12 நவம்பர் 2019

எங்கட வாழை இலைக்கு வந்த பவீசை பாருங்களன்.

எங்கட வாழை இலைக்கு வந்த பவீசை பாருங்களன்.
இனி ஊரெல்லாம் வாழை தோப்புத்தான்.. கிளம்புங்கோவன்...

பொருட்களை பாக்கெட் செய்ய பிளாஸ்டிக் பெட்டிகளுக்கு மாற்றாக வாழை இலையால் சுத்தி வரும் காய்கறிகளை அறிமுகப்படுத்துகின்றதாம் ஏசியா சூப்பர் மார்க்கெட்.
பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கை சாத்தியமா என்கின்றது உலகம்?
மீண்டும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கைக்கு திரும்புவது சாத்தியமாகுமா?
சாத்தியப்படுத்தியவர்கள் எம் முன்னோர்கள்.
எப்படி...?
*
இயற்கையும் நானும் இயைந்தே வளர்ந்தோம் -1
நான் சிறுமியாய் இருந்த காலத்தில் 85 - 90 ஆம் ஆண்டுகளில் மார்கெட் போனால் மீன்,கூனி,இறால் முதல் கீரை, பச்சை மிளகாய் எல்லாம் வாழைஇலை,தென்னோலைக்குள் சுத்தி கட்டி தருவார்கள். பிளாஸ்டிக் பைகள் அதிகம் கண்ட நினைவும் இல்லை. அப்போதெல்லாம் சாப்பாட்டு கடைகளில் கடைகளில் சொதி கட்ட வரும் குட்டி பை மட்டும் தான் பிளாஸ்டிக் பையாக இருந்தது.
சந்தைக்கு போகும் போதே பிரம்புக்கூடை அல்லது பனையோலைக்கடகம் கொண்டு போனால் அதில் அன்றைக்கு தேவையான பச்சைமிளகாய், வெங்காயம், காய்கறி வாங்கி வைச்சிட்டு, மீன்,கூனி,இறாலை வாழை இலைக்குள் சுத்தி தந்தால் அதையும் ஒரு ஓரமா வைத்து கொண்டு வருவாள் அம்மா.அப்போதெல்லாம் கடகம்,கூடை கொண்டு செல்வதை யாரும் கேலி செய்வதில்லை.
/// ஹாண்ட் பாக்குகள் என விதவிதமாயும் இல்லை.

கொஞ்சம் வயதானவர்கள் பாவாடை தைக்கும் போது சின்னதா பைபோல் தைத்து அதில் வாய்ப்பக்கம் நாடா போட்டு முடிச்சிட்டு கொள்வார்கள்.அதன் பெயர் வல்லுகப்பை.
அதை இடுப்பில் செருகினால்.அது தான் மணி பர்ஸ்.

