14 மே 2017

அன்னையர் தின வாழ்த்தென்பது...!

முந்தா நாள் குடித்த 
டீக்கப்பும், 
நேற்று சாப்பிட்ட எச்சில் தட்டும் 
மூலையெங்கும் சிதறிக்கிடக்கும்
அழுக்கு ஆடைகளும், 
துவைத்து மடித்ததை 
எடுத்தடுக்க உதவாத 
உள்ளங்களுமாய்

விண் தொட்டாலும் 
மண்ணுக்குள் மனம் புதைத்து

ஒற்றை ரோஜாவும், 
ஒரு நாள்” நினைவும்
ஒரிரு வார்த்தைகளும்
போதுமென 
நினைப்போரின் 
அன்னையென்பதை விட 
அனாதையாய் இருத்தல் சிறப்பே.

அன்னையின் மனதை கொன்று 
அவள் சமாதி மேல் வைத்த 
மலர் வளையங்களாய்

அன்னையர் தினத்தின வாழ்த்து!

11 மே 2017

இலக்கில்லாத ஓட்டத்தில் இலக்கியத்துக்கு இடம் இல்லை.

எல்லோரும் நலமாக இருப்பதோடு  எவர் பதிவிலும் பின்னூட்டமிடாமலும் என் பக்கம் பதிவிடாமலும் போனதனாலே என்னை மறந்தும் போயிருக்க மாட்டீர்கள் என நினைக்கின்றேன். 
அவர்கள் உண்மைகளும், ஏஞ்சலின், ஆதிரா, கீதா என பட்டாளம் எப்போதும் போல வலையை கலகலக்க வைப்பதை படித்து  நானும் ஏதேனும் எழுத வேண்டுமே  என என் கையும் மனமும் துறுதுறுவென அரித்தாலும் உண்மையில்  முடியவில்லை. 
 என்னைப்பற்றி நான் என எந்த நேரம் எழுத வேண்டும் எனும் அன்புக்கட்டளையோடு மனசு தள குமார் மெயிலிட்டாரோ அன்றிலிருந்து ஓய்வில்லாத ஓட்டம். 
எதைத்தேடி ஓடுகின்றேன்?
இதன் இலக்கு என்ன? 
  ஒருவகை மாயை வலையாய் என்னை சுற்றி நிற்கும் ஈவண்ட்ஸ் தொடர் ஆர்டர்களுடன்., சுவிஸுக்கு வருகை தரும் உல்லாசப்பயணிகள் அதாவது   எங்கள் பகுதி உல்லாசப்பயணிகளுக்கு பிரதானமாக இடம் என்பதனால் இந்தபக்கமாக வரும்  இந்திய பயணியருக்கான உணவுக்கான கன்ராக்ட்   என   நாளாந்தம் 300 உணவுகள்  தயார் செய்ய வேண்டி இருப்பதனாலும், புதிய வேலையாட்களுக்கு வேலைகளை எங்கள் நிறுவனத்துக்கு ஏற்ப பழக்க வேண்டி இருப்பதனாலும்  ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்  காலை ஒன்பது  முதல் இரவு பன்னிரண்டு வரையில் எங்கள் ஹோட்டலில் குடியிருக்க ஆரம்பித்ததான ஓட்டத்துக்கு இலக்கில்லாமல்   இருக்கின்றதோ எனும் ஐயம் தோன்றுகின்றது. இந்த ஓட்டம் எப்போது  முடியும்? எனக்கே தெரியவில்லை. இலக்கில்லாத சாதனை ஓட்டத்தில் இலக்கியத்துக்கு இடமும் இல்லை.

போதும் எனும் மனமே பொன் செய்யும் மருந்து என்பார்கள். பல விடயத்தில் நான் போதும் போதும் என நினைத்து செயல்படுவதனாலோ என்னமோ எனக்கான இலக்குகள் விரிந்து கொண்டு..... நான் தேடாமலே  வழிகளை விசாலமாக்கிக்கொண்டு  சென்று கொண்டே இருக்கின்றது.

