14 ஜனவரி 2016

வாழ்க்கை என்பது வரமாகட்டும்!

அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்!

சோதனைகள்  நேரம் சோர்ந்திடாதீர்கள் 
வாதைகள் கண்டு பயந்திடாதீர்கள்!
தோல்விகள் கண்டு துவண்டு விடாதீர்கள்!

சாதனைகளே தொடந்து வந்திட்டால்
வாழ்க்கை என்றுமே வரமாகாது!

வாழ்க்கைப்பாதையில் பயணம் செய்திட
துள்ளும் மனமதை அடக்கி வெல்லணும்
எள்ளல் வார்த்தையை எரிக்க தெரியணும்

வல்லவனே நீ செல்லுமிடமறிந்திடாவிட்டால் 
வாழ்க்கை என்பதுன் வரமாகாதே!

வெற்றி எனும் ஏணிப்படியில்
தோல்வி என்பது வேகத்தடை தானே!
சோதனை நேரம்  கலங்கி நின்றிட்டால்

சாதனை உன்னை கிட்டிச்சேராதே! 
வாழ்க்கை என்பதுன் வரமாகாதே!

சோதனை நேரம் ஒடுங்கி இருக்காமல் 
வேதனைகளை தாண்டி சென்றிட்டால்
வாழ்க்கை என்பதும் வரமாகுமே!

மனமார வாழ்த்துகின்றேன் , மனம் போல் வாழுங்கள்!

ஆரம்பமே அட்வைஸாக இருக்கின்றதே என என்னை திட்டாமல் பதிவை முழுமையாக படியுங்கள், பதிவின் இறுதி பகுதியில் இதற்கான பதில் உங்களுக்கு கிடைக்கும்,

அன்பானவர்களே! பிரச்சனைகளை கண்டு ஓடி ஒளியாதீர்கள், எனக்கு மட்டும் தானே  என உங்கள் நிலையில் மட்டும் பிரச்சனைகளின் சவால்கள் நேரம் சிந்திக்காமல் உங்களை காட்டிலும் கோடானும் கோடி மக்கள் உங்களுக்கு கிடைத்த வரம் இன்றி தவிக்கின்றார்கள் என உணர்ந்திடுங்கள்.  நமக்குக்கீழே உள்ளவர் கோடி என நினைத்து பார்த்து நிம்மதி தேடுங்கள்!

உங்களிடமிருப்பதை உணராமல் இல்லாததை தேடி ஓடாதீர்கள். கடவுள் நம்மிடமிருந்து ஒன்றை எடுத்தால் இன்னும் பலதை நமக்குள் மறைத்து வைத்திருப்பான் என புரிந்து மறைவாயிருப்பதை தேடி வெளிக்கொண்டு வந்து உங்களை நிலை நிறுத்துங்கள்.

நம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சவால் உண்டு. நமக்கெனும் இலக்கு உண்டு, பிறந்தோம்,வளர்ந்தோம், மறைந்தோம் என்றில்லாமல் நாம் வாழ்ந்தோம் என்பதற்கு சாட்சியாய் எதை விட்டு செல்ல போகின்றோம் என யோசிப்போம்.

நிர்வாணியாய் வந்தோம், அதே நிர்வாணியாய்  போவோம் எனும் நிலையில் கொண்டு வந்ததும் இல்லை , எடுத்து செல்லப்போவதுமில்லை என்பதை உணர்ந்து இப்பூமியின் பொக்கிஷ்ங்களும், வீடுவாசல்களும், நகை நட்டுக்களும், கற்கும் கல்விகளும் கூட நம்முடன் வராது எனும் போது நம்மிடம் இல்லாததை குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்.

நாம் சாதிக்கப்பிறந்தவர்கள் அன்பானவர்களே! சோதனைகள் தொடர்வதில்லை என உணர்ந்து சாதனையாளர்களாகுங்கள்.தயக்கங்கள் தடைகளை சுட்டுப்பொசுக்கி தைரியமாய் தன்னம்பிக்கையோடு வெளி வாருங்கள்.! உங்களால் முடியும்!

இன்னாளில் கவலைகள் மறையட்டும், கண்ணீர்கள் நீங்கட்டும், அன்பும் ஆரோக்கியமும் உங்களுக்குள் பொங்கட்டும்!


என்னுடைய 13  ஆவது வயதில்  இரண்டாம்  மாடியிலிருந்து  புதிதாய் கட்டடம் கட்ட அஸ்திவாரம் போடப்பட்டிருந்த  நிலத்துக்கு கீழான கான்கிரிட் தரையின் மேல் விழுந்ததனால் ஏற்பட்ட  உடல் உபாதைகள், தலைவலிகள், மன வலிகளில் தொடர்பாய். வாழ்க்கையே போராட்டமாய் ஆனாலும்... வாழ்ந்து காட்டும் வரம் தந்தேன் என எனை வாழ வைக்கும் இறைவனுக்கு நன்றி!