இடியப்பம் விற்கும் பெரியக்கா முதல் மார்கெட்டில் நிற்கும் அக்காமார் தாள் காசை சுறுட்டி சேலை அல்லது சட்டை பிளவுசுக்குள் செருகி வைப்பதை பார்த்திருக்கேன்.அதையும் யாரும் உத்து கவனிச்சு கேலி செய்தத கண்டதில்லை. சில்லறை காசெண்டால் சோட்டியின் சைட்டில் இருக்கும் பாக்கெட்டில் கிடக்கும்.
ஆப்பம் விக்கும் பாக்கியம் அன்ரியும் அப்பம் சுட்டு ஒன்றின் மேல் ஒன்றை கவிழ்த்து அடுக்கி வாழை இலைக்குள் சுத்தி தருவார்.
அப்பா பேருந்து நடத்துனராய்,மட்டக்களப்பு, கல்முனை டிரிப் ஓடினால் வீட்டிலிருந்து மத்தியானச்சாப்பாடும் கொதிக்க வைச்சு ஆறின தண்ணீரும் போத்தலில் அடைச்சு கொடுக்கணும். அப்பா வெளில குடி தண்ணீர் குடிக்க மாட்டார். //ஆனால் மத்த தண்ணீர் வெளில தான் குடிப்பார்😂🤣😭.
அப்பாக்கு சோறு கட்டுவதே ஒரு கலை. அதுக்கென சருவச்சட்டியும்,வெள்ளை துணித்துண்டும் தனியே இருக்கும்.அன்றைய பஸ் மத்தியானம் மட்டக்களப்பு கல்முனை டிரிப் போகக்குள்ள எங்கட ஊர் பிள்ளையார் கோயிலடியில் நின்று ஆட்களை ஏத்திட்டு பஸ் ரைவர் அங்கிள் கோன் அடிப்பார், அப்படி அடிச்சால், நாங்க சாப்பாட்டை கொண்டு வீட்ட இருந்து ஓடணும்,200 மீற்றர் வீட்டுக்கும் ரோட்டுக்கும் இடையில் பிந்த கூடாது.ஓடிப்போய் கொடுத்தால் ரெண்டு ரூபாய், ஐந்து ரூபாய் தருவார், சில நாள் அப்பா பாதி தூரம் ஓடி
வந்திருவார். பத்திரமா வீட்ட போ என சொல்லிட்டு காசு தருவார்.

