16 நவம்பர் 2018

கஜா புயல் எச்சரிக்கையும், சேதங்களும்,

🌴🌴🌴🌎🌎🌎🌎🌴🌴🌴
காற்றும், புயலும், மழையும் கொன்று கொண்டதும்
மனிதர் தானாய் கொன்று தின்பதும்
 1977,1994 ஆம் ஆண்டுகளின் புயல்களை அசரடித்ததாம் 2018 கஜா புயல்.
வீழ்ந்த மரங்களை மீண்டும் வாழ வைக்க முடியுமா?
இயற்கையும், செயற்கையுமாய்
இணைந்திங்கே செய்யும் சதி
இடி போலே விழும் போது 
இனி எங்கே சென்றிடுவோம்?

உலகில் எங்கேனும் ஒரு மரம் தன் உயிரை விடுகின்றதெனும் போது மூச்சுக்காற்று தடைப்படுவதான உணர்வும், வலியும் எனக்குள் மட்டும் தானா?


15 நவம்பர் 2018

குறள்களும் குரல்களும். / வலைப்பதிவுகளில் என் பதில்கள்


திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வலைப்பக்கம் பத்து கேள்விகளை கேட்டிருந்தார்கள். அக்கேள்விகளும் கேள்விகளுக்கான என் பதில்கல்களும். 
1. தலைமை என்றால்? 
அ.சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 
 
.நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று 
தன்னம்பிக்கை மிக்கவராக,சுய மதிப்பிடல், சுயஆளுமை கொண்டவராக இருக்க வேண்டும். (self-esteem) தன்னிலிருந்தே மாற்றங்களை விதைப்பவரே சிறந்த தலைமைப்பண்புக்கு தகுதியானவர்.
தம்மையும்,தம் சொல்லையும் வெல்ல இனி எவரும் இல்லை எனும் நம்பிக்கையை தருபவராக இருக்க வேண்டும். பேச்சால்,செயலால், அன்பால் தனக்கு பின் தொடர்பவர்களை வழி நடத்தும் திறமை கொண்டிருக்க வேண்டும். நம்பினவர்களை கைவிடாத உறுதியும் கைவிட மாட்டார் எனும் நம்பிக்கையை பெற்றவராகவும் இருக்க வேண்டும். 

2.சிந்தித்தால் போதுமா? 
இல்லை, இல்லவே இல்லை.  
அ. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.  

.கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
சிந்தனைகளை செயல்படுத்தி  வீட்டையும் நாட்டையும்மேன்மை பெற வைக்க  வேண்டும். .   

.சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
சொல்வதும், சிந்திப்பதும் எளிது தான். அதை  சொல்லிய படி செய்ய வேண்டும் 
சிந்தனைகளை செயல்படுத்த நினைக்காதவர்களை குறித்து பாரதியார் பாடி இருப்பதை பாருங்களேன். . 
“நெஞ்சில் உரமும் இன்றி,நேர்மைத் திறமும் இன்றிவஞ்சனை செய்வாரடி – கிளியேவாய்ச்சொல்லில் வீரரடி”

3.நல்லவராக இருந்தால் போதுமா? 
இல்லை,  நல்லவர் எல்லோருமே தங்களை தவிர எல்லோரும்  நல்லவர்கள் அல்ல எனும் சுய பெருமைக்குள் சிக்கி இருப்பார்கள். அதனால் எவருக்கும் பயனில்லை. 

அ.இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.  

தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர் வாசனை வீசாத  மலரை போன்றவர். நல்லவராக இருந்தாலும்  பிறருக்கு பயன் படாதவராக, சமுதாயத்து சிந்தனை அற்றவராக இருந்தால் எவருக்கும் பயனில்லை.  நல்லவராகவும் நாலு பேருக்கு நல்லது  சொல்பவராகவும், செய்பவராகவும் இருக்க வேண்டும். ஏட்டுச்சுரக்காய் கறிக்குதாவது போல் நல்லவர் பட்டம் மட்டும் போதாது. 

4.  மற்றவர்களுக்கு எப்படி புரிய வைக்கின்றது
 நம்ம வாழும் வாழ்க்கையை முன்னுதாரணமாக்கி தான்.
அ.கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக   
 மற்றவர்கள் எதை செய்யக்கூடாது என நாம் சொல்கின்றோமோ அதை நாமும் செய்யாமல் வாழ்ந்து காட்ட வேண்டும். கல்வி என்பது ஏட்டுக்கல்வி மட்டும் இல்லை. பட்டறிவும் கல்வி தான். பல நூல்கள் படித்து நாம் அறிந்து கொள்வதை நாம் பின்பற்றும் போது மற்றவர்கள் தாமாகவே புரிந்து  கொள்வார்கள்.  சொல்லை விட செயல் முக்கியம்.   
  