ஏற்கனவே ஐந்தாறு வயதில் கோயில் குளத்தில் குளிக்கும் போது பின்னந்தலை அடி பட விழுந்திருக்கின்றேன். அதன் பின் மீண்டும் பதிமூன்றாம் வயதிலும் விழுந்ததனால் மரணித்து போயிருக்க வேண்டிய என்னை மரணத்தின் பிடியிலிருந்து காத்து. என்னை சாதனையாளராக்கிய இறைவனுக்கும் நற்பழக்கவழக்கங்களை கற்பித்து அன்பு செய்யவும் அரவணக்கவும் கற்பித்த என் பெற்றாருக்கும், அறிவில்சிறந்து விளங்க காரணமான  ஆசிரியர்களுக்கும், உன்னால் முடியும் என சொல்லி என்னை ஊக்குவிக்கும் என் அன்பு கணவருக்கும், சோர்ந்து விழும் போதெல்லாம் தனக்கேற்ற படி.. என்னம்மா ஆச்சு கவலைப்படாதேம்மா ஜீசஸ் கிட்ட எல்லாம் சொல்லம்மா! அவர் எல்லாமே தீர்த்து வைப்பார் என சொல்லும் என் அன்பு செல்வங்கள் கப்ரியேல், எப்சிக்கும்.......

எனக்கே எனக்குள் மறைந்திருந்த திறமைகளை வெளிகொணர செய்துஎன்னை ஈவன்ஸ் மனேஜ்மெண்டில் ஈடுபடுத்தி பின்னாலிருந்து வழி நடத்திய  முத்தமிழ் மன்ற சுதாகர் அண்ணாவுக்கும். தொடர்ந்து வழி நடத்தி வரும் அன்பு சுரேஷ் எனப்படும் பரஞ்சோதி அண்ணாவுக்கும்.. இற்றளவில் எனக்கொண்றென்றால் பதறித்துடித்து அன்னையாய் அரவணைக்கும்அன்பு செல்லத்தும்பி கட்டாரில்’இருக்கும் முஸம்மிலுக்கும்  என் பதிவுகள் மூலம் நன்றி செலுத்துகின்றேன்.

இந்த வலைப்பூவை நான் தொடங்க  என் இன்னொரு பரிமாணத்தினை வெளிப்படுத்த ஊக்க சக்தியாய் இருந்த மனசு குமாருக்கும், வலைப்பூ வடிவமைத்து தந்த அன்பு நண்பன் சேனைத்தமிழ் உலா சம்ஸுக்கும் என் நன்றிகள்!

இன்றில்லாவிடில் என்றேனும் நன்றி சொல்ல வாய்ப்புக்கிடைக்குமா எனும் நிலையில்லாத வாழ்க்கையை நாம் வாழ்வதனால் இப்பதிவில் நன்றி சொல்லி விட மனம் விளைகின்றது.

விபத்தின் தொடர்ச்சியாய் விளைவுகள் வினையாய் என்னை சுழட்டி அடித்தாலும் வாழ்ந்து தான் பார்க்கலாம் எனும் வைராக்கியத்தோடு  இற்றை வரை என் தன்னம்பிக்கையை தளர விடாது காத்துவர முடிவது இறைவன் அருளே!

விபத்தில் விளைவாய் வலிகள் என்னை தொடர்ந்தாலும் வாதைகள் என்னை வதைத்தாலும் என்னுடனிருக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் என்றும் என்னுடன் வருவது போல் உங்கள் ஒவ்வொருவருடனும் வர வேண்டுகின்றேன்.!


மனமார வாழ்த்துகின்றேன் , மனம் போல் வாழுங்கள்!
அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்!

12 ஜனவரி 2016

சுவிஸ்ஸர்லாந்துக்கு வாறியளா ? -பகுதி 2 நாடும் அதன் வளர்ச்சியும் !


சுவிஸ் நாட்டின் குறிக்கோள்  

ஒருவருக்கு எல்லோரும் எல்லோருக்கும் ஒருவர்

«Einer für alle, alle für einen» (ஜேர்மன்.)
«Un pour tous, tous pour un» (பிரான்ஸ்.)
«Uno per tutti, tutti per uno» ( இத்தாலி)
«In per tuts, tuts per in» (உரோமன்.)

சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?  வில் சுவிஸ்ஸர் லாந்த் என்றால் சட்டென நினைவுக்கு வருவது வங்கியும் கறுப்புப்பணமும்,ஹனிமூன் ஜோடிகளும் தான் என எழுதி இருந்தேன்!

