06 டிசம்பர் 2015

தேவைகள் இனிமேல் தான் அதிகமாகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக தேவைகள் மட்டும்அல்ல!அவர்களின் தேடலின் போதான நமது கரம் கொடுத்தலும் இனிமேல் தான் அதிகமாகின்றது.

உணர்ச்சி வேகத்தில் இப்போதைக்கு அனைவரும் அள்ளிக்கொடுக்கலாம்.
நிஜமான வாழ்வாதார போராட்டமும்தேவைகளும் இனிமேல் தான் அதிகமாகின்றது.தூரத்தில் இருந்தாலும் அறிந்த செய்திகளை வைத்து பார்க்கும் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை பொருட்களை இழந்து நிர்க்கதி ஆகி இருக்கின்றார்கள்.

இன்றையை வெள்ளச்சூழலில் திறந்து விடப்பட்ட மண்டபங்கள், வீடுகள், 
மசூதிகள், பாடசாலைகள் ஒரு வாரமோ ஒரு மாதமோ தற்காலிக தங்குமிடம் தான் அதன் பின் வானமே கூரை எனும் கையறு நிலையில் மக்கள்! மழை முடிந்து வெள்ளம் வடிந்ததும் தான் தேவைகள் அதிகம் இருக்கும் 

இலட்சக்கணக்கான மக்கள் முக்கியமாக குடிசை மக்கள் அனைத்தினையும் இழந்து பூஜ்ஜியத்திலிருந்து தம் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியநிலையில் இருப்பார்கள்.

காப்புறுதிக்காரர்களும் நிச்சயம் திணறித்தான் போவார்கள். அரசு அனைவருக்கும் இழப்பிடு தரமுடியுமா என்பதே கேள்விக்குறிதான் எனும் போது அரசை நம்புவதும் முட்டுசுவரில் முட்டிக்கொள்வதும் ஒன்றுதான். நான்காயிரமோ ஐந்தாயிரமோ தலைக்கு இவ்வளவு என இழப்பீடு கொடுத்து விட்டு ஒதுங்கினாலும் ஆச்சரிய்ப்படுவதற்கில்லை.அதில் பாதியோ முழுவதுமோ டாஸ்மாஸ் மூலம் அவர்களுக்கே சென்று விடும் எனும் நம்பிக்கையோடு தான் கொடுப்பார்கள் என்பது என்னவோ நிச்சயம் தான்.

இந்த இக்கட்டான நேரத்தில் வெளிநாட்டில் இருப்போர் பொறுத்திருந்து எங்கே தேவை என ஆராய்ந்து தனியாகவோ குழுவாகவோ உதவலாம்.
வானமே எல்லை என நிற்கபோகும் மக்களுக்கு தற்காலிக கூடாரம் அடிக்க கூட வசதி இருக்காதே! அப்போது தான் நம் அனைவரின் பங்களிப்பும் அவசியமாகின்றது. உதவும் உள்ளங்கள் தம்மால் இயன்றபடி ஒரு கிராமத்தினையோ.தெருவினையோ,
குடும்பத்தினையோ முழுமையாக பொறுப்பெடுத்து தற்காலிக குடிசை போட தகரம் பாய், ஒலைகள், போர்வை கூடவே அரிசி பருப்பு போன்ற மளிகை மட்டுமல்ல பாத்திரம் பண்டங்கள்,பாடசாலை உபகரணங்கள் என பல தேவைகளை நிறைவாக்கலாம்.

யாருக்கு தேவை அதிகமோ அவர்களை தேர்ந்தெடுத்து நேரடியாக உதவலாம். அதிலும் பணமாக கொடுக்காமல் பொருட்களாக கொடுத்தால் அவைகள்  டாஸ்மாக் க்கு செல்லாமல் இருக்கும். இந்த மழையிலும், வெள்ளத்திலும் கூட டாஸ்மாக் திறந்திருந்ததே இதற்குசாட்சியாய் இருக்கின்றதே!

எனவே உறவுகளே உங்கள் உதவிகளை உணர்வு பூர்வமாக அணுகாமல் அறிவு பூர்வமாக அணுக வேண்டுகின்றேன்.

இனியும் அடுத்தடுத்த வாரங்களில் ....!
மழை ஓய்ந்தாலும்...... தேடல்களுடனானதேவைகள் ஓயாது!
உணவுப்பொருட்கள்
பாத்திரம்பண்டங்கள். 
பாடசாலை உபகரணங்கள்
குடிசைபோடதேவையான தகரங்கள், சீட்கள், ஓலைகள், போர்வைகள், 
பாய்கள், பிளாஸ்டிக் வாளிகள், துணிமணிகள் என ஒரு குடும்பம் தொடங்க நம்மால் என்ன செய்ய இயலுமோ அவைகளை குறித்து சிந்தித்து எங்கே எவருக்கு நம் தேவை அவசியமோ அங்கே நம் கவனம் செல்லட்டும்.  