5. கூடவே இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும்? 
ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.  
 அ.உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
என்ன தான் படித்திருந்தாலும் நல்லதை ஏற்று கெட்டதை விலக்க கூடியவர்களாக நம் நட்புக்கள் இருக்க வேண்டும்.

ஆ.இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
கெடுப்பா ரிலானுங் கெடும்.

நாம் தவறு செய்தால்  அதைக்கடிந்து திருத்துபவர்களாக இருக்க வேண்டும். 

6. சூழ்ச்சிகளும் தடைகளும்? 
அ.நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.  

ஆ.துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.

எந்த விளைவுகளுக்கும் எதிர் விளைவுகள் உண்டு. குடும்ப வாழ்க்கையிலும் , சமூக வாழ்க்கையிலும் ரோபோ போல் செயல் பட முடியாது.  நல்லது  இருந்தால் கெட்டதும் அங்கே இருக்கும், சாதகம் இருந்தால் பாதகங்களும் உருவாகும்.  நாம் நம்ம கடமையை செய்திட்டே இருக்கணும். முடிந்தால் அவர்களுக்கு  புரிய வைத்து  நம் கூட சேர்த்துக்க பார்க்கலாம்.  காரியம் சித்தி பெற அதை எதிர்ப்பவர்களை கூட்டு சேர்த்து கொள்வது புத்திசாலித்தனம். சூழ்ச்சிகளை வெல்லும் தந்திரம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். தலைமைப்பண்புக்கு இதுவும் முக்கியம். 

7.ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவுமா? 
உண்மையில் இந்த கேள்வியை கவனிக்காமல் மூன்றாவது கேள்விக்கு இந்த பழமொழியை  பதிலாக்கி இருக்கின்றேன். 
அ.முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்  
திறம்படச் செயல்படத் தெரியாதவர்களிடம் சிக்கிக்கொள்ளும் காரியம் முழுமையடையாமல், முடங்கிப் போய்விடும்.  எந்த செயலானாலும்  கற்றலுடன், பயிற்சியும், திறமைவும்  முக்கியம். 
முயலும் வெல்லும்
ஆமையும் வெல்லும்
முயலாமை வெல்லாது 
ஏட்டுச்சுரக்காயும் அப்படித்தான். 

8.சொல்புத்தி, செயல் புத்தி?
தலையில்  தண்ணீரை கொட்டி தலை முழுகி விட வேண்டியது தான். அவரவர் வாழ்க்கை அவரவர் கைகளில் 
சொல்வது நம் கடமை கேட்பது அவர்கள் இஷ்டம் 
என்னோட பாலிசி இது தான். 
 1.ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு. 
11.புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்; கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான் 
  
9. சுய நலவாதி? 
 அ.அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் ; அன்பு உடையார்,
என்பும் உரியர், பிறர்க்கு
அன்பும், பண்பும், இல்லாதவர்கள். காணும் அனைத்தையும் தமக்கென உரிமை கொண்டாடுபவர்கள். அவர்களை நாம் நம்ப வேண்டாம். 
‘உன்னைப்போல் பிறரையும் நேசி’  என்கின்றது  கிறிஸ்தவர்களின் பைபிள் 

10. முதல் கேள்விக்கு பதில்?
.வியவற்க எஞ்ஞான்றும் தன்னை, நயவற்க
நன்றி பயவா வினை.
.யான்எனது என்னும் செருக்குஅறுப்பான வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

14 நவம்பர் 2018

பெண்ணியம் பாலியல் ரிதியிலான சமத்துவத்துக்கு வழி காட்டுகின்றதா?