அதையும் தாண்டினால் மாட்டின் கழுத்தில் கட்டும் மணி, சாக்லேட், வாட்ச் என   நினைவில் வந்து மறையும்.எனவும்  முடித்திருந்தேன். அதற்கு தேன்மதுரத்தமிழ் கிரேஸ்  சீஸும் கூட நினைவுக்கு வருமே என்கின்றார். 

ஆமாம் பாலும் தேனும் ஓடும் தேனாடு சுவிஸ்ஸர் லாந்த் என்றால் மிகையில்லை!

சுவிஸ்ஸர் லாந்து என்றாலே உலகின் அத்தனை கோடிஸ்வரரும்  இருக்கும் தேசமோ எனும் படியாய் நாட்டின் பெயரே பலரை ஆச்சரியமூட்டும் கனவுத்தேசமாய் இருக்கின்றது.உலகின் ஒவ்வொரு கோடிஸ்வரரும் சுவிஸ்லாந்தின் தமக்கு சொந்தமாக ஒரு குடிசையாகினும் இருக்க வேண்டும் என நினைக்கும்படியாய் சுவிஸ்ஸர் லாந்த் என்றாலே இனிமை நினைவுகள் தொடர்கின்றன!சுவிஸர் லாந்த் ஒரு சொர்க்க தேசம் என்பதில் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் செய்த அனுபவத்தில் நானும் சொல்வேன். 
சுவிஸ் நாட்டில் வாழும் வாய்ப்பினை பெற்ற நாங்கள் பாக்கிய சாலிகள் தான். 

நாட்டின் குறிக்கோளுக்கு ஏற்ப நிறபேதம், இனபேதம் அதிகமாய் இல்லாத நாடும் இதுவே! எல்லை நாடுகளிலிருக்கும் மக்களின்  குணவியல்பை தாங்கி   மிகக்குறைந்த வீதத்தில்  நிற பேதம் வெளிப்பட்டாலும், பாடசாலை,
மருத்துவம், காவல்துறை சார்ந்த விடயங்களில் இப்பேதங்கள் காட்டப்படுவது மிக மிக அரிதே. 

இயற்கை வளங்கள் எதுவும் இல்லாமலே  சுற்றிவர ஆல்ப்ஸ் மலை கற்பாறைகளும், பனிமலைச்சிகரங்களையும் அரணாக கொண்டிருக்கும் இத்தேசத்தின் வளர்ச்சி உலகின் அத்தனை வளங்களையும் வைத்துக்கொண்டு இன்னும் வளர்கின்றோம் எனும் நம்ம நாட்டோடு ஒப்பிட்டளவில் கூட கற்பனை செய்ய இயலாதது என்பேன்! 


எக்காலமும் கரையாமல் ஐஸால் முடப்பட்டிருக்கும் மலைத்தொடர்கள். 

நாட்டின் அரசியலமைப்பு, பாடசாலை, பெண்கள் நிலை என ஒவ்வொன்றாக இந்த பதிவில் என்னால் இயன்ற வகை ஒரு முழுமையான பதிவொன்றினை தர இருப்பதனால்  சில நேரங்களில் பதிவு தாமதமாகலாம். மன்னித்து படித்து கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்துவீர்களாக!


நாட்டின் தேசியக்கொடி. 

சுவிஸர் லாந்து நாடு உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருப்பதோடு உலகில் நவீன அதே நேரம் நிலையான பொருளாதாரத்தோடு  மக்களுக்கான பாதுகாப்பான காப்புறுதியையும் வழங்கும்  நாடாகவும் இருக்கின்றது.

அத்தோடு உலகத்திலேயே உயர்ந்த வாழ்க்கைத்தரத்தினை கொண்ட நகரங்களாக சுவிஸர்லாந்திலிருக்கும் சூரிச்சும் ஜெனிவாவும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவிஸர்லாந்தில் செஞ்சிலுவைச்சங்கம், உலகவர்த்தக அமைப்பு,உட்பட ஐ, நாவின் ஒருஅலுவலகமும் அமைந்திருக்கின்றது. இதுவரை எந்த போர்களிலும் கலந்து கொள்ளாமல் நடு நிலை வாதியாக காட்டிக்கொண்டிருப்பதும் 1815ஆம் ஆணிடிலுருந்து எந்த போரிலும் சம்பந்தப்படாமல் இருப்பதும் கூட இந்த நாட்டின்  நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்லாம். அதனோடு கறுப்புப்பணம் எனப்படும் உலக பணக்காரர்களின் வங்கி இருப்பும் அதன் இரகசியங்களும் எந்த சட்டத்துக்கும் ஆட்படாதவைகள். நம்பிக்கைக்கும் நாணயத்துக்கும் உத்தரவாதம் தருபவர்களாய் சுவிஸ் வங்கிகள் இருப்பதனாலும் கூட நாட்டின் வளர்ச்சி நிலை நீடிக்கின்றது. 

