29 மார்ச் 2019

சதா ரணமாகும் தேர்வுகள்

சாதாரணம்
சதா ரணமெனும் 
சகல கலா ரணமாகுவதாக
சத்தமில்லா யுத்தமொன்று

சங்கடம் தருவதாய் சிலரும்
சங்கெடுத்து ஊதுவதாக பலரும், 
என்னைப் பார் 
என் பெண்ணைபபார்
உன்னை போல் என் 
உறவில்லை என்போரும்

கற்றலை,குற்றமாக்கி
தேர்வின் புள்ளிகள்
வாழ்வின் கரும்புள்ளிகளாய்
வடுக்களாய் தங்க வைப்போரும்
தாம் கடந்த முட் பாதை அறியாதோராய்...!?

சாதாரணமாக கடந்தவைகளெல்லாம் 
சாதனைப்பட்டியலில் இடம் பிடிப்பதும்
சாதனைகள் செய்வோரை சகதியில் எறிவதும் 
சாத்தானின் போதனைகளாய் கடப்போம்.

நீ நானாகவும்,
நான நீயாகவும் 
அவன் அவளாகவும்
அவள் அவனாகவும்
ஒப்பீடு தப்பீடாய் 
பட்டறிவும்,படிப்பறிவும்
பட்டம் போல் வானம் தொடும், 
காலமது அதை உணர்த்தும்

தேர்வென்பதன் வெற்றிகளால் கொக்கரிப்போர் 
வாழ்க்கை தேரென்பதை இழுக்க
முடியாதோராய்..... ?

கற்றறிந்தோர் முயலாமையினால் 
முடங்கி விட............!?
பட்டறிவால் வென்றோர் உயர்ந்து நிற்க 
முயல் ஆமை கதை இங்கே நினைவில் வரும்,

தோற்றவர்கள் வீழ்ந்ததில்லை
வென்றவர்கள் எல்லோரும் வாழ்ந்ததும் இல்லை.

வாழ்க்கை என்பது ஒரு வட்டம், 
காலம் மாறும் காட்சிகள் கலையும், 
கலைந்த கனவுகள் 
தொலைந்த இரவுகள
கனவாகிப்போகும்,

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே.. 
நம்பிக்கை எங்கள் தும்பிக்கை!

அவரவர் அறிவும், ஆற்றலும் அவரவர்க்கே உரிமை.
மனித ஆற்றல் சக்தி வாய்ந்தது, 
தினம் மலர்வதும் உதிர்வதனாலும் பூக்கள் சினப்பதில்லை. 
நீங்கள் நாள் தோறும் புதிதாக மலருங்கள்
வாழ்க்கை உங்கள் வசப்படும்........!

#சதா_ரணமாகும்_தேர்வு


27 மார்ச் 2019

பெண்ணியமும் எமது பெண்களும் ........!?

ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் குட்டை முடியை தவிர்த்து நீண்ட முடிகளை வளர்க்கவும், இந்திய கலாச்சார சல்வார், குர்தா போன்ற உடலை மூடி அங்கங்களை மறைக்கும் ஆடைகளை அணியவும் ஆர்வம் காட்டுகின்றார்கள். கோடை வெயில் காலத்திலும் அவர்கள் அணியும் ஆடைகளில் ஆபாசம் இருப்பதில்லை. நீச்சலுடையில் நீந்துமிடங்களில் கிடந்தாலும் ஆண்கள் கண்களில் கண்ணியம் தவறுவதில்லை அங்கங்களை மேய்வதிலை. அங்கங்கே அலைவாரும் இல்லை. / அரிதாக சிலர் விதிவிலக்காகலாம்.
ஆண், பெண் நட்புக்களை தரம் பிரித்து காமம், காதல் எனவெல்லாம் ஒதுக்குவதில்லை. பெண்ணுக்கு பெண் தோழிகள் போல் தான் ஆண் தோழர்களும் ஒரே சம கோணத்தில் அணுக கற்பிக்கப்படுகின்றார்கள். ஆண்களை காமமெனும் கடைக்கண் பார்வைகளில் வீழ்த்தும் செயல்பாடுகளில் பெண்கள் ஈடுபடுவதில்லை.
டேட்டிங்க,காதல் என சென்றாலும் ஒருவனுடன் தம் உறவை தொடரும் போது அவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதில்லை. திருமணம் எனும் சட்ட பூர்வ பந்தத்தை தவிர்த்தாலும்,ஒருவரோடொருவர் சேர்ந்து வாழும் காலத்தில் தம் பாட்னரின் அன்புக்கு அடங்குவார்கள்,உண்மையாக வாழ்வார்கள். புரிதல் இல்லாத போது மனமொத்து பேசி பிரிந்தாலும் எதிரிகள் ஆகாமல் நட்புடன் நண்பர்களாக் தொடர்வார்கள்.
30 வயது வரை சுதந்திரமாக தமக்கென கல்வி, பெருளாதாரம் என தன்னிறைவை தேடி வாழ்ந்து விட்டு 30 வயதின் பின் தம் எதிர்காலத்தை திட்டமிடுவார்கள். சட்டத்தை மதித்து திருமணம் செய்த பின் குழந்தைகள் குறித்து சிந்தித்து, குழந்தை பிறந்ததும் தாம் செய்யும் வேலைகளை விட்டு விலகி பிள்ளைகளை சரியாக வளர்க்க அக்கறை காட்டுவார்கள். கணவன், மனைவிக்கு மட்டுமலல் குழந்தைகளுக்கும் உண்மையாக வாழ்வார்கள்.
40 வயதுக்கு பின் தமக்கான வாழ்க்கையை சரியாக திட்டமிட்டு குழந்தைகளை சமூகத்தின் அக்கறையானவர்களாக வளர்த்து 16 வயது வரை அவர்களின் மீதாக பாதுகாப்பு, கண்காணிப்பை தொடர்ந்து, அரசின் சட்டங்களுக்குட்பட்டு கல்வியை வழங்கியும், பொருளாதார தேவைகளை நிறைவேற்றவும் செய்கின்றார்கள்.அன்பெனும் பெயரில் அடக்குமுறையும், அதீத செல்லமும், அளவு மீறிய கண்டிப்பும் இருப்பதில்லை. நள்ளிரவு பார்ட்டிகளில் தடையும் இல்லை,அவரவர் எல்லைக்கோடுகளை அவ்ர்கள் விருப்பம் இன்றி மீறப்படுவதும் இல்லை.
வன்முறை,வற்புறுத்தல்கள் காதலிலும், காமத்திலும் வெளிப்படுத்தப்படுவதில்லை. .
ஐரோப்பிய நாடுகள் பல நமது கலாச்சாரங்களை பின்பற்ற ஆரம்பித்து வெகுகாலமாகி விட்டது.
அதற்கு நேர் மாறாக தமிழ்ப்பெண்களின் வழிகாட்டிகளாக தம்மை வெளிக்காட்டிக்கொள்வோர், நீண்ட தலைமுடிகளை வெட்டி குட்டைஆக்குவது, ஜீன்ஸ்,டீசர்ட் போன்றவை அணிவதுமே பெண் விடுதலை தரும் எண்ணத்தினை திணிக்கின்றர்கள். 
ஆண் நட்புக்களோடு வெளியில் சுற்றுவதும், அவர்களுக்கு இணையாக புகைத்தல்,குடித்தல் தான் பெண்ணுக்கான விடுதலை என நம்ப வைக்கப்படுகின்றார்கள். ஆண் நண்பர்களுடன் கூடி கும்மாளமிடுவதும், அவர்களுடன் கவர்ச்சி, காமம் பேசுவதும் பெண்ணியம் என்றாகி போயிருக்கின்றது.