இல்லை இல்லை இல்லை என இல்லை யால் தொல்லைப்படுவோர் மத்தியில் போதும் போதும் என நான் சொல்லி விலகினாலும் விலக முடியாத சிலந்தி வலைபோல்  நிறுவனத்தின் வளர்ச்சியும், வேகமும் நேரடியாக என்னை சந்திப்போர் தரும் பாராட்டுக்களும் பிரமிப்புக்களுமாக  என் எல்லைகளை விரித்துக்கொண்டே செல்கின்றனர். 

இந்த மாதத்தில் நான் கற்ற்தும் பெற்றதுமாக முக்கிய செய்தி உண்டெனில் 
ஒவ்வொரு முதலாளியும் அவர்தம் நிறுவனத்தின் முதல் தொழியாளியாகும்  போது மட்டுமே உழைப்பாளிகளின் உணர்வுகளை 
புரிந்திட முடியும்.

நம் நிறுவனம் சிறப்பாக நற்பெயரோடு இயங்க தொழிலாளிகளாம் உழைப்பாளர்களின்  மன மகிழ்ச்சியும், உண்மையும் நேர்மையும் அவசியம் எனதைபுரிந்தவர்கள் இலக்குகளுக்கு எல்லை இல்லை. 
முதலாளியாக நாம் தொடர்ந்து நீடித்து நிலைக்க  தொழிலாளிகளின் அனைத்து  பணியிலும் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் உணர்வுகளும்  தேவைகளும் நமக்கு புரியும்.  நம்மால் இயலாத ஒன்றை  நம்மிடம்   பணத்தேவைக்காக வேலை செய்யும் தொழிலாளிகள் மேல் திணிப்பதும் அவர்களின் பணிகளைக்குறித்து அறியாமல் கால நேரங்களை நிர்ணயித்து நாமே முடிவெடுத்து மனிதர்களை மாடுகளாய் நடத்த நினைப்பதும் நம் நிறுவன வளர்ச்சிக்கு நல்லதல்ல.   
அர்ப்பணிப்போடு வேலைக்கு வரும் உண்மையும் நேர்மையுமான தொழிலாளர்களை கண்டு பிடிப்பது கடினம் எனில் அவர்களை இழக்காமல் தக்க வைத்துக்கொள்வது அதை விட கடினம். 
இம்மாதிரி நிரம்ப கற்றல்களும் பெற்றல்களுமாக  சுவிஸில் இன்னொரு கேட்டரிங்க நிறுவனத்தோடு இணைந்து எங்கள் ஹேகாஸ் கேட்டரிங்கும் தனக்காக புதிய பாதையில்  மிக வேகமாக பயணித்துக்கொண்டிருக்கின்றது.  
➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽
இணையத்தை அதிலும் பேஸ்புக்கைக்குறித்து எதிர்மறையான சிந்தனைகள் புரிதல்கள் பல இருந்தாலும்  கடந்த பத்தாண்டுகால இணைய அனுபவத்தில் நான் இங்கு கண்டதெல்லாம் நன்மையும்   நல்லவர்களின் அன்பும் நட்பும் மட்டுமே என்பதனால்  இன்று வரை இணையத்தொடர்புகளை சரியாகவே பயன் படுத்தி கொண்டு வந்திருக்கின்றேன், 
 பேஸ்புக்கை நான் நீண்ட காலமாக லைக் பேஜ் மூலம்  வியாபார தொடர்பாடல் களமாக பயன் படுத்துவதன் மூலம் சுவிஸில் பல ஆர்டர்களை பெற்றிருந்தாலும் கடந்த வருடத்தில் ஜேர்மனிலிருந்து வந்த ஆர்ட்கள் சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது போயிருக்கின்றது. 
   
கடந்த நான்கு நாட்கள் இந்தியாவிலிருந்து வந்திருந்த உல்லாசப்பயணிகளுக்கான  மதிய இரவு உணவுக்குரிய மொத்த ஆர்டர்களும்,  எங்கள் பேஸ்புக் லைக்பேஜில் நான் இடும் புகைப்படங்கள் பார்த்தும் கருத்துக்களை படித்துமே உங்களை நாங்களாக மெயில் மூலம் தொடர்பு கொண்டோம் என சொன்னார்கள். .. அடுத்து வரும் தொடர் பயணத்திட்டங்களிற்கும் எங்களிடம் உணவு ஆர்டர் செய்வதாகவும் சொல்லி சென்றிருக்கின்றார்கள். 
இணையத்தினை நாங்கள் பலவகைகளில் நன்மையாக  இலவச விளம்பரத்தேவைக்கும் பயன் படுத்தலாம் என்பதனால் நானும் இனி இங்கும் என் நிறுவனத்தினை விளம்பரப்படுத்த நினைத்திருக்கின்றேன். 

தங்கள் விடுமுறைக்காக சுவிஸ் வர திட்டமிடும் நட்பூக்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.  உணவு மற்றும் தங்குமிடதேவைகளை மிகக்குறைந்த செலவில் செய்து தருவோம் என்பதோடு சைவ, அசைவ ஜெயின் உணவுகளை  வீட்டுச்சாப்பாட்டு சுவையில் பக்குவமாக தரமாக பொருட்களை கொண்டு சுவையாக சமைத்தும் தருவோம். 

பயணத்திட்டங்களை  திட்டமிடும் நிறுவனங்கள்,  சினிமா படப்பிடிப்புக்களுக்காக குழுக்களாக வருவோரும் தொடர்பு கொள்ளலாம், 
எங்கள் லைக் பேஜ் புகைப்படங்கள் அனைத்தும் எங்கள் நிறுவன சொந்த அலங்கரிப்புப்படங்களே!
இணைப்பை சொடுக்கினால் படங்களின் அணிவகுப்பை காணலாம். . 

➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽
கடந்த வாரத்தில் எங்கள் திருமண மண்டபத்தில்  நடந்த பிறந்த நாள் விருந்தின் உணவுகளின்  அலங்காரமும் அணிவகுப்பும்.  


வரவேற்பு சிற்றுண்டிகளாக... 
ஆட்டிறைச்சியில் செய்யப்பட்ட  ரோல்ஸ், மீன் உருளைக்கிழங்கு சேர்ந்த  கட்லெட், மரக்கறி வைத்த சமோசா, செர்ரி தக்காளி, சீஸ், ஓலிவ்காய் மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பூக்கொத்துடன் பல வகை வெஜ் குட்டிப்பிட்சாக்களும் காப்பி, தேனீர் ஆரஞ்சு பானங்களும் இந்த மேசையில் உள்ளது. 
மாம்பழத்துண்டங்களுடன் மெலோனும் பெஷன் ப்ருட் ஐஸ்கிரிமும் இங்குண்டு. 

அன்றைய நாள் மேடை அலங்காரம், பிறந்த நாள் கேக் வைக்க முன். 




 உணவுக்கு பின்  இனிப்பு உணவுகள் அன்னாசி,ஆரஞ்சு, மா, திராட்சை, ஸ்டோபெர்ரி,  தர்பூசனி, மாதுளம்  பழங்களின் அலங்கரிப்பும்,  பன்ன்ங்கொத்தா, திராமீசூ எனும் சுவிஸ் நாட்டு ஸ்பெஷல்  இனிப்பும் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றது. 

செர்ரி தக்காளி, சீஸ், ஓலிவ்காய் மற்றும் வெள்ளரிகாய் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பூக்கொத்து. 
இத்தனையும்  என் நேரடி திட்டமிடலிலும், தயாரிப்பிலும் என்பதனால் தினந்தோறும் என் சிந்தனைகள்  நிறுவன வளர்ச்சி, அதற்கான திட்டமிடல், பிள்ளைகளின் தேவைகள் நேரத்துக்கு உணவு மற்றும் வீட்டுத்தேவைகளை கவனித்து நிறுவனத்தினையும் நடத்துதல் என எழுத்துக்காக சிந்தனையை தூரமாக்கி விட்டது.

மீண்டும் வரும் வரை.....  நிச்சயம் வருவேன்.