இன்றைக்கிருக்கும் சுவிஸ் நாட்டின் மத்திய பகுதியோடு மட்டுமே 1292 ஆகஸ்ட் முதலாம் திகதி விடுதலை பெற்று 1499 செப்டம்பர் 22 வரை அங்கீகாரமற்ற கட்டமைப்புடன் ஆட்சி செய்த போதிலும் 1648 அக்டோபர் 24 இல் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது.

மத்திய பகுதியோடு மட்டும்  ஆரம்பத்தில் உருவான  சுவிஸ் விடுதலை பெற்ற காலத்திலிருந்தே  நில அபகரிப்புகள் மூலம் தன் நிலப்பரப்பை விருத்தியாக்கியது. இறுதியில் 1848  ஆண்டில் எல்லைகள் வரையறுக்கப்பட்டு இன்றைய  நவீன சுவிஸ் லாந்து உருவானது.. 

விடுதலை பெற்ற நாளான ஆகஸ்ட் முதலாம் திகதி இந்த நாட்டுன் தேசிய தினம் என அறிவிக்கப்பட்டு வருடா வருடம் கோலாகலமாக கலாச்சார ஊர்வலங்கள், வானவேடிக்கைகள் என கொண்டாடப்படுகின்றது. 

150,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் இங்கே வாழ்ந்ததாகவும் மிகப்பழமையான விவசாய நிலங்கள் இருந்ததாகவும்  ஆய்வுகளில் கண்டு பிடித்திருக்கின்றனர். பழமையை போற்றிப்பாதுகாக்கும் மக்களாக இம்மக்கள் இருப்பதனால் நாட்டின் பெரு நகரங்களிலும் நூறாண்டுகள் தொன்மையான கட்டிடத்தொடர்கள், காலத்துக்கேற மாறுதல்கள் இன்றி பராமரிக்கப்ட்டு வருவதும் அந்தந்த இடங்களில்  வரலாற்று நிகழ்வுகள் பாதுகாக்கப்பட்டு உல்லாசப்பயணிகளின் பார்வைக்கு விடப்பட்டு வருமானம் ஈட்டப்படுவதும் இந்த நாட்டின் சிறப்பியல்பாகும். 

உலகம் எத்தனை தொழில் நுட்பத்தில் வளர்ந்தாலும் அவைகள் எங்கள் வளர்ச்சிக்கு மட்டுமே தவிர அவைகளுக்கு நாங்கள் அடிமைகள் அல்ல எனும் மிகத்திடமாக முடிவெடுத்து  இக்கால பேஸ்புக், வாட்ஸப், போன்ற நவீன தொழில் நுட்ப தொடர்பாடல்களை கூட தூர நிறுத்துவோராய் இம்மக்களில் பலர்  இருக்கின்றார்கள்.

கிறிஸ்தவர்கள் இந்த நாட்டில் பெருமளவில் இருந்தாலும் அதிகார பூர்வமாய் இந்த நாடு எந்த மதத்துக்குள் உட்பட்டதாய் இல்லை என்பதனால் தனிமனித மத சுதந்திரம் பொதுமக்களுக்கு இடையூறாய் இராதவரை மதிக்கப்படுகின்றது. இஸ்லாமியர்களின் மசூதிகளும், இந்துக்களின் கோயில்களும் , புத்தமத ஆராதனைகளும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு யாரையும் வற்புறுத்தாமல் துன்புறுத்தாமல் அமைக்கப்பட்டு தம் மதத்தினை கைக்கொள்வதிலும் பரப்புவதிலும்  தடைகள் இல்லை.

சுவிஸில் பெண்களுக்காகவும் அவர்கள் வாக்குரிமை பெறவும் கூட எதிர்ப்புக்கள் இருந்தது. எதிர்ப்புக்களின் இடையே பெண்களுக்காக அரசியல் வாக்குரிமை 1971ல் வழங்கப்பட்டது- அதிலும் மிகப்பழமை போற்றும் அப்பன்சில் இண்டர்ஹோடன் மானிலத்தில் 1990 இல் இறுதியில் தான் பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப்பட்டது. எனினும் பெண்கள் தமக்கான உரிமை கிடைத்தபின் அரசியலில்முக்கியத்துவம் பெறும்படியாய் மிக வேகமாக தம்மை நிலை நாட்டினர்.  அதனை குறித்த விரிவான விபரம் இன்னொரு பதிவில் காண்போம். 

நம்ம நாட்டில் தான் பெண் சுதந்திரம் விடுதலை என பேசினோம் என்றால் அரைகுறை ஆடையோடு பவனி வரும் வெள்ளைத்தோல் பெண்களுக்கும் இந்த நிலையா என  யோசிக்க தோன்றுகின்றதா? 
மண்ணின் மைந்தர்களாம் மக்களின் 
மிக எளிமையான தோற்றம் இதுவே!