கல்முனைல இருந்து மட்டக்களப்பு திரும்பும் போது பாத்திரம் தர கோன் அடிப்பார், நான் தான் வீட்ட மூத்த பிள்ளை நான் முதல்ல வேகமா ஓடுவன். சில நேரம் கோன் அடிக்காமல் அவ்விடம் இருக்கும் கிளாக்கரையாவின் பெட்டிக்கடையில் பாத்திரம் கொடுத்து விட்டு போவார்.
நான் வீட்டில் நிண்டால் அப்பா வரும் பஸ் சத்தம் கேட்டால் ஓடுவேன். அப்பத்தான் காசு தருவார்.
அப்பாக்கு சோறு கட்டுவதே ஒரு கலை எண்டேன்ல. நல்ல தலைவாழை இலையை வெட்டி அதை நெருப்பில் முன்னும் பின்னும் காட்டி நல்லா வாட்டி எடுத்து அதை அலுமினியம் சருவச்சட்டிக்குள் வைச்சு விரிச்சிட்டு அதற்குள் சோறு போட்டு, சில நேரம் ரெண்டாள் சோறு போடணும், ரைவர் அங்கிளும் சாப்பிடுவார்,எண்ட அம்மா நல்லா சமைப்பாள் என்பதனால் அம்மாட கைச்சாப்பாட்டுக்கு பயங்கர டிமாண்ட். சோத்தை போட்டு இன்னொரு வாழை இலை வாட்டி அதற்குள் கீரைச்சுண்டல், மீன் பொரியல் தனித்தனிய வைச்சி சுத்தி கட்டிப்போட்டு. சின்ன சின்ன கிண்ணத்தில் குழம்பு, சொதியும் ஊத்தி அதையும் மூடி கட்டி சோத்து சட்டிக்குள் வைத்து வாழை இலையால் மூடி சருவசட்டியை சுத்தி துணியால் இறுக்கி கட்டினால் சாப்பாடு தயார். சூடும் ஆறாது.அந்தக்கால வார்மர் இது தான்.
எழுதக்குள்ள லேசான காரியமா இருக்கு. அம்மா படும் பாடு இருக்கே. பஸ் வந்திரும் என ஓடி ஓடி விறகடுப்பில் சமைப்பாள். சில நேரம் பிந்திபோனால் பஸ்ஸை நித்தாட்டி போட்டு வந்து அம்மாக்கு திட்டுவார். சில நாளில் கல்முனைக்கு போகக்குள்ள சாப்பாடு கொடுக்க முடியாமல் போனால் திரும்ப வரக்குள்ள எடுப்பார்.லேட்டா சாப்பிடுவினம். அன்றிரவு அம்மாக்கு அடியும் திட்டும் கட்டாயம் இருக்கும் பாவம் அம்மா.அடி வாங்கிட்டு சாப்பாட்டை போட்டு கொடுப்பாள். இந்த காலம் போல் அந்தக்காலம் அம்மாக்கு ரோசம் வந்ததை காணேல்ல. இதை இன்னொரு பதிவில் சொல்றன்.
இப்படி வாழை இலைக்கும் எங்களுக்கும் விடாத பந்தம் இருந்தது, அது மட்டுமா...?
பெட்டிக்கடை வைச்சிருந்த ஈஸ்வரி அன்ரி கடைக்கோ,பெரிய கடை வைச்சிருந்த பஞ்சலிங்கம் மாமா கடைக்கோ போனால் அங்கே விரகேசரி, சிந்தாமணி,தினகரன்,மித்திரன் பேப்பரை சுருட்டி சுருள் போல் ஒவ்வொரு அளவுக்கும் வரிசையா அடுக்கி இருப்பார்கள். அதில் கால்கிலோ, அரைக்கிலோ, ஒருகிலோ என நாம் கேட்கும் அளவுக்கு போட்டு தராசில் நிறுத்தி மூடி அதையும் சணல் நூலால் கட்டி தருவார்கள்.சீரகம், மல்லி, மிளகெல்லாம் தினம் வாங்கும் பொருள் இல்லை.தேயிலையும், சீனியும், நெருப்புப்பெட்டியும் தான் அடிக்கடி வாங்கணும். // நைலோன் கயிறெல்லாம் இப்ப வந்தது. அக்காலத்தில் பேப்பர் வாழைச்சேனை பேப்பர் பக்டரியில் கரும்பிலிருந்து எடுப்பார்கள். சணல் தென்னந்தும்பிலிருந்து கிடைக்கும்.