ஆயிரம் இலட்சங்களில் உதவ முடியாவிட்டாலும்  ஐம்பது நூறு என நீங்கள் குழுவாக இணைந்து கூட செய்யலாம். தனித்தனியே செயல் படாமல் குழுவாக இணைந்து ஒரு குடும்பத்தையேனும் தத்தெடுங்கள்.

அங்கொன்றும் இங்கென்றுமாய் எங்கணும் அலைந்து எதையும் முழுமையாக செய்யாமல் ஏதோ செய்தோம் என பெயருக்கு உதவாமல் நம் செயல்பாடுகள் நிச்சயம் ஒருவருக்கேனும் பயன் பட்டது என மனத்திருப்திஅடையும் படி செயல் படுங்கள். தேவையறிந்து உதவுங்கள்.நேரத்தினையும் பணத்தினையும் சேமியுங்கள்,! பணத்தையோ பொருளையோ, உணவையோ வீண் விரயம் செய்யாமலும் தகுதியற்றவர்களுக்கு நம் உதவி சேராமலும் இருக்கும்படி நிதானமாக செயல்படுங்கள். குழுக்களை இணைக்கும் பொழுது கணக்கு வழக்குகள் அனைத்தையும் பொதுவாக பேசி வெளிப்படையாக கையாள்வது இனியொரு பொழுதில் இக்கட்டு நேரம் உங்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்பட உதவும். 

டிப்ஸ்
எவர் உதவுவதானாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமாக கொடுக்காதீர்கள் சிரமமாயிருந்தாலும் பொருளாக கொடுங்கள். அவை நீண்ட காலம் உங்கள் பெயர் சொல்லி வாழ்த்தி வணங்கும்.

இலங்கையில்சுனாமி,புயல்,வெள்ளம், யுத்தம் என பாதிப்பு தொடர்ந்த 
போதெல்லாம் எம்மால் இயன்றதை செய்திருக்கும் அனுபவத்தில் எழுதிய பதிவு இது. 

யுத்தம்..சுனாமி மீண்டும் வெள்ளம் என இலங்கையில் கடலோர மக்கள் பாதிக்கப்பட்டபோது உணர்ச்சி வேகத்தில் உடனடி உதவிகள் பல கிடைத்தது. ஆனால் நாட்கள் சென்றபோதோ.... தற்காலிகமாக தங்க அனுமதித்த பாடசாலைகள்,கோயில்களை விட்டு உடனடியாக இரு நாட்களில்மக்களை வெளியேற சொன்ன போதுதான் தவித்து போனார்கள். எங்கே செல்வோம், என்ன செய்வோம் என நடுத்தெருவில் நின்ற சூழலில் நாங்கள் செயல்பட்டோம். அதற்கு முன் சுவிஸிலிருந்து ஆறு கண்டெய்னர்களில் துணிகள் அனுப்பி ஊருக்கே பகிர்ந்தளித்திருந்தாலும் பணமாக கொடுப்பதை தவிர்த்து தேயிலை,சீனி, உலர் பால்மா, பிஸ்கட்,அரிசி பருப்பு, எண்ணெய்,ஷோப், தீப்பெட்டி, மெழுகுதிரி போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொண்ட 100 பைகளுடன் பிளாஸ்டிக் பாஸ்கெட்,கூடாரம் போட தேவையாக் சீட்கள், தகரங்கள், ஓலைகள், பாய்கள், போர்வைகள் என மிக முக்கியமாக வீடிழந்தோரை கவனத்தில் கொண்டோம். எங்களால் ஆயிரம் பேருக்கு செய்ய முடியவில்லை தான். பத்து பேருக்கு தங்குமிட உதவி செய்தோம் எனும் மன் திருப்தியும்100 குடும்பம் ஒருவாரமாவது உயிர் வாழ உதவினோம் எனும் நிறைவும் இன்று வரை என்னுள் இருக்கின்றது. கூடவே மருத்துவ முகாம்களை நடத்தி தன்னார்வ சேவையாளனான் என் தம்பி டாக்டர் புஷ்பகாந்தன் செயல் பட்டான் என்பதை இந்த நேரத்தில் நான் நன்றியோடு நினைவு கூருகின்றேன். வயதில் சிறியவனாயிருந்தாலும் அனைத்தினையும் என் கவனத்தில் கொண்டு வந்து என் சிந்தனைகளை செயலாக்கியவன்! அவனும் அவனுடனிணைந்த நட்புக்களும்.என்னுடன் இணைந்து  உதவியவர்கள் முத்தமிழ் மன்ற அன்புறவுகள்! அனைவருக்கும் நன்றி!