சுவிஸ்லாந்து நாட்டுமக்களும் அதன் மொழிகளும் நமது தமிழைப்போல் மிக தொனமையானவை!எம்முடைய கலாச்சாரம் போல் கட்டுக்
கோப்பானவைகள்
பிரிசெக்ஸ், கட்டுப்பாடற்ற கலாச்சாரம், மதுபானங்கள், போதைவஸ்துக்கள் என ஐரோப்பிய நாடுகள் குறித்து நம் பார்வைக்கோணம் சுவிஸ் நாட்டின் கலாச்சாரத்தோடு ஒப்பிடும் போது மாறுபடுகின்றது. இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள் மூதாதையர்கள் வழித்தோன்றலில் வழியே இன்னும் ஒருத்தனுக்கு ஒருத்தி எனுக் கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழ்பவர்களாக, தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கு தம்மை அடிமைப்படுத்தாமல் விவசாயம் செய்பவர்களாக, ஆடுமாடுகளை மேய்த்து பண்ணை விடுகளை பராமரித்து நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான பால், சாக்லேட்,காய்கறிகள் , உருளைக்கிழங்கு போன்றவற்றினை விளைவிக்கும் மண்ணை நேசிப்போராகவே இருக்கின்றார்கள்.அரசும் இப்படிப்பட்டவர்களுக்கு தகுந்த வசதிகளை செய்து கொடுத்திருக்கின்றது.

சிறுவர்களோடு ஊர்வலம். 
இளவேனில் காலங்களில் ஆடு, மாடுகளுக்கு அலங்காரமும் ஊர்வமுமாய் தெருவே அமர்க்களப்படும். மணிக்கணக்கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு விவயாயக்குடும்பங்கள் குழந்தைகுட்டிகளோடு  நாட்டின் கலாசார ஆடையணிகளோடுஊர்வலம் செலவது கண் கொள்ளா காட்சி!
 மாடுகளுக்கு அலங்காரம் 

அன்பு செய்வதிலும் வந்தாரை வாழவைப்பதிலும் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு நிகர் இவர்கள் தான்.. ஆனாலும் இந்த அன்பும், இரக்கமும், அரவணைப்பும்  கொஞ்சம் கொஞ்சமாய் அகல்கின்றது. புலம்பெயர்ந்து அகதிகளாக தம்மை இங்கே பதிவு செய்து  தாம்வந்த பாதை மறந்து குற்றச்செயல்களில்  ஈடுபடுவதோடு, வரி ஏய்ப்பு செய்வதும், வேலைகளுக்கு செல்லாமல் அரச உதவியில் வாழ்வதும், நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படியாமல் அஜாராகப்போக்கில் நடப்பதுமான  பலராலும், வேலையில்லா திண்டாட்டங்கள் அதிகரிப்பதும்  கடந்த  தேர்தலில் வெளி நாட்ட்வவர்களுக்கு புகலிடம் தருவதை  தவிர்க்க அல்லது குறைக்க நினைக்கும் மிகத்தீவிரமான   வெளி நாட்டவர் எதிர்ப்பு கொள்கை கொண்ட கட்சிக்கு வாக்களித்து தம் வெறுப்பினை கொஞ்சமாய் வெளிக்காட்டி இருக்கின்றார்கள்.
 நாட்டின் கலாசார ஆடைகளோடு இளம் பெண்கள் 
இதனால் மக்கள் மனதில் வெளி நாட்டவர்களுக்கான வினை விதைக்கப்படுகின்றது. நம்மவர்களும் அதீத ஆடம்பரங்கள், வங்கியில் கடன் வாங்கியேனும் கொண்டாட்டங்கள், உல்லாசப்பயணங்கள் என  வீண் ஜம்பம் காட்டுவதும்  தங்களில் ஒருவராய் எம்மை பார்த்த இம்மக்கள் தங்கள் எதிரிகளென  புலம்பெயர்தோரை பார்க்கும் காலம் வருமோ எனும் அச்சமும் எழாமல் இல்லை
சுவிஸ் நாட்டில் மிக உயர்ந்த மலைச்சிகரம் 
ஐரோப்பாவின்   உல்லாசப்பயணிகளுக்கான ரொப் ஏரியாவும் இதுவே. 
அளவீடுகள் குறிக்கப்பட்டிகின்றது. 

இத்தொடரில் அதன் வரலாறுகளை தொகுக்கும் போது தொடர்ந்து ஆண்டுகள் வாரியாக தொகுத்தால் படிக்கும் உங்களுக்கு போரடித்து போய் விடும் என்பதனால் இயன்றவரை இம்மக்களை குறித்தும் நாட்டைக்குறித்தும் என் அனுபவங்களை இடையிடையே பகிர முயற்சிக்கின்றேன். 

படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்தே எடுக்கப்பட்டது!

தொடர்வேன்!

09 ஜனவரி 2016

பயணங்கள் முடிவதில்லை_ தொடர் பதிவு

போவோமா ஊர்க்கோலம்  பூலோகம் எங்கெங்கும்


பயணங்கள் முடிவதில்லை எனும் தலைப்பில்   மகிழ் நிறை -மைதிலி அவர்கள் ஆரம்பித்து வைத்திருக்கும் பதிவைத்தொடர்ந்து  தேன்மதுரத்தமிழ்- கிரேஸ்  பயணத்தினை தொடர  என்னை அழைத்திருக்கின்றார்!

பத்து முத்தான கேள்விகளோடு பத்துக்குள் எம் பதிலைகளையும்  தர கிடைத்த வாய்ப்பைத்தந்தமைக்காக இருவருக்கும் நன்றி!. பத்துக்கேள்விகளுக்கும் விரிவாக பதில் சொன்னால்  தனித்தனி பதிவே ஆகி விடும் எனினும் இயன்ற வரை  என் பயண அனுபவங்களை உங்களோடு பகிர முடிந்ததில் மகிழ்ச்சி.

1.பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
இலங்கையில்  ஏழு எட்டு வயதில் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ரயிலில் பயணம் சென்றதாய் ஒரு குட்டி நினைவு! ரயிலில் ஏறும் போது என் தங்கை அணிந்திருந்த செருப்பு தண்டவாளத்தில் விழுந்து விட மற்றயதையும் கழட்டி கீழே போடு என நான் சொன்னதும்... ஏன் அப்படி என கேட்டதற்கு நமக்கு அந்த செருப்பு திரும்ப கிடைக்காது எனும் போது ஒத்தையை வைத்து நமக்கும் அதை எடுப்பவருக்கும் பிரயோசனம் இராது  என்பதால் அங்கே ரயில்
நிலையம் கூட்டிக்கொண்டிருந்த  ஏழைஆண் தான்  எடுத்து பயன் பெறுவார் எனும் நிச்சயத்தில்  அவருக்கு பயன் படட்டுமே என சொன்னதாயும்....கூட இருந்த ஆண்டி என்னை பாராட்டியதும்  தெளிவில்லாமல்  கலங்கலாய் வரும் ப்ளாஸ்பேக்காய்..!

ஆனாலும்  என் நினைவில் நிற்பது.. பதினைந்து வயதில் இறுதியில் ஆஸ்திரியாவில்  பெல்கிரேட்டிலிருந்து சுவிஸ்  போர்டர் வரை புறப்பட்ட ரயில் பயணம். எங்களுக்கு முதல்  ஐரோப்பிய ரயில் அனுபவம், ஆறு பேர் அமரும் கூபேயில்  வெள்ளைக்காரர் ஒருவர் புகை பிடிக்கும் போது என் கூட வந்தவர்களும் அவரை பார்த்து புகை பிடிக்க.... டிக்கட் பரிசோதகர்  வருவதை அவதானித்து  அவர்  புகையை அணைத்து விட்டு அமைதலாயிருக்க இவர்கள் தெம்பாய் விரலிடுக்கில் சிகரட்டோடு  டிக்கட்டை நீட்ட ... செக்கர்  புகைத்தல் தடை எனும் குறியிட்டைக்காட்ட  இவர்கள் அவரை காட்ட..... மீதி என்ன பைன் தான்!

 2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
பெரும்பாலான பயணங்கள் மகிழ்ச்சிக்குரியதாய் தான் இருக்கும். மனதில் மகிழ்ச்சி இல்லை எனில் பயணத்தினை தவிர்த்து விடுவேன்!

சுவிஸிலிருந்து ஜேர்மனுக்கும் பிரான்ஸுக்கும்  ஆயிரம் கிலோ மீற்றர்கள் தூர பயணங்கள் பல தடவை பயணித்திருந்தாலும்  நாங்கள் நான்கு பேரும் ஆறு வருடம் முன்னால் எவ்வித திட்டமும் இல்லாமல் எங்கள் காரில் சுவிஸிலிருந்து போர்த்துகல் புறப்பட்டதை மறக்கவே முடியாது. 

சுவிஸ் டூ போர்த்துகல் 
சுவிஸ்,பிரான்ஸ், ஸ்பெயின் , போர்த்துகல் என  நான்கு நாடுகள் 
மொத்தம்  2500 கிலோ மீற்றர்கள்!