இப்படி சீனி, தேயிலை சுத்தி வரும் பேப்பர் சுருளில் வரும் தகவல்களை உலக விடயங்களை சமூகக்கல்வி பாட ஒப்படைக்கு என பத்திரமா ஒரு கொப்பியில் ஒட்டி வைத்து கொள்வேன். கதைப்பக்கம் வந்தால் ஆரம்பமும்,முடிவும் இல்லாமல் படித்து போட்டு விறகடுப்பிலிருந்து இரவில் சிமிலி அல்லது குப்பி லாம்பி எரிக்க பயன் படுத்துவோம்.
தேங்கா எண்ணெய்,மண்ணெண்ணெய்க்கு என போத்தல் கொண்டு போகணும். அவங்க பெரிய பரலில் வைத்திருந்து நாம் கேட்கும் அளவை அளந்து கோனால் நம் போத்தலுக்குள் நிரம்பி தருவார்கள். ஒரு போத்தலே பல வருடம்,உடையும் வரை பயன் படுத்தினோம். இரவில் சிமிலி விளக்கும், குப்பி விளக்கும், பௌர்ணமி நிலவும் தான் வெளிச்சம் தரும்.
மத பேதம் தெரியாது. கோயிலில் பொங்கல் வைத்தால் வேதக்காரரெல்லாம் கோயிலடியில் அரச இலை,வம்மி இலை,பூவரச இலை பிய்த்து பீப்பி ஊதி விட்டு இன்னொரு இலையை கழுவிட்டு நீட்டினால் சுடச்சுட பொங்கலை அள்ளி வைப்பார்கள். அவ்விடம் திண்டு போட்டு கையை போட்டிருக்கும் சட்டையில் பின் பக்கமா துடைச்சி போட்டு வீட்ட போவம். ஆடிக்கூழ் வாங்க மட்டும் தான் வீட்ல இருந்த வெங்கல,சிலவர் செம்பும் வாளியும் கொண்டு போகணும். வேதக்கோயிலில் வட்டரும் பாணும் கொடுத்தால் அதை வாங்க சைவக்காரர் தான் வரிசையில் வருவினம்.
சாதி இருந்திச்சி,அவங்க இல்லாமல் எதுவுமில்லை எனும் காலமுமாய் அது இருந்தது. பிள்ளை பிறந்தாலும், வயசுக்கு வந்தாலும், கல்யாணம், கருமாதி என்றாலும் எல்லா சாதி சனமும் வரணும். வரும்,ஆளாளுக்கு அவரவர் பணி நடந்தது.
கோயில்ல அன்னதானம் என்றால் வாழை இலையில் தின்போம்.விருந்து எண்டால் மிஞ்சின சாப்பாட்டை பனையோலை பெட்டிக்குள் வாழை இலையை போட்டு அதற்குள் சோத்தை போட்டு சுத்தி வரை கறியும் வைச்சி, ஒரு செம்பில் சொதியும் ஊத்தி அனுப்பிவிடுவம். / டிபன் பாக்ஸ் தேடவே இல்லை.
செத்த வீட்டு சாப்பாடு எண்டால் துவச நாள் அன்னிக்கு வெள்ளெனவே ஊரில் இருக்கும் சொந்த பந்தம்,அண்டை அயலார் தம் சக்திக்கு ஏற்ப அரிசி, காய்கள் அனுப்பி விடுவார்கள்.அவங்க எம்பூட்டு காசுக்காரர் எண்டாலும், சாதிக்காரர் என்றாலும் செத்த ஆத்மாவை நினைவு கூர படைக்க இப்படி தானமா கிடைக்கும் பொருளோட தேவையானதையும் வாங்கி போட்டு வீட்டு வாசலில் பந்தல் போட்டு சமைத்து ஊரே வந்து சாப்பிட்டு மிச்சத்தை அன்னிக்கு யாரெல்லாம் பெட்டியில் காய்,அரிசி கொடுத்தாங்களோ அவங்க வீட்டுக்கு சாப்பாடும் போகும்.
சரி இதெல்லாம் ஏன் சொல்றன் என கேட்கின்றீர்களோ?
ஒல்ட் இட்ஸ் கோல்டாம் என இப்ப தான் இந்த காப்ரேட் கம்பெனி சூப்பர் மார்கெட் காரனுகள் கண்டு பிடிச்சிருக்காங்க. அவங்க தான் புதுசா கண்டு பிடிச்சது போல எம்பூட்டு அழகா போட்டோ எடுத்து பேப்பரில் போட்டிருக்காக பாருங்க.\எங்கட வாழை இலைக்கு வந்த பவீசை பாருங்களன்.
அவுக சொல்லிட்டால் இனி அதுக்கு அப்பில் இருக்கோ?