Femina என இலத்தீன் மொழியிலும்,Feminism என ஆங்கிலத்திலும், பெண்ணியம் என தமிழிலும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான குரலாக உலகமெங்கும் ஆணும்,பெண்ணும் சரி நிகரென கொள்வோம் என உரத்தொலித்துக்கொண்டிருக்கின்றது. .
அதி நவீன நாகரீக போர்வையில் இஷ்டப்படி வாழ்க்கைகளை திட்டமிட்டு குடும்ப கட்டுக்கோப்புக்களை உடைத்து வெளிவருவதே பெண் சுதந்திரம் என்போர் ஒரு புறம் கோசமிடுகின்றார்கள். தங்கள் மீதான அடக்குமுறையை தாமே உருவாக்குவதை புரிந்திடாமலே தம்மினத்தை தாமே அடக்கி அடங்குவோராய் மதம்,இனம்,, கலாச்சாரம் எனும் போர்வையில் வெளி உலகம் ஒன்றிருப்பதை அறியாமலே இன்னொரு பக்கம் வாழ்கின்றார்கள். இரண்டுக்கும் நடுவில் அங்குமிங்குமாய் அல்லாடும் மதில்மேல் பூனைகளாக கட்டுப்படுவதா கட்டை உடைப்பதா என துடித்து கொண்டிருக்கும் சிலரால் ஏற்படும் மீறுதல்கள் என பெண்ணியம் என்பதே கேலிக்குரிய வார்த்தையாகி போனது.
பெண்ணியம் என்றால் என்ன?
ஆண்,பெண் எனும் இரு பாலினத்தை பிரித்து வேறு படுத்துவது தான் பெண்ணியமா? நம் வீட்டு ஆண்களை எதிர்த்து போராடுவதை பெண்ணியம் ஊக்குவிக்கின்றதா? பெண்ணியசிந்தனைகள்,பெண்களை அடிமைப்படுத்தும் ஆண் சமுதாயத்தை அடிமைப்படுத்தி அடக்கி ஆள சொல்கின்றதா?
Feminism எனும் பெண்ணியம் பெண்மைக்குரிய இயல்புகளை உடையவள்/ன் என அர்த்தம் தருகின்றது. மனிதர்கள் ஆண்களுக்குள் பெண்மைக்குணங்களும் பெண்மைக்குள் ஆண்மைக்குணங்களும் கலந்தவர்களாக இயற்கையில் படைக்கப்பட்டிருக்கின்றார்கள். மனிதர்களில் உயர்வு தாழ்வு இல்லை என்கின்றது பெண்ணியம்.
ஆணும் பெண்ணும் சமத்துவமானவர்கள் என்பதே Feminism.
ஆண், பெண் என்பது இரு பாலினம். பாலினம் என்பதும் பெண்ணியம் என்பதும் வேறு வேறானவை. பாலினத்தையும் பெண்ணியத்தையும் தவறாக புரிந்து கொண்டோரே அனேகர். ஆண்களை எதிர்ப்பது பெண்ணியம் என்பதாகவும் பெண்ணுக்கு மட்டும் சார்பானதான உரிமைக் கோரலுடன் பெண்ணியக்கோட்பாடுகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன. பெண்ணியம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான ஒரு சொற்பிரயோகம்.ஆண்,பெண். இருவரும் சமத்துவமானவர்கள் என்கின்றது.
இக்கால பெண்ணிய வாதிகள் ஆண்களை எதிர்த்து வெல்வதே பெண்ணியம் என்கின்றார்கள்.
பெண்ணியக்கோட்பாடுகள் அல்லது இலக்குகள் எவை?
1.பெண்ணியம் என்பது பெண்களுக்கான சம உரிமைகளை மட்டும் பேசவில்லை. சமூகத்தில் ஒடுக்கப்படும் பெண்களுக்கான விழிப்புணர்வை கொடுத்து சமுதாயத்தை மாற்றியமைக்க சொல்கின்றது.
2.ஆண்கள்,பெண்களுக்கான சமத்துவம் குறித்த விழிப்புணர்வை பரவலாக்கும் படி சொல்கின்றது.
3.தங்களை தாங்களே உணரும் மனபக்குவத்தினை பெறும்படி அறிவுறுத்துகின்றது.
4.அரசியலில் ஆணுக்கு நிகரான பதவிகளை பெறுவதும் தலைமை வகிப்பதும்,நிர்வகிப்பதும்,/அப்படி கிடைக்கும் வாய்ப்புக்களை நம் பெண்கள் எப்படி துஷ்பிரயோகம் செய்கின்றார்கள் என்பதை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