அதிகாலை நான்கு மணிக்கு புறப்பட வேண்டும் என திட்டமிட்டு ஐந்தரைக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு மறு நாள் அதிகாலை ஆறரைக்கு  போர்த்துகல்லில் செல்லுமிடம் சென்று சேர்ந்த சாகச பயணம். அத்தனை தூரமும் வண்டி ஓட்டியது என்னவர் என்பது கூடுதல் தகவல். அதிகாலைஐந்தரைக்கு புறப்பட்டு சுவிஸில் பிரேக் பாஸ்ட், பிரான்சில் லஞ்ச், ஸ்பெயினில் டின்னர் என ஒரே நாளில் மூன்று நாடுகள்! 

இடையிடையே குட்டி குட்டி பிரேக் எடுத்து பயணம் செய்து விடிகாலை போர்த்துக்கல் சென்றடைந்தோம். அருமையாய் இருந்தது. மீண்டும் ஒரு தடவை செல்ல வேண்டும் என விருப்பப்படும்  படி மறக்க முடியாத பயணம் அது!

எங்கள் பயணத்திட்டமிடல் ரெம்ப வித்தியாசமானதுப்பா.. இங்கே தான் தங்க வேண்டும் எனும் திட்டமிடல் இருக்காது. வண்டியில்  குட்டி ரைஸ்குக்கர், காஸ் ஸ்டவ், பால் காய்ச்ச ஒரு குட்டி சில்வர் பாத்திரம், பொரியல் செய்ய ஒரு நான்ஸ்டிக் பாத்திரம், குட்டி டப்பாக்களில் உப்பு முதல் தேவையான மசாலாக்கள், வெங்காயம், புளி முதல் சின்னகத்தியும் வெட்டுவதற்கு தயாராக சின்ன பலகையுடன் தரையில் விரிக்க  நம்மூர் பிரம்புப் பாய், ரப்பர் சீட்,போர்வை , வெயில் குடை எல்லாம் தயாராகி விடும். 

கடற்கரை பிரதேசம் எனும் இலக்கை வைத்து புறப்படுவோம். கடற்கரைக்கு 20 கிலோ மீற்றர் தூரமிருக்கும் போதே உள்ளூருக்குள்  நுழைந்து ஹோட்டல்களில் ரூம் இருக்கா என கேட்போம் அனேகமாக கிடைத்து விடும். பிரேக் பாஸ்ட் வித் ரூம்.காலையில் ஆறுதலாக எழும்பி  நல்லா பிரேக்பாஸ்ட் சாப்பிட்டு விட்டு,வண்டியில் ஏறினால் கடலோரமாய் வண்டியை பார்க் செய்து விட்டு  நாள் முழுக்க கடல் நீருக்குள் தான். மதிய உணவை சிந்திப்பதில்லை எனினும்  மதியத்துக்கு பின்  மாலையானதும் அங்கே என்ன கிடைக்குதோ அதை வாங்கி சமைக்க முடியும் எனில் குட்டி குக் ஆரம்பிப்பேன்!கடலோர நகர் என்பதால் பிரெஷ் மீன்கள் மலிவாக கிடைக்கும்.  உடனே வாங்கி சுத்தப்படுத்தி  பொரியல், குழம்புன்னு  கலக்கிருவோம். இப்படி சமைத்து சாப்பிடும் போது கிடைக்கும் சுவை எங்கேயும் கிடைக்காது என்பேன். 

காஸ் ஸ்டவ்வில்  பல காய்ச்சி மினரல் வாட்டர் சேர்த்து டீயும் குடித்துக்கொள்வோம். லாங்க் ட்ரைவ் போகும் போது ஹைவேக்களில் பார்க்கிங்கில் நிறுத்தி இந்த மாதிரி டீ  போட்டு குடிக்க  நிரம்ப பிடிக்கும்.

பெரும்பாலும் பயண நேரத்தில் ஹோட்டல்களில் பாஸ்ட் பூட் உணவுகளை தவிர்த்து விடுவோம். ஒரு நாள் பிள்ளைகளின்  விருப்பத்துக்கு கேட்டு அழைத்து சென்றாலும் மகன் பெரும்பாலும் தவிர்த்து விடுவார். காலை உணவு தவிர நாங்களே தயார் செய்து உண்பது தான் எமக்குப்பிடிக்கும். 

3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?
ஐன்னலோரமா தலையை சாய்த்துகொண்டே தூங்கிட்டு  பயணம் 
செய்ய பிடிக்கும். இன்னும் கொஞ்சம் இந்த பயணம் நீளாதா என கேட்கவும் வைக்கும். ஹாஹா!