எல்லோரும் இனி வாழை இலையில் சோத்து பார்சல் கட்ட ஆரம்பிங்க.

கால் வலிக்க வலிக்க கஷ்டப்பட்டு உட்கார்ந்து தட்டச்சிட்டிருக்கேன். படிச்சு போட்டு லைக்கோட போகாமல் உங்கட அனுபவத்தையும் எழுதி போனால் நாலு பேருக்கு பயன் படுமுங்க...✍️

08 செப்டம்பர் 2019

நூலகம் அமைக்கும் பணிக்கான உதவிக்கோரிக்கை.

எமது எதிர்கால சமூகத்தினை கட்டமைத்திடும் நீண்ட கால திட்டமிடலோடு....!
கடந்த வருடம்  நான் இட்ட பதிவில்  நூல்களை தந்து உதவுவதாக கூறிய  நட்புக்களே... !
கலாச்சாரம், சமூகச் சீர் திருத்தம், சமூக மேம்பாட்டுக்கான கருத்தியல்களை பயிற்றுவித்து உடன் பயணித்திட...!
அடுத்த புத்தாண்டிலிருந்து சமூக முன்னேற்றத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுடனும் ஊர்ப்பெரியவர்களின் ஒத்துழைப்போடு,மாதிரி மீட்சித்திட்டமொன்றை முன்னெடுக்கும் பணியில்....
நூலகத்துக்கு தேவையான நூல்களை அடுத்து வரும் இரு மாதங்களுக்குள் சேகரித்து தரக்கூடிய ஆர்வமுள்ளவர்கள் இணையுங்கள்.
கட்டாயம் தேவையான நூல்கள்
1.சிறுவர் இலக்கியங்கள்.
2. பாலர், சிறுவர் பாடல்கள் / தமிழ் ஆங்கிலம் சிங்களம்
3. பாலர், சிறுவர் கதைகள் / தமிழ் ஆங்கிலம் சிங்களம்
4.சரித்திர,வரலாற்று நூல்கள்
5.பாடசம்பந்தமான புத்தகங்கள்.
6.நாவல்கள்
7.சங்ககால இலக்கியங்கள்
8. விஞ்ஞான, சமூகவியல் நூல்கள்,
9.தொழில் நுட்பம் சார்ந்த நூல்கள்
10. சுய சரிதைகள் கவிதைகள் கட்டுரைகள் அனைத்தையும் கொண்ட நூலகம் அமைத்திடும் பணியில் இணையுங்கள் நண்பர்களே..!

எம்மால் முன்னெடுக்கபட இருக்கும் திட்டங்கள் 
01. Kinder Garden
02. Library,
03. Free Classes,
04 Free Exam Practice,
05. Motivation & Counseling Classes
06. Sports Activities
07. Youth Development Programs
08. Cultural Activities
09. Study & Reading Corner, Etc

தமிழ் நாட்டிலிருந்து நூல்களை சேகரித்து தர கூடியவர்கள். விபரம் தந்தாலும் நான் அனைத்தையும் ஒருங்கிணைத்து இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்வேன்.
தேவைகள் அனேகமுண்டெனினும் நூல்களுக்காக மட்டுமே இங்கே கோரிக்கை விட்டிருக்கின்றேன்.
திட்டமிட்ட காரியங்கள் பூர்த்தியான பின் இடம், காலம் அனைத்தும் பகிரப்படும்.

அது வரை... !
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

என்றுணர்ந்தே கரம் இணையுங்கள்...!


சந்திரயான்-2

சந்திரயான்-2
தகவல் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் தரையிறங்கி இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
நிலவைச் சுற்றிவரும் சந்திரயான் - 2 இன் சுற்றுக்கலன் ( ஆர்பிட்டர் ) தெர்மல் இமேஜிங் மூலம் விக்ரம் லேண்டர் இருக்குமிடம் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ ( Indian Space Research Organisation ) அறிவித்திருக்கின்றார்கள்.
சந்திரயான் -2 Orbiter (சுற்றுக்கலன்) - ஒரு வருட ஆய்வுக்காலப் பயண சுற்றுப்பாதை.
சந்திரனின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் ( hard-landing ) தரையிறங்கி இருப்பதாகவும் அதனை தொடர்பு கொள்ள முயற்சித்து கொண்டிருப்பதாகவும் இஸ்ரோ தகவல் வெளியிட்டிருக்கின்றார்கள்.
எனினும் சந்திரயான் 2 இன் சுற்றுக்கலன் ( ஆர்பிட்டர் ) சுற்றுப் பாதையிலும், நிலவின் மேற்பரப்பிலும் நிலவைக்குறித்த தன் ஆய்வை அடுத்து ஒருவருடம் தொடர்ந்து கொண்டிருக்கும்.

 சந்திராயன் 2 இல் விக்ரம்  ரோவர் மற்றும் பிராக்யானின் இயக்கம் குறித்து  இஸ்ரோ வெளியிட்டிருந்த  பிரசன்ரேசன் இந்த லிங்கில் காண முடியும்/
https://www.isro.gov.in/sites/default/files/videos/ch2-eng-mp4-8mbps.mp4.mp4?fbclid=IwAR3u5D6C6nqB9QvgBEJmOi9wBB20h8KDoXqq8ktXv0zX9iqI69PNlzF8gsg


சந்திராயன் - 2
இந்திய விண்வெளியினால் நிலாவை ஆய்வு செய்வதற்காக ஆளில்லா விண்கலம் சந்திரயான்-1 2008 ஆம் ஆண்டில் அனுப்பட்டது. இரண்டாவது தடவையாக நிலவினுள் நுழைந்து ஆய்வு செய்யும் திட்டத்தோடு 22.07.2019 இல் சந்திரயான் - 2 விண்கலம் ஏவப்பட்டது.
சந்திராயன் - 2 இன்

ஒட்டு மொத்த இயக்கத்தை காட்டும் அசை படம்

சந்திரயான் -2 இன் நோக்கங்கள்
நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்கும் திறனை நிரூபிப்பது(soft-land) ரோபோ ரோவரை இயக்குவது. அதனூடாக நிலவினுள் நுழைந்து ஆய்வுகள் மேற்கொள்வது.

சந்திராயன் 2
Orbiter (சுற்றுக்கலன்) - ஆய்வுக்காலம் ஒரு வருடம் 
   Vikram lander எனும் தரையிறக்கி Pragyan rover எனும் உலாவியையும் இணைத்து உருவாக்கப்பட்ட விண்கலம்.

Vikramlander-(தரையிறக்கி) ஆய்வுக்காலம்  14நாட்கள்

 ➤(Pragyan rover நிலவின் மென்மையாக தரையிறக்கும் பணிக்கான செயல்பாட்டு க்கு திட்டமிடப்பட்ட சாதனம்.கமெரா மற்றும் உயர் தெளிவுத்திறன் வாய்ந்த தொழில் நுட்ப சாதனங்களுடன் பொருத்தப்பட்டது)ஆர்பிட்டருடன்

பயணித்துஅதன் சுற்றுப்பாதையிலிருந்து பிரிந்து Pragyan rover ஐ நிலவில் மேற்பரப்பில soft landing / ஷாப்ட் லாண்டிங்க செய்வது Vikram landerக்கான முக்கியமான பணி.
Pragyan rover (சில்லுகளுடனான உலாவி)
  Vikram lander இலிருந்து பிரியும் பிராக்யான் ரோவர் 6 சக்கரங்களுடன் சந்திர மேற்பரப்பில் வினாடிக்கு 1 செ.மீ என்ற விகிதத்தில் நகர்ந்து, ஆன்-சைட் வேதியியல் பகுப்பாய்வு செய்து கிடைக்கும் தகவல்களை லேண்டருக்கு அனுப்பும், விக்ரம் லேண்டர் அதை பூமியில் உள்ள மிஷன் கன்ட்ரோலுக்கு அனுப்பும்.
Vikram lander சந்திரனில் தரையிறங்கும் செயல்பாடு.

இலக்குகள்
விக்ரம் லேண்டரும்.பிராக்யான் ரோவரும் சந்திரனுக்கு அருகில், தென் துருவப் பகுதியில் சுமார் 70 ° தெற்கே அட்சரேகையில் ஏறக்குறைய 7 செப்டம்பர் 2019 அன்று அதிகாலை 1:50 மணிக்கு தரையிறங்கும். பிராக்யான் நிலாவினுள் ஊர்ந்து மேற்பரப்பில் வேதிப்பகுப்பாய்வை 14 நாட்களுக்கு (1 நிலா நாள்) மேற்கொள்ளும். ப்ரக்யான் திரட்டும் தகவல்கள் விகரம் மற்றும் சுற்றுக்கலனூடாக பூமிக்கு அனுப்பப்படும்.
சுற்றுக்கலன் - Orbiterஒரு ஆண்டு காலம் நிலாவைச் சுற்றி 100 x 100 கிமீ சுற்றுவட்டத்தில் சுற்றிவந்து தனது பணிகளை மேற்கொள்ளும்.