சட்டங்களை மீறுவதும், தடைகளை கடப்பதுமே பெண்ணுக்கானது என பயிற்றுவிக்கபப்டுகின்றார்கள்.
ஆண் பெண் உறுப்புக்களை சொல்லி விமர்சிப்பதும், 
பெண் உறுப்பில் விடுதலை கிடைக்குமென நம்பிக்கையோடு, மறைக்க வேண்டியதை குறித்து பேசுவதும், அரைகுறை ஆடைகள்:,பப்புகள், டிஸ்கோத்தேக்களில் தான் பெண்ணுக்கு சுதந்திரம் கிடைக்கும் எனும் மாயை உலகம் ஒன்றை சிருஷ்டித்து அவள் வாழ்க்கையை திசை திருப்புகின்றார்கள்.

இல்லாத ஒன்றை இருப்பதாக நம்ப வைப்பதும், இருப்பதை இல்லை என்பதும் தமிழர் பண்பாடாகிப்போனது. அதை நம்பவும் ஒரு கூட்டமுண்டு.அதுவே சரியெனும் பெரும் கூட்டமும் உண்டு.
பெண் ஆக்கவும்,அழிக்கவும் சக்தி வாய்ந்தவள். அவள் படைப்பே அது தான்.
உலகத்து பெண்கள் உலகாளும் உரிமைகளுக்கு உரியவராக தம்மை கட்டமைத்து கொள்ள போராடும் போது,எங்கள் பெண்களோ உடலாளம் தேடி பயணிப்பதே தம் விடுதலை என்கின்றார்கள்.
உலகம் எதை கொண்டு தமிழர் கலாச்சாரம், பண்பாடு என மேன்மை படுத்துகின்றதோ, 
எதனால் நாம் உயர்ந்து நின்றோமோ 
அதுவே சீரழிக்கப்படுகின்றது.
சின்னாபின்னமாக்கப்படுகின்றது.

தமிழ்ப்பெண்கள் பெண் விடுதலை எனும் பெயரில் தம்மை மட்டுமலல் தமிழ் சமுகத்தையே அழித்து கொண்டிருக்கின்றார்கள்.
எது உண்மையான பெண் விடுதலை என்பதை தமிழ்ப்பெண்களுக்கு உணர்த்தும் எல்லைக்கோட்டில் நாம் நிற்கின்றோம்.
உலகத்தில் சகல பெண்களுக்கும் தேவையானது . 
நிமிர்ந்த நன்னடை 
நேர்கொண்ட பார்வை 
எதற்கு அஞ்சா திண்மை
தெளிந்த சிந்தனை.
கல்வி
பொருளாதாரம் 
பணிவும்,பண்பும்
அன்பும்,அறனுமே.

நாம் தேட வேண்டியதும், எடுத்து கொள்ள வே\ண்டிய உரிமையும் இதுவே.
ஆனால்..............!?
நாம் வாழ்வோமா? வீழ்வோமா?❤️
❤️உலகப்பெண்களில,தமிழ்ப்பெண்களுக்கான நிர்வாகம், உரிமை சார்ந்த ஆளுமை, அறிவு போல் வேறெந்த பெண்களிடமும் காண முடியாது. பெரும்பாலான குடும்பங்களில் நிர்வாகம் என்பது பெண்களிடம் என்பதில் ஈழத்து தமிழ் பெண்கள் மேம்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
🔴👁‍🗨குறிப்பு* எனது பதிவு பெண்களை குற்றம் சாட்டி, அவர்களை கூனிக்குறுக வைக்கும் நோக்கத்தில் எழுதப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும். பெண்ணியம் எனும் இலக்கில் மேலை நாட்டு பெண்கள்,ஆண்களை பழிவாங்க, ஆணுக்கு பெண் நிகரென நிருபிக்க கடைப்பிடித்த பல விடயங்களை அவர்களின் தவறான அணுகுமுறையென உணர்ந்து கொள்ளப்பட்டு, அதிலிருந்து மீண்டு சரியான இலக்கினுள் வரும் போது அவர்கள் வேண்டாம் என விடுபட்டு வரும் பழக்கங்களை நமது பெண்கள் தமக்கான விடுதலைப்பாதையின் இலக்கென திசை மாற்றம் செய்வது நலல்தல்ல என்பதை உணர சொல்வதே இப்பதிவின் நோக்கம்.

தமிழ் நாட்டு கல்வியும், சிந்தனைகளும்....!!!!