4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை 
உண்மை சொன்னால் பயண நேரம் இசை கேட்க பிடிக்காது!  கூட வருபவர்களுடன் அரட்டையாய் பேசிட்டு வரத்தான் பிடிக்கும்! அல்லது அமைதியாக  என்னை கடந்து போகும் மலைகள், மரங்கள், கட்டடங்கள் என பார்த்து ரசிக்க பிடிக்கும், இசைகளில் ரெம்ப அதிர வைக்காத அமைதியூட்டும் எந்த இசையானாலும்  தனியே இருக்கும் போது மட்டுமே கேட்க பிடிக்கும். ஆட்கள் இருக்குமிடங்களில் சத்தமாய் மியுசிக் போடுவதும் கேட்பதும், தொலைக்காட்சி பார்ப்பதும் எப்பொழுதுமே பிடிக்காது!அவர்களுடன் உரையாடத்தான் பிடிக்கும் 

5.விருப்பமான பயண நேரம்
அதிகாலையும் மாலை நேரமும் விருப்பமான பயண நேரம், நள்ளிரவும் நடுப்பகலும் பயணம் செய்வதை தவிர்த்து விடுவேன்!

6. விருப்பமான பயணத்துணை.
வாழ்க்கையில் முழுமைக்கும் முடிந்த பின்னும்  என் கணவர் மகன் மகள் கொண்ட நான்கு பேரும் சேர்ந்தே இருக்கணும்.. தனித்து நெடுந்தூரம் பயணம் செய்யும் சூழல் வரவே கூடாது! 

7. பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?
காரில் பயணம் எனில்  எதையும் படிக்க மாட்டேன்! ரயிலில் எனில் தொடர்கதை அல்லாத வார இதழ்கள் எதுவானாலும்  கைப்பையில் சில புத்தகங்கள் வைத்திருப்பேன். நாவல்கள்  வீட்டில் இருக்கும் போது தான் படிப்பதுண்டு. 

8.  விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?
அறிமுகமான யாருமில்லாத புதிய இடம், கடற்கரையோடு சூழ்ந்த சூழல். தேடி எந்த முன்னேற்பாடும் இல்லாமல் தீடிரென பயணம் செய்ய பிடிக்கும். 

 9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
அந்த நேரத்தில் எதை விரும்பி கேட்டிருக்கின்றேனோ அப்பாடலை முணுமுணுப்பேன்!பெரும்பாலும்......
ஒவ்வொரு பூக்களுமே சொல்கின்றதே!
நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே!
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா?



விண்ணில் செல்லத்தான் ஒரு சிறகுகள் தருவாயா?
இந்த பாடல் சுவிஸர்லாந்தில் எங்கள் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கின்றது என்பது கூடுதல் தகவல் 

10. கனவுப் பயணம் ஏதாவது ?
செவ்வாய்க்கிரகம் போக முடியல்லன்னாலும் நம்ம பக்கத்திலிருக்கும் மூன்னுக்கு ஒரு வாக் போய் வரணும் என நீண்ட நாள் ஆசை! எப்போது தான் நிறைவேறுமோ?

போவோமா ஊர்க்கோலம் பூலோகம் எங்கெங்கும்! 
பயணத்தில் என்னுடன் தொடர.........

பூவைப்பறிக்க கோடரி எதற்கு எனக்கேட்கும் கில்லர்ஜி!
வசந்த ஊஞ்சலாடும் மனசு குமார்  
காணாமல் போன கனவுகளுக்கு சொந்தக்காரியாம் ராஜி  



அவர்களிடம்  கேட்கவே இல்லை. ஆனால் பதில் சொல்லி விடுவார்கள் என நிச்சயம் நம்புகின்றேன். நம்பிக்கை தானே வாழ்க்கை!  என் நம்பிக்கையை காப்பாத்துங்க மக்களுக்கு மக்களே!

சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?



உலக வரை படத்தில் சுவிஸ்ஸர் லாந்த் 
படம் நன்றி  இணையம் 

பிறப்பால் இந்திய இலங்கை கலப்பிலும் வளர்ப்பால் முழு சுவிஸ் காரியாகவும்  கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக என்னுடைய வாழ்க்கையில் மூன்றில் இரண்டு பகுதியை சுவிஸ்லர்லாந்து தேசத்தில்  கழித்து  சுவிஸ் குடியுரிமையும் பெற்ற என்னிடம் உன் சொந்த நாடு எது என கேட்டால் தயக்கமில்லாமல் சொல்வேன்! என் நாடு சுவிஸ்லர்லாந்தென...!

எனக்குள் அத்தனை தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தந்து புலம்பெயர்ந்தவர்களென ஒதுக்கி வைக்காமல் எங்கள் திறமைக்கும், அறிவுக்கும் இடம் கொடுத்து எம்மை ஊக்கப்படுத்தும் அன்பான, பண்பான மக்களை கொண்ட தேசம் இது. சொந்த நாட்டில் கிடைக்காத சுதந்திரமும், நிமிர்ந்த நேர் கொண்ட பார்வையும், பாரதி சொன்ன புதுமைபெண்ணாய், எதற்கும் அஞ்சாத தைரியமும் இந்த நாடு எனக்கு தந்த அளப்பரிய பரிசில்கