேட் அக்கா என என்னை விட பெரியவர்களும் அக்கா என அழைத்து என் பணியின் கனம் உணர்ந்து மனமார்ந்து பாராட்டி தொடர்ந்தும் எம்மை ஊக்குவிப்பவர்கள் பலர்!
*என்னிடம் பணி செய்வோரை நான் என்றுமே வேலையாட்களாய் பார்த்ததில்லை என்பதனால் அவர்களும் எம்மை வேறு படுத்தி பார்ப்பதில்லை.
அன்றைய விருந்தின் முடிவில் அனைத்தினையும் நான் சொன்னபடி ஒதுக்கி வாகனத்தில் ஏற்றுவதற்காக பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த ஒரு தம்பியிடம் சென்று ஒருவர் தம்பி சாப்பாடு எல்லாம் நலல் ரேஸ்டாக இருக்குது! யார் இதை ஒழுங்கு செய்தது? யாரிடம் ஆர்டர் விடயமாக பேச வேண்டும் என கேட்கவும். அவர் என்னை காட்டி அக்காவிடம் பேசுங்கள் என்றார்.
உடனே பெண்பிள்ளையா நடத்துவது என்பது போல் என்னை நட்பில்லாமல் ஒரு மாதிரி பார்த்து விட்டு.... அப்ப நீ எடுபிடியோ தம்பி? 
கேள்விக்குள் ஒளிந்திருப்பது என்ன?

04 அக்டோபர் 2016

அனைவருக்கும் வணக்கம்!

அன்புள்ளங்கள் அனைவரும் நலமா?
விருந்துக்கு வருவோருக்கு வாசலில் வைத்து பரிமாறப்படும் குளிர்பானங்கள் வரிசையில்  ஆரஞ்சுயூஸ், விட்டமின் யூஸ், ஒய்ட் வைன், மினரல் வாட்டர், கூடவே டீ காப்பியும் உண்டு  

நான் வரவில்லை எனினும் பேஸ்புக்கில் காணும் போதெல்லாம் நலம் விசாரித்து பதிவுகள் இடுங்கள் என வேண்டுவதோடு என் வாசிக்கும், எழுதும் ஆர்வத்தினையும் விட்டு விலகி விடாமல்  இருக்க  என்னை ஊக்கப்படுத்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி! 

கடந்த  பத்து வருடமாய்  சுவிஸ் நாட்டில் ஈவன்ஸ் களுக்கு உணவு மற்றும் மேடை, மேசை சோடனை முதல் இதர அனைத்து ஒழுங்குகளையும் செய்து வந்தாலும் ஐந்து வருடம் முன்னால் தான் எமக்கென நிலையாக  ஹோட்டல் ஒன்றோடு இணைந்த  விழா மணடபஙக்ள் இரண்டினையும்  திறந்ந்திருந்து படிப்படி்யாய் வளர்ந்து சுவிஸிலிருக்கும் எம்மக்கள் மத்தியில் எமக்கென நிலையான நல்லதொரு இடத்தினை பெற்றிருக்கின்றோம். 


 உள் நுழைந்ததும்  சிற்றுண்டிகள்,
 நான்கு வகையான பிரெட் சாண்ட் விச் 
மட்டன் மற்றும் உருளைக்கிழந்து சேர்த்த ரோல்ஸ் 
வெஜ் சமோசா, மீன் சேர்த்த கட்லெட் 
ஸ்விட் சில்லி சாஸ்
 மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்,  மிக்சர்
தக்காளி, வெள்ளரி, மெசெரெல்லா ஸ்ரிக் 

இந்த வருடத்தில் வந்த ஆர்டர்களும், பொறுப்புக்களும் எமக்கான வளர்ச்சியை மட்டுமல்ல எமது நிர்வாகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் புரிந்திடும் படி   இருந்தது.    கடந்த பங்குனி மாதத்தில் ஆரம்பித்த ஓட்டம் கடந்த வாரத்தில் தான் சற்று ஓய்வைத்தந்தது. இந்த ஒரு வாரமும் சற்று ரிலாக்ஸாய் ..........! 
இங்கே பாடசாலைகளுக்கு  யூலை முதல் ஆகஸ்ட் முதலிரு வாரங்களுமாய் ஆறுவாரங்கள் கோடைகாலவிடுமுறை ஆகவும்,செப்டம்பர் கடைசியிலிருந்
து அக்ரோபர் நடுப்பகுதி வரையான மூன்று வாரங்கள் இலை உதிர் கால விடுமுறையாகவும்  இருபப்தனால் கோசை விடுமுறையில் இந்தியா, இலங்கைக்கு செல்லலாம் என திட்டமிட்டு  முடியாமல் போனது.

சொந்த தொழில் என்பது புலிவாலை பிடித்த கதையாய்.... பணம் கொட்டினாலும் அதை பெற நாம் நம் சுயத்தினை இழக்க வேண்டி இருக்கின்றது. தொழில் வளர்ச்சி என்பது மட்டுமே கண்முன் இலக்காக தெரிகின்றது. ஏனையவை களை பின்னர் பார்க்கலாம் என தட்டிக்கழிக்கும் படியும் செய்கின்றது. 

சுடச்சுட பூரி, பிரைட் ரைஸ், 
சிவப்புக்குத்தரிசி சாதம் 

மட்டன் குழம்பு, 
இறாலுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்த பொரியல்  தந்தூரி சிக்கன்


வெள்ளரி சேர்த்த தயிர் ரைதா
கத்தரிக்காய் வத்தக்குழம்பு
பருப்பு
உருளைக்கிழங்கு பிரட்டல் 
அப்பளம்,மோர் மிளகாய் 

ஹோட்டல் நிர்வாகமும், ஈவன்ஸ் ஓழுங்குகளும் எனது தலைமையின் கீழ் மட்டுமே என்பதனால் நான் இல்லாத சூழலில் எந்த விருந்து ஒழுங்குகளையும் ஒழுங்காய் செய்ய முடியாது என்பதனால் பயணத்திட்டம் இட முடியவில்லை.  பல நட்புக்கள் என் வருகையை எதிர்பார்த்து இன்னும்ஆர்வமுடன் இருப்பதை நான் அறிந்தாலும்  நாம் சந்திக்கும் காலம் நிச்சயம் வரும் எனும் கடவுள் நம்பிக்கையில் இருக்கின்றேன்.


ஊஞ்சலாடும் கேக்
கடந்த வாரத்தில் எம்மால் நடத்தப்பட்ட விருந்துகளிலிருந்து உங்கள் பார்வைக்காக சில படங்களை இடையிடையே பகிர்ந்துள்ளேன். 

மேசை அலங்காரம் 


மேலும் படங்கள் பார்க்க...
.https://www.facebook.com/hegas.prabha/media_set?set=a.1085077021528497.1073741839.100000786292216&type=3