தமிழ் நாட்டில் கல்வி விடயத்தில் ஏன் இத்தனை குழப்பம் என எனக்கு புரியவில்லை?
தேர்வினை எதிர்கொள்ள இயலாத மாணவர்கள்.... ?
பதறித்துடிக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும்......?
முடியாது,இயலாது,கடினம்,கஷ்டம் என சொல்லி நெகடிவ் அலைகளை பரப்பிக்கொண்டிருப்பதன் பின்னனி என்ன?
மாணவர்கள் கல்வி சார்ந்து பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் தேர்வுத்தாளில் வருகின்றதா?
மாணவர்கள் செயல்முறை இல்லாமல் மனன முறையில் கற்றலை பெறுகின்றார்கள் எனில் இதில் ஆசிரியர்கள் பங்களிப்பு எவ்வகையில் இருக்கின்றது?
மக்களில் சிலர் இன்னமும் ஆரம்ப கல்வி,அடிப்படை கல்வி என பேசிக்கொண்டிருப்பதை காணும் போது இவர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் எனும் குழப்பம் வருகின்றது?

இந்திய அரசின் கல்வித்திட்டம் தமிழ் நாட்டுக்கென தனி பாட திட்டங்களையும், தேர்வுத்தாட்களையும் தயாரிக்கின்றதா?
பள்ளிப்பாடத்தில் அரசு பாடத்திட்டம் கடினமாக இருந்தாலும் ஆசிரியர்கள் என்ன செய்கின்றார்கள்?
பாடத்திட்டத்துக்கு ஏற்ப மாணவர்களை தயார்ப்படுத்தாதது ஏன்?

அரசு பாடத்திட்டங்களை காலத்துக்கேற்ப மாற்ற வேண்டும்,உலகத்தின் தொழில் நுட்ப வளர்ச்சி, நவீனத்துவத்துக்கு ஏற்ப கல்விதிட்டங்கள் மாற்றமடைய வேண்டும் என்பதுடன் மாறும் சூழலுக்கேற்ப பிராக்டிகல் வாழ்க்கை முறையை கல்வியின் மூலம் உணர்த்த வேண்டும்.
அடிப்படையே அனைத்தும் தவறென்கின்றோமா?
அரசு அரசு என அரசின் மேல் எல்லாப்பழியையும் இட்டால் சமூகத்துக்கான் கடமை என்ன? தனிமனிதர்கள் கடமை என்ன?
எனக்கு புரியவில்லை. நாங்கள் எங்கள் கடமைகளை மறந்து எல்லாவற்றையும் அரசு செய்யட்டும் என எதிர்பார்ப்பது எவ்வகையில் நன்மையை தரும்,
இப்படியே பேசிக்கொண்டிருந்தால், தமிழ் நாடு இந்தியாவில் பின் தங்கிய மாநிலமெனும் பட்டியலில் இடம் பிடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
நமக்குள் பலர் தமிழ் நாடு கல்வியில் முன்னேறி இருப்பதாகவும், முன்னனியில் இருப்பதாகவும் கருத்தை கொண்டுள்ளார்கள்.
ஆனால் நிதர்சனம் வேறு ....!!!!
கடந்த 2011 எடுக்கப்பபட்ட சென்சஸ் கருத்துக்கணிப்பில் தமிழ் நாடு இந்திய அளவில் கல்வியில் 14 ஆவது இடத்தை பிடித்திருக்கின்றது.
2018 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டுக்கல்விச்சூழல் இன்னமும் பின்னோக்கி சென்றிருக்க வேண்டும். முன்னேறிச்சென்றிருக்கும் வாய்ப்புக்கள் இல்லை.
உலகத்தில் தனி நபர் தன்னிறைவு பட்டியலில் 2014 /2016 ஆண்டுகளில் 122 இடத்தில் இருந்த இந்தியா , 2018 / 133 இடத்தை பின்னோக்கி சென்றிருக்கும் போது தமிழ் நாட்டு கல்வியும் பின்னோக்கி தான் சென்றிருக்கும். ஆட்சி நிர்வாகம் மட்டுமல்ல, மக்கள் சிந்தனைப்போக்கும் சீரற்றதாக இருக்கின்றது.
உண்மை நிலை உணராது, மேம்போக்காக நாங்களும் வளர்கின்றோம் எனும் போலித்தனமான மாயைக்குள் தாங்களும் சிக்கி, மக்களையும் சிக்க வைப்பது ஏன்?
வீண் கௌரவம், வரட்டு பிடிவாதமே உன் இன்னொரு பெயர் தான் தமிழ் நாட்டு தமிழரோ?
இந்தியாவில் தமிழ் நாடு தான் கல்வியில் முன்னனியில் இருக்கின்றது எனும் வெற்றுப்பிரச்சாரங்களை மேற்கொள்வதும் அதை நம்பிக்கொண்டிருக்கும் மக்களையும் என்னவகையில் சேர்ப்பது எனவும் புரியவில்லை.
உலகை ஆண்ட பரம்பரை எனும் வரலாற்றை கொண்ட ஆதித்தமிழனின் தொன்மை மிகு சிறப்பை இனி வரும் காலத்தில் சிறுமைப்படுத்தும் செயல்பாடுகளை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?
மக்களே..........!!!!
தூங்கியது போதும் 
விழித்தெழுங்கள்


எழுத்தறிவு அடிப்படையில் இந்திய மாநிலங்கள் எனும் பட்டியல் ஆங்கிலத்தளத்தில் இந்தியாவில் 14 ஆவது இடத்தில் தமிழ் நாடு இருப்பதாக சொல்கின்றது. ஆனால் தமிழ மொழிபெயர்ப்போ 21 ஆவது இடத்துக்கு அதை நகர்த்தி விட்டிருக்கின்றது. இதன் மூலம் நாம் அறிய வேண்டியது என்னவென்றால், இக்கால தமிழர்கள் வாய்ச்சொல் வீரர்களாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றர்கள். எதையும் சரியான தரவுகளோடு ஆவணப்படுத்தவும், ஆதாரப்படுத்தவும் எவருக்கும் ஆர்வமில்லை. வரலாற்றில் கரும்புள்ளிகளாக தற்கால தமிழர்கள் பதிவாகுவார்கள் என்பது மட்டும் உண்மை. எழுத்தறிவு அடிப்படையில் இந்திய மாநிலங்கள்


பேஸ்புக் பதிவு 

26 மார்ச் 2019

மோடி அரசின் ஐந்தாண்டு சாதனை....!!!! World Happiness Report 2018

மோடி அரசின் ஐந்தாண்டு சாதனை....!!!!
World Happiness Report 2018
தனி நபர் வருமானம், சுதந்திரம், சமூகம், பொருளாதாரம் எனும் அடிப்படையில் தன்னிறைவு பெற்று மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலில் இந்திய மக்கள் 2014 / 2016 ஆண்டுகளில் 122 ஆவது இடத்தில் இருந்தார்கள்.
🔻மிஸ்டர் மோடிசாரின் ஆட்சியில் வேகமாக பின்னேற்றம் பெற்று 🇮🇳⬇️2018 / 133 ம் இடத்தை பிடித்திருக்கின்றார்கள்.😎😢
உலகத்தில் மொத்த நாடுகள் 156.
🇨🇭🇮🇳🇱🇰🇹🇨🇬🇧🇵🇰🇱🇧🇱🇷🇧🇮🇰🇭🇱🇰🇹🇨🇬🇧🇵🇰🇱🇧🇱🇷🇧🇮🇰🇭🇮🇳🇮🇳
2018 ஆண்டு கணக்கெடுப்பில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளில் முதல் ஐந்து இடங்களில்  
1.பின்லாந்து
2.நோர்வே
3.டென்மார்க்
4.ஐஸ்லாந்து
5. சுவிஸர்லாந்து 
ஆகிய நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

2014 / 2016 ஆண்டுக்கணக்கெடுப்பில் நான்காம் இடத்திலிருந்த பின்லாந்து 2018 ஆம் ஆண்டு ⬆️முதலிடத்தை பிடித்திருக்கின்றது.
அவுஸ்ரேலியா 10 
ஜேர்மனி 15 
அமெரிக்கா 18
பிரிட்டன் 19 
சிங்கப்பூர் 
எனும் வரிசையில் இலங்கை வாழ் மக்கள் ⬆️ 116 ஆவது இடத்தை பிடித்து கொள்கின்றார்கள் / நான்கு தசாப்தங்கள் உள் நாட்டு யுத்தங்களை சந்தித்தும் இலங்கை வாழ் மக்களின் வாழ்க்கை இந்திய மக்களை விட முன்னேறி இருக்கின்றது என்பதை இக்கணிப்பு உணர்த்துகின்றது.

இலங்கை 🇱🇰
2014 / 2016 ஆண்டுக்கணக்கெடுப்பில் 120 இடத்திலிருந்த இலங்கை ⬆️ 2018 /116 இடம் நோக்கி முன்னேறி இருக்கின்றது.

ஊழலில் மட்டுமே இலங்கை இந்தியாவை விட முன்னேறி இருக்கின்றது.ஊழலை குறைத்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் முதல் 100 நாடுகளின் பட்டியலுக்குள் இடம் பிடித்து விடலாம்.
பாகிஸ்தான் 🇵🇰 2014 / 2016 ஆண்டுகளில் 80 ஆவது இடத்தில் இருந்தது. ⬆️ 2018 / 75 ஆம் இடம் பிடித்திருக்கின்றது.
இந்தியாவுக்கு கீழே 23 நாடுகள் இன்னும் இருக்கின்றது.நமக்குக் கீழேயும் உள்ளவர் கோடி என்பதை நினைச்சு பார்த்து நிம்மதி தேடுவோம் என்கின்றீர்களா? 😍
உள்நாட்டு உற்பத்தி,
தனிநபர் வருமானம் 
சமூகம் சார்ந்த ஆதரவுகள் 
ஆரோக்கியமான வாழ்க்கை திட்டமிடல்
வாழ்க்கைத் தேர்வுகளை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்
பெருந்தன்மை
ஊழல் குறித்த புரிந்துணர்வு,

என்பவற்றின் அடிப்படையில் இக்கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டிருக்கின்றது.
நாங்களும் முன்னேறி இருக்கின்றோம், சுந்தர் பிச்சை கூகுளில் இருக்கார், நாசாவில் எங்க விஞ்ஞானிகள் இருக்காங்க, ஒலிம்பியாரிட்டில் எங்க பசங்க வேலை செய்கின்றார்கள்,ராக்கெட் விட்டோம், ஐடியில் நாங்கள் தான் பெஸ்ட் / உங்களை ஏமாற்றிக்கொள்ள போகின்றீர்களா?
வறட்டுகௌரவம் பார்த்து இருப்பு நிலையை இழக்காமல் இனியேனும் சுதாகரித்து கொள்ளுங்கள்.
தேசபக்தி,தேசியம் எனும் கண்மூடித்தனமான நம்பிக்கையால் நாட்டின் வளர்ச்சியே கிழ் நோக்கி சென்று கொண்டுள்ளது. அகக்கண்களை நன்றாக திறந்து உலகத்தில் நடப்பதை உணருங்கள்.

2018 / 122 மொசாம்பிக் 
2018 / 144 ஜிம்பாபே
கூட தன் நாட்டின் பேரழிவுகளை உடனுக்குடன் தரவேற்றி நடப்பு நிலையை உலகறிய செய்யும் போது தமிழ் நாட்டு தமிழர்கள் கற்காலம் நோக்கிப்ப்யணிப்பதும் ஜாதி,மதம் என பிரிந்து ,வீண் பெருமைகள் பேசி, கல்வி முதல் அனைத்திலும் பின் தங்கி இருப்பதை அடுத்த பதிவில் காணலாம்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே 🇮🇳

எனக்கு சக்தி எல்லாம் பிறக்கவில்லை. 
தலைச்சுத்தி தான் வருகின்றது.