என்னுடன் கடந்த பல வருடங்களாக இணைந்து  நான் உதவுகள் என கேட்கும் போதெல்லாம் இல்லையே என சொல்லாது எவ்வளவு எதிர்பார்க்கின்றீர்கள் நிஷா என கேட்டு சொன்னபடியே செயலிலும் காட்டும் நைஜிரியாவிலிருக்கும் அன்பு ஜெய்சங்கர் அண்ணா, எங்கே எது நடந்தாலும் தங்கச்சி நாமும் ஏதேனும் செய்யணுமே என துடிக்கும் பரஞ்சோதிஎனப்படும் என்பாசமான சுரேஷ் அண்ணா,இவர்களுடன் தான் பட்ட கஷ்டம் தன் சந்ததி படக்கூடாது என வருடா வருடம் நூற்றுக்கணக்காக பள்ளிக்குழந்தைகளுக்கு 
அவ்வாண்டுத்தேவைக்கான பாடசாலை உபகரணங்கள் வாங்கி கொடுப்பதோடு ஏழைப்பெண்களுக்கு திருமண உதவிகள் செய்யும் என் அன்பின் தம்பி அட்டாளைச்சேனையை சேர்ந்த கட்டாரில் வசிக்கும் முஸம்மில் எனும் நண்பன்,அபுதாபியில் இருக்கும் முஹைதீன் விஞ்ஞானி இலமூரியன் ஐயா, குவைத்திலிருக்கும் மஞ்சுசுபாஷினிஅக்கா,சிவஹரி, பிரான்சிலிருக்கும் றெனிநிமல் இவர்களுடன் என் உயிர் நட்புக்கள், அப்போது நான் வேலை பார்த்த நிறுவனத்தின் டைரக்டரும்,உடன்பணி செய்வோரும், என்அயலில் இருக்கும் சுவிஸ் நட்புக்கள் என அனைவரையும் நன்றியோடு நினைவு கூருகின்றேன்.அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் செலுத்துகின்றேன்.

பாதிப்பு என அறிந்திட்ட அந்த நொடியிலிருந்து பணம் மட்டுமல்ல துணீகளாக, பொருட்களாக, மருந்துகளாக கொண்டு வந்து குவித்தார்கள்.அத்தனையையும் ஒருங்கிணைத்து கார்கோவில் போட்டது என் சொந்த பணத்தில் நிவாரணத்துக்கு என வந்த தொகையில் எதையும்போக்குவரத்து மற்றும் தொலைபேசிதொடர்புகள் சம்பநதமான செலவுக்கு என கணக்கில் காட்டாமல் யாருக்கெல்லாம் உதவினோமோ அவர்களிடம் கடிதங்கள் பெற்று போட்டோவும் எடுத்து உங்கள் பணம் இந்த நபருக்கு கொண்டு சேர்க்கப்ட்டது நன்றி என என் தம்பியும் பெற்றுகொண்டவர்களும்  ஒரு நன்றியுரை காட் அனுப்பி அதையும் உதவியவர்களிடமே சேர்ப்பித்தேன்.

மிகக்கடினமான பணி தான். அனைவருக்கும் அனைத்தினையும் என்னால் தனித்து செய்ய இயலாததால் எங்கே தேவைகள் உண்டோ அத்தேவை குறித்து யாரால் உதவ முடியும் என விசாரித்து உதவி செய்பவருக்கும் உதவியை பெறுபவருக்கும் பாலமாக இருப்பதில் மனம் நிறைகின்றது.

13 கருத்துகள்:

  1. வணக்கம்

    நிச்சயம் உதவும் கரங்கள் உதவும்... மிகத் தெளிவாக எழுதியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன-

    பதிலளிநீக்கு
  2. மிகப் பொருத்தமான தேவையான தகவல்,
    சேகரிக்கப்பட்ட பொருள்கள் பயன்படாமல் இருப்பதாகவும் செய்தி.
    தாங்கள் சொல்வது போல் தொடரும் நாட்களில் அவர்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கச் வழி செய்யலாம்,
    தங்களுடன் சேர்ந்து உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எம் நன்றிகள்.
    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. //நான்காயிரமோ ஐந்தாயிரமோ தலைக்கு இவ்வளவு என இழப்பீடு கொடுத்து விட்டு ஒதுங்கினாலும் ஆச்சரிய்ப்படுவதற்கில்லை. அதில் பாதியோ முழுவதுமோ டாஸ்மாஸ் மூலம் அவர்களுக்கே சென்று விடும் எனும் நம்பிக்கையோடு தான் கொடுப்பார்கள் என்பது என்னவோ நிச்சயம் தான்//
    உண்மையான விடயம்
    அருமை விரிவான விளக்கங்கள் தொடரட்டும் தங்களது பணி

    பதிலளிநீக்கு
  4. தேவையான நேரத்தில் மிகவும் பெறுமதியான தகவல்களுடன் உங்கள் பதிவைப் பார்க்கிறேன் உதவும் கரங்களுக்கு என்றும் என் நன்றியும் வாழ்த்துக்களும் இறைவன் உங்களுடன் இருக்கிறான் உங்கள் பணி சிறக்கட்டும் இன்னும் உங்கள் ஆரோக்கியத்திற்கு இறைவனே பொறுப்பாக்கியுள்ளேன் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறான்
    நிறைய எழுத வேண்டும் நேரமின்மை சுருக்கிக்கொண்டேன்
    நன்றியுடன் நண்பன்

    பதிலளிநீக்கு
  5. உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு
    சில வேண்டுதல்கள்...

    இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
    மணிதம் இன்னும் மரிக்கவில்லை
    என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
    நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
    நிறையவே நாம் ஜாக்கிரதையாக
    செயல்பட வேண்டிய தருணம் இது...

    அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
    வேண்டுதல்கள்..

    1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.

    2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..

    3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.

    4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.

    5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    உதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உள்ள மக்கள் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..

    நோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.

    உதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் சொல்லும் விஷயங்கள் உங்கள் அனுபவங்களிலிருந்து எழுதப் பட்டுள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது. கவனத்தில் கொள்ளப் பட வேண்டிய விஷயங்கள். உதவி பெரும் மக்களிலேயே கூட ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் பொருட்களை வாங்கி ஸ்டாக் செய்து கொள்வது, சிலர் அதை உள்ளுக்குள்ளேயே விற்பது போன்றவற்றையும் காண முடிந்தது என்று சொன்னார்கள். ஆனால் அது மிகச் சொற்பமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஸ்ரீராம். ஒரு சில பகுதிகளில் மட்டுமே. அது நடக்கின்றது. கண்கூடாகக் கண்டேன்..

      கீதா

      நீக்கு
    2. இந்த விடயத்திலும் கவனமாக இருந்தோம், ஒரு பகுதிக்கு செல்லும் போது அப்பகுதி மாநகர கவுன்சிலர்,
      ஊரின் பெருந்தலைகள் ஆசிரியர்கள்
      என முக்கியஸ்தர்களுடன் இணைந்து மிகவும் பாதிக்கப்ட்ட குடும்பங்கள் வீடின்றி நிர்க்கதியான 100 குடும்பங்களை மட்டும் தெரிந்தெடுத்து முக்கியஸ்தர்கள் முன்னிலையிலேயே ஒரே நாளில் வழங்கினோம். அதனால் ஏமாறவும்,ஏமாற்றவும் வாய்ப்பு தவிர்க்கப்படுகின்றது.

      நீக்கு
  7. அருமையான கட்டுரை, இதனை தன்னார்வத் தொண்டு செய்பவர்களுக்கு அனுப்பி வைக்கணும்.

    இனிமேல் தான் மக்களின் தேவைகள் அதிகரிகும், ஆதங்கம், கோபம் எல்லாம் வெளிப்படும்.

    வீடிழ்ந்த ஏழை மக்களுக்கு மேலே சொன்னது எல்லாம் தேவை.

    புத்தங்களை இணையத்தில் கிடைக்கும் பிடிஎப் வழியாக எடுக்கலாம், மற்ற உபகரணங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கணும்.

    குளிர்காலம் விரைவில் வரயிருப்பதால் மேலும் இன்னல்கள்.

    என்னால் ஆன உதவிகளை விரைவில் செய்யவிருக்கிறேன்.
    நன்றி தங்கை.

    பதிலளிநீக்கு
  8. தோழர் அன்பே சிவம் அவர்களின் கருத்துகள் அருமை, அக்கறையான ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. நிஷா சகோ உக்னள் கருத்துகள் அனைத்தும் அருமை. நாங்களும் கிட்டத்தட்ட இது போன்று பரிந்துரைத்தோம் மனசு பக்கத்தில். அருமையான பரிந்துரைகள்...

    பதிலளிநீக்கு
  10. எனது அருமைத் தோழியின் தீர்க்கமான சிந்தனை வியப்பையளிக்கிறது. முற்றிலும் உண்மை. இப்பொழுது செய்துவருவது முதலுதவி போன்றது. இனிதான் சிகிச்சையளிக்கவேண்டும். முதலுதவி செய்யாது நேரிடையாக சிகிச்சையளிக்க இயலாத நிலையில் இருப்பதால் தற்போதைய பணிகள் நடந்துவருகின்றன. அவசியம் கருத்தில் கொள்வோம். மகிழ்ச்சி தோழி. வாழ்க வளமுடன். :)

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லாPM 8:47:00

    அருமையான யோசனைகள்.. நிச்சயம் பின்பற்ற வேண்டியவை.. நன்றி அக்கா மற்றும் அனைத்து கருத்துப் பகிர்வாளர்களுக்கும்.

    தினா.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!