5.பொருளாதாரம்,கல்வி என அனைத்திலும் சரி சம வாய்ப்புக்களை பெற்றுத்தரும்படியான உயர்வுகளை அடைவதுமான மாற்றங்களை விதைப்பதே பெண்ணிய சிந்தனை கொண்டோரின் நோக்கமாக இருக்க வேண்டும். .
இன்றைய பெண்ணிய வாதிகள் இன,மதம பண்பாடுகள் சார்ந்த கலாச்சாரங்களை எதிர்த்து செய்யப்படும் புரட்சியே பெண்ணியம் என்கின்றார்கள். பெண்களுக்கு சமத்துவம் எனும் பெயரின் வன்புணர்வு,பாலியல்,கள்ள உறவுகளில் Feminism தை நுழைத்து தவறாக வழி நடத்துகின்றார்கள். தாம் சார்ந்த சமூகத்தில் அரசியல்,பொருளாதார கட்டமைப்புக்களின் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி தமக்கான சமத்துவத்தை பெறுவதே பெண்ணியத்தில் இலக்கு என்பதை மறைத்து அல்லது மறந்து விட்டார்கள். பல பெண்ணியவாதிகள் பெண் சுதந்திரம்,சம உரிமை என்பதன் அடிப்படை புரிதலையே மாற்றி சமுதாய சீர்கேடுகளை விதைத்து கொண்டிருக்கின்றார்கள். **நாம் சார்ந்திருக்கும் சமூகத்தில் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார செயல்பாடுகளில் பெண்களின் சமத்துவம் என்பது எப்படிப்பட்டதாக இருக்கின்றது? **பெண்களாக நாங்கள் எங்கள் சமுதாயம் சார்ந்த சிந்தனைகளை எப்படி உருவாக்குகின்றோம்? பெண் அடக்குமுறைகளை எதிர்க்க பாலியல் ரிதியிலான சமத்துவமே தீர்வு எனும் பெண்ணிய வாதிகளின் செயல்பாடுகளை இனம் கண்டு ஒதுங்குவதும் பெண்ணிய சிந்தனைகளில் முக்கியமானதே. தவறான வழி நடத்தல்கள், பாகுபாடுகள், பிரிவினை பேதங்கள், குறுகிய மனப்பான்மை,பெண்களே பெண்களை எதிரிகளாக நினைப்பதும், அப்படி நினைக்கப்பட வேண்டும் என காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் போதனைகளும், பெண்களால் இணைந்து செயல் பட முடியாதெனும் ஆணிய சிந்தனைகளை உள் வாங்கி பெண்களே பெண்களுக்கூள் பொறாமையும், பெருமையும் கொண்டு ஒருவரை ஒருவர் எதிர்ப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். சிறந்த சிந்தனையும், விசாலமான அறிவும், தெளிந்த புத்தியையும்,நிதானமான அணுகுமுறையையும், தாய்மையையும்,பெண்மையின் மென்மையையும் வெளிக்கொண்டு வருவதே பெண்ணியம். பெண்களுக்கான சமத்துவம் என்பது ஆண்களிடமிருந்து பெண்களை பிரிந்து தனித்து வாழ சொல்கின்றதா? இல்லை. . அன்றும் இன்றும் என்றும் பல வீடுகளில் பெண்ணரசிகள் தான் ஆளுமை செய்கின்றார்கள். நிர்வகிக்கின்றார்கள். ஆண்கள் பெண்களுக்குள் தான் வாழ்கின்றார்கள். ஆண்கள் என்றுமே எம் எதிரிகள் இல்லை. ஆண்கள் எங்களுக்குள் அடங்குபவர்கள். விடுதலை என்பது நாம் யாரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்?
முதலில் நம்மிடமிருந்தும் பின்னர் சக பெண்களிடமிருந்தும் விடுதலை பெற வேண்டும். நமக்குள் அடைந்து கிடக்கும், அடிமைத்தன சிந்தனைகள்.கலாச்சார,பண்பாட்டு மூடத்தன செயல்பாடுகளிலிருந்து வெளி வந்து நமது ஆளுமைகளை வெளிப்படுத்த ஆரம்பிக்கும் போது மாற்றங்கள் நம்மிலிருந்து தொடங்கி விடும். முதலில் நம்மிலிருந்து,நம் வீட்டுஆண்,பெண் குழந்தைகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பெண்ணுக்கும்,ஆணுக்குமான் பேதங்கள் களையப்பட வேண்டும்,பெண்ணை விட ஆண் உயர்வு என நம் சிந்தனைகளை மாற்ற வேண்டும்.மனிதன் என்பதை விட மனிதம் போற்ற கற்பிக்க வேண்டும். Women - men / பெண்ணுக்குள் அடங்கியவன் ஆண் எனும் போது ஆணுக்குள் ஆண் எனும் பெருமையை புகுத்தியதும் பெண்ணான நாங்கள் தானே? ஆண்கள் எங்கள் எதிரிகள் இல்லை. அவர்கள் எங்கள் விரோதிகளும் இல்லை. எங்களிலிருந்து கருவாகி உருவானவர்கள்.. பொதுவாக ஆண்கள் பெண்மை எனும் தாய்மைக்குள்,அன்புக்குள் அடங்கி , கட்டுப்பட்டு வாழவே விரும்புவார்கள். பல நேரங்களில் ஆணுக்கென தனி சிந்தனை ,செயல்பாடுகள் இருப்பதே இல்லை.
பெண்ணுக்கு இருக்கும் தனித்துவம் போல் ஆண்களுக்குள் தனித்துவம் வெளிப்படுவதும் அரிதே.. மனைவியை அடக்கி ஆளும் ஆண்கள் தாய்க்கும்,மகளின் அன்புக்கும் கட்டுப்பட்டு நிற்பதும், மனைவி,தங்கை, மகள் என பாசத்தை பாகம் வைத்து தவிப்பதும் ஆணுக்குரிய பெலவீனம். பெண்கள் உடலளவில் பெலவீனமானவர்களாக இருந்தாலும் உளவியல் ரிதியான செயல் பாடுகளிலும்,பிரச்சனைகள் நேரம் முடிவெடுப்பதிலும் தெளிவான சிந்தனையும், நீண்ட கால திட்டமிடலும் கொண்டவர்களாகவும் அடுத்து வருவது முன் உணரும் மனப்பக்குவம் பெற்றவர்களாக இருக்கின்றார்கள்.பெண் தானாக அடிமைப்பட்டு, அடங்கி வாழும் வரை தான் மென்மையாளவள். ஆண்கள் அப்படி அல்ல.உடலளவில் பலமானவர்களாக மனதளவில் பலவீனர்களாக தங்களை தாங்களே நன்கு உணர்ந்திருக்கின்றார்கள். பெண் இல்லாமல ஆண் இல்லை என்பதை புரிந்து கொண்டவர்களாக பெண்களை அடக்கி ஆளுமை செய்வதை போன்ற மாயைக்குள் சிக்க வைத்து அவளை வைத்தே அவளை அடக்கி ஆள்கின்றார்கள்., பெண்ணுக்கு பெண் எதிரி எனும் ஆயுதமே அவர்கள் சர்வாயுதம் என்பதை ஆண்கள் புரிந்தே இருக்கின்றார்கள். பாலியல் ரிதியிலான வன்முறைகளை வைத்து அவளை குற்றமுள்ளவளாக மனம் குறுகி வாழ வைத்திருக்கின்றார்கள்.
ஆம்,தன்னை அடிமைப்படுத்தும் இம்மாதிரி சிந்தனைகளிலிருந்து வெளிவரச்சொல்கின்றது பெண்ணியக்கோட்பாடு.
பூமியை பெண்ணாக்கி,ஓடும் நதிகளை பெண்ணாக்கி, வீசும் காற்றை பெண்ணாக்கி,வணங்கும் தெய்வத்தை பெண்ணாக்கி கண்களால் காண முடியாத கற்பனைகளையெல்லாம் பெண்ணாக்கி பெருமிதப்படும் சமுகத்தில் பெண் மிதிக்கப்படுவது ஆச்சரியம் அல்லவா?
ஆதலால் முதலில் நம்மை நாம் உணர்வோம். நம்மிலிருந்தே மாற்றங்களை விதைப்போம்.
எமக்கான கட்டுகளை உடைத்து வெளி வருவதல்ல அந்த கட்டுக்களை நாம் நமக்கேற்ற விதமாக மாற்றுவதும்,எமக்காக கட்டமைப்புக்களை புதிதாக உருவாக்குவதும் செயல்படுத்துவதுமே பெண்ணியம். கனவு காண்பதையும் பெண்களுக்கான பாதிப்புக்களை கணக்கெடுத்து கண்ணீர் வடிப்பதை விட எமக்கான தீர்வுகளை நோக்கிய திட்டமிடலும், நகர்வுகளுமே நமது கனவுகளை நனவாக்கும். நாளை நமதே. நாளும் எமதே.
படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.