⧪ 22.07.2019 நிலவை நோக்கி ஏவப்பட்டது சந்திராயன் 2 எனும் பெயரிடப்பட்ட Orbiter.
⧪ 20.08 2019 இல் சந்திரனின் சுற்றுப்பாதையை அடைந்து பிரிந்து செல்ல வேண்டிய தரையிறக்கியான விக்ரம் லேண்டரின் தரையிறக்கத்திற்கான சுற்றுப்பாதை பொருத்தும் பணிஆய்வுகளை மேற்கொண்டது.
⧪ 02. 09.2019 விக்ரம் லேண்டர் அதன் ஆர்பிட்டரிலிருந்து பிரிந்து பிராக்யானுடன் நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணித்தது.
⧪ 07.09.2019 அதிகாலை 1.50 க்கு விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க வேண்டும். எனினும் அதிகாலை 1:52 மணியளவில், தரையிறக்கியான விக்ரம் லேண்டர் அதன் பாதையிலிருந்து விலகி சுமார் 2.1 கிலோமீட்டர் (1.3 மைல்) தொலைவில் தகவல்தொடர்பை இழந்தது.
தற்பொழுது நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர், தெர்மல் இமேஜிங் மூலம் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்திருக்கின்றது.

படங்கள் அனைத்தும்  இஸ்ரோ  விக்கிமீடியா தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. 

29 ஆகஸ்ட் 2019

ஆப்பிள்: பழம் வேண்டுமா? அள்ளிக்கொண்டு போங்கோ 🤷‍♀️🤷‍♀️

ஆப்பிள்: பழம் வேண்டுமா?
அள்ளிக்கொண்டு போங்கோ 
🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

 🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏

கனவுத்தோட்டம் 
காய்த்ததும் கனிந்ததும்
கற்பனையென்றெண்ணி
நிச்சலனமாயிருந்தேன்🙋‍♀️🙆‍♀️

நச்சென சத்தம் 🙆‍♀️🙆‍♀️
நடு உச்சி வீக்கம் 
அண்ணாந்து பார்த்தேன்
ஆங்காங்கே ஆப்பிள்

ஆ.. வென அதிர்ந்து 
சட்டென சறுக்கி 🙇‍♀️🙇‍♀️
பரதம் ஆடி - தாழ்
பணிந்து எழுந்தேன் 
குவியலாய் ஆப்பிள்.

பூத்துக்காய்த்து 
பறிப்பாரின்றி 
பழுத்து,விழுந்து 
குன்று மணி போல் 
செஞ்சிவப்பில் 
பளபளவெனவே
சிதறிக்கிடக்குது

ஈரிரண்டு வயதில் 
ஏ பார் அப்பிள் 
அழகாய் சிவப்பில் 
அரண்மனை பழமாய்
பறித்திட முடியா
பணக்கார பழமது

நாலிரண்டு வயதில் 
நாலிரொரு துண்டு 
நா ருசித்த அப்பிள்
நா உணர்ந்த வாசம் 
நானின்றுணர்ந்தேன்

ஈரேழு வயதில் 
திருடிச்சுவைத்து
திக்குத்திக்கென 
விக்கித்திரிந்த 
நினைவுச் சுழலில் 
நானின்று சுழன்றேன்

அன்றொரு பொழுதில் 
அரண்மனை பழமாய் 
அதிசயமானது
இன்றிங்கென் காலடியில் 
கொட்டிக்கிடக்குது.

நச்சில்லா அருங்கனி 
நான் கற்ற முதல் கனி
எட்டாக்கனி யன்று
கிட்டிக்கிடக்கு 
தின்றிங்கே
இயற்கையின் அதிசயம்
இதுவொரு அற்புதம்
ஏற்றமும் இறக்கமும் 
இறைவனின் கொடையல்லோ?

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