06 நவம்பர் 2018

நான் சின்னவளாக இருந்த போது - 6 காகமும் மனிதர்களும்

  நம் எல்லோருக்குமே நம் இளவயது நினைவுகள்  மறக்க முடியாதிருக்கும்.

 நானும் சின்னவளாக வாழ்ந்த காலத்தில் என் நான்கு வயதிலிருந்து நடந்த சம்பவங்கள் சில என் நினைவில் இருப்பது ஆச்சரியமானது தான். அதே போல் குட்டிக்குட்டி சிறுவர் பாடல்களும், செவிவழியாக தொடர்ந்து வந்த பாடல்களுமாக   இயற்றியவர்கள் யார் என தெரியாமலே  உச்சரிக்கப்பட்ட பாடல்கள் அனேகக்ம். அவைகளில்  என் நினைவில் இருக்கும் பாடல்கள் சிலதை தொகுப்பாக்கி  நான் சின்னவளாக இருந்த போது எனும் தலைப்பில் தொகுப்பாக்கி வந்தேன்.


அந்த வரிசையில் மீண்டும் தொடரும் இப்பதிவு. 

மனிதர்கள் வாழ்க்கையில்  சில  பறவையினம் ஒன்றிப்பிணைந்து வாழ்ந்திருக்கும், அதில் காகத்துக்கு முக்கிய இடம் இருக்கும்,  

காலையில் துயில் கலைவது முதல் நற்காரியங்களை தொடங்கவும், விருந்தினர் வரவை அறியவும், தீமைகளை , தீங்குகளை உணர்த்தவும் காகம் கரைவதை வைத்தே கணித்திருக்கின்றார்கள். 

பயணங்கள் நேரம் காகம்  நம் பின்னால் கரைந்தபடி வந்தால் பயணம் தடைப்படும், என்பதும் , வடமிருந்து இடம் பறந்தால்  நன்மை எனவும், இடமிருண்டு வலம் பறந்தால் தீமை எனவும், கணித்து  தூரப்பயணங்களை திட்டமிட்டோரும், வியாபரப்பயணங்களை மேற்கொண்டோரும் உண்டு. 

ஒற்றைக்காகம்  தனித்தே கரைந்தால் விருந்தினர் வரவோ, கடிதமோ வரும் என்பார்கள், அது கரையும் விதத்தில் நல்ல செய்தி வரப்போகின்றது,  கெட்ட செய்தி வரப்போகின்றது என முன் கூட்டி பேசிக்கொள்வதை நான் கேட்டிருக்கின்றேன். 

எங்கள் வீட்டில்  ஒத்தைகாகம் கரைந்தால் அம்மம்மா துரத்திகொண்டே இருப்பார். கரைதலில் இருக்கும் வித்தியாசம் இனம் கண்டு,, அந்த காக்கையை துரத்து, துக்க செய்தியை  வரப்போகுது என்பார்கள். 
அப்படியே ஆகி இருப்பதை உணர்ந்தும் இருக்கின்றேன். 

வானத்தில்  காகம்  ஒரு திசையிலிருந்து  இன்னொரு திசை நோக்கி கூட்டம் கூட்டமாக பறந்தால் எதிர் வரும் ஆபத்திலிருந்து தப்பி  பறந்து செல்கின்றதென சொல்வார்கள். காரணமில்லாமல் கரைந்துசத்தமிடும்  காகம், பஞ்சம் வரப் போவதையும்,  சுற்றிச் சுற்றிப் பறக்கும் காகம் எதிரிகள் தொல்லையையும், இரவில் அசாதாரணமாகப் பறக்கும் காகம் அந்தப் பகுதிக்கு ஏதோ ஆபத்து நேரிடப்போவதையும் முன் கூட்டியே அறிவிப்பதாக சொல்வார்கள். மழை வருமா, புயல் வருமா, அனைத்துக்கும்   இந்த மிருகங்கள், பறவைகள் நமக்கு முன்னறிவிப்பாளர்களாக  இருக்கின்றன. அதிலும் காகத்தில் கூரிய அறிவும் முன்னுணரும் தன்மையும் ஆச்சரியம் தருவதே.. பறவைகளில் காகத்துக்கே கூரிய அறிவித்திறன் அதிகம் என்பார்கள். தந்திரமும், சமார்த்தியமும் கொண்டது காகம். 

விருந்துகள் நேரமும், விரத நாட்களிலும், நினைவு காட்களிலும், அமாவாசை, திதி, தீபாவளி என முக்கியமான  நாட்களில்  சமைப்பதை முதலில் காகத்துக்கு வைத்து அவை கொத்தி தின்பதை கண்ட பின்பே  தாம் உண்பதும் தமிழர்  கடைப்பிடிக்கும் வழக்கம். அன்றாடம் சமைப்பதில் ஒரு பிடியை காக்கைக்கு  தனியே வாழை இலையில் எடுத்து வைத்து விடுவோரும் உண்டு. இன்று இவ்வழக்கங்கள் குறைந்திருக்கலாம் அக்காலங்களில்  காகத்தின் மூலம் முன்னோருக்கும், மூதாதையோருக்கும்  உணவழிப்பதாக சொல்லப்பட்டாலும் சமைக்கப்பட்ட உணவினால்  ஏதேனும் பாதிப்பு விஷத்தன்மை இருக்குமா எனும் சோதனையும் இதனூடாக அக்காலத்தில் நடந்திருக்குமோ எனபது கூட எனது யூகமாக இருக்கின்றது. 

எல்லாவற்றையும் விட காகம் மனிதர்களுக்கு ஒன்றுபட்டு வாழ்வதின் மகத்துவத்தை போதிக்கின்றது. தகக்கு கிடைக்கும் எதையும்  தனித்து உண்ணாமல் சத்தமிட்டு  தன் இன சனத்தை அழைத்தும் கொத்தி கொண்டு போய் கொடுத்தும்  பகிர்ந்துண்ணும் கலையை நமக்கு சொல்லி தந்திருக்கின்றது. 
கா...கா என்றே கரைந்திடும்

கழுத்தைத்திருப்பி பார்த்திடும்
இனிய உணவைக் கண்டதும் 
இனத்தைக் கத்திக் கூப்பிடும்

பகிர்ந்து உணவை உண்டிடும்
பழக்கம் தன்னை உணர்த்திடும்

காக்கை காட்டும் குணத்தினைக்
கருத்திற் கொண்டால் நலமாகும்
மாறிவரும் காலசூழலில் காகங்கள், சிட்டுக்குருவிகள் போன்ற பரவை இனங்கள் அழிந்து அரிதாகி வருவது கவலைக்குரியது. 

காகத்தை குறித்த சிறுவர் பாடல்களை பார்ப்போமா? 
காகம் ஒன்று காட்டிலே
தாகத்தாலே தவித்தது
வீட்டின் பக்கம் வந்தது
குடம் ஒன்று கண்டது
அந்தக்குடத்தின் அடியிலே
 கொஞ்சம் தண்ணீர் இருந்தது 
கல்லைப்பொறுக்கி போடவே 
தண்ணீர் மேலே வந்தது
ஆசை தீர குடித்தது
தாகம் தீர்ந்த காகமும் 
வேகமாக பறந்தது. 

மக்கள் வாழும் இடங்களில் அவர்களோடு இணைந்து கூட்டமாக வாழும்  காகங்கள் அனைத்துண்ணிகள் என்பதுடன், சூழலை சுத்தப்படுத்துவதில் காகங்களுக்கும்  முக்கிய பங்குண்டு.
காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்?
காக்கை:காணாத இடமெல்லாம் காணப் போனேன்

கண்டு வந்த புதினங்கள் சொல்லக்கேளும்
செட்டியார் வீட்டிலே கலியாணம்

சிவனார் கோயில் விழாக்கோலம்
மேரி வீட்டிலே கொண்டாட்டம்
மீன் பிடித்துறையிலே சனக்கூட்டம்
கண்டிப் பக்கம் குளிரோ கடுமை
காங்கேசன்துறையில் வெயிலோ கொடுமை.

பாட்டி சுட்ட வடைக்கதையில் காகம் நரியிடம் ஏமாந்து போனதாக சொன்னாலும்  அதன் உள்ளர்த்தம்  எவரையேனும் ஏய்த்து பிழைத்தால் நம்மையும் எவரேனும் ஏமாற்றக்காத்திருப்பார்கள் என்பதே. 
அதையும் கூட நாங்கள் மாற்றி எழுதி பாடிக்கொண்டோம். 

வள்ளியம்மைப்பாட்டி 
வடை சுட்டு விற்பாள்

பாட்டி சுட்ட வடையை 
தினம் ருசித்துத்தின்னும் காகம்

பாட்டி தந்த வடையொன்றை 
தின்னச்சென்ற காகத்தை

குள்ள நரியும் கண்டது 
தந்திரமொன்று செய்தது

காக்கை அக்கா நீ பாடு 
காது குளிர நான் கேட்பேன்

இனிமையான உன் குரலோசை
கேட்டு ரெம்ப நாளாச்சே...

என்றே நரியும் சொன்னதனால் 
நன்றே நினைத்த காக்கையது

வடையைக்காலில் வைத்துக்கொண்டே
கா, கா வென்றே பாடியது

ஏய்க்க நினைத்த நரியாரோ 
ஏமாறித்தான் போனாராம்

புத்தியான காக்கையது
புகழுக்கெல்லாம் மயங்காதாம் .

 ஆமாம் புத்திசாலி காகத்தை எவரும் ஏய்க்க முடியாதாம். 

இது ஒரு தொடர் பதிவு. 

மனித அம்மாக்களுக்கு கரடி அம்மா கற்றுத்தரும் பாடம் என்ன?

வீடியோ சொல்லும் அருமையான வாழ்க்கைப்பாடம். 

குட்டிக்கரடியின் அக்டிவிட்டி, விடா முயற்சி,  இலக்கை அடையும் வரை  சோர்ந்து விடாமல், விழுந்தாலும்  நின்று நிதானிக்காமல் அம்மாவை தேடி அழாமல்  தன் இலக்கை  மட்டுமே நோக்கிய பயணம்,  அழகான   வாழ்க்கைப்போதனையை தருகின்றது. 

வீடியோவை பார்த்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் திக் திக, கண் கொட்டாமல் பார்த்து கொண்டே இருந்தேன். எத்தனை முயற்சி. கடைசியில் சட்டென கிட்டத்தட்ட 3000 அடி சறுக்கி கீழே வந்தும் மீண்டும் மீண்டும் முயற்சித்து தாயுடன் இணைந்ததும் தாய்க்கரடி தூக்கி கொஞ்சவும் இல்லை, நின்று நிதானிக்கவும் இல்லை. மாலை மரியாதையும் இல்லை.  ஆஹா ஓஓ ஓஹோ    நான் மேலேறி வந்திட்டேன் என  ஆர்ப்பரிப்பும் இல்லை.  அம்மாக்கரடி வீர நடை போட்டு முன்  நடக்கின்றது. குட்டிக்கரடி அம்மாவை பின் தொடர்கின்றது.

மனித அம்மாக்களுக்கு கரடி அம்மா கற்றுத்தரும் பாடம் என்ன?

அம்மாக்கரடி குட்டிக்கரடிக்கு உதவி செய்ய எப்போது வேண்டுமானலும் சர்ர்ர்ர்ர்னு சறுக்கி வரும் என நப்பாசை ... பிள்ளைக்கரடி விழுந்து விழுந்து மேலே போய் திரும்ப விழுந்து .... என்ன அம்மா இந்த அம்மாக்கரடி என என் மனதுக்குள் திட்டி தீர்த்தேன்.

மனது கேட்காமல் ஒரே ஒரு முறை கிட்ட வரும் குட்டியை எக்கிப்பிடிக்க முயற்சிக்க அதுவே பிள்ளைக்கரடிக்கு பதற்றம் தந்து முன்னரை விட நீண்ட தூரம் கீழே சறுக்க... அதன் பின் அம்மாக்கரடியின் பதற்றம் அதன் நடையில் தெரிகின்றது. ஆனாலும் மனித அம்மாக்கள் போல் என் பிள்ளையை பிடிக்க போகின்றேன் என தானும் சர்ர்ர்ர்னு சறுக்கவில்லை.

நீயாக மேலேறி வா.. நான் உனக்காக காத்திருக்கின்றேன் என அங்குமிங்கும், நடந்த படி காத்திருக்கின்றது. உன்னை விட்டு எங்கேயும் போகவில்லை, உன்னுடன் இருக்கின்றேன் என அப்பப்போ தன்னை வெளிப்படுத்துகின்றது.

இந்த கரடி அம்மா உலகின் அற்புதமான அம்மா.

எல்லா அம்மாக்களுக்கும் தன் பிள்ளை சாதிக்க வேண்டும் எனும் ஆசை தான். ஆனால் அதை எப்படி நாம் பிள்ளைக்குள் ஊன்றுகின்றோம் எனும் வாழ்க்கை பாடத்தினை கற்று தரும் கரடி
ஷோ ஸ்வீட். ஐ லவ் அம்மா அண்ட் குட்டிக்கரடி.
முயலும் வெல்லும். 
ஆமையும் வெல்லும்
முயலாமை வெல்லாது.

முடியாது என்று சொல்பவன் முட்டாள்..!
முடியுமா என்று கேட்பவன் மூடன்!! 
முடியும் என்று முயற்சிப்பவனே மனிதன் ...!!!

 விடா முயற்சி எனும் வாழ்க்கை பாடத்தினை கற்றுத்தரும் கரடிகுட்டி.
அதன் முயற்சிகாக காத்திருக்கும் அம்மா.   

Life is hart.but so am I.!!! 

 நாம் யாராக வேண்டும் என நாம் தான் தீர்மானிக்க வேண்டும், 
சாதாரண வீடியோ தான் ஆனால் அது தரும்  உந்து சக்தி அசாத்தியமானது. 
கரடிக்குட்டியின் விடா முயற்சி நாம் யாராக வேண்டும் என கற்றுத்தருகின்றது.
“Never, never, never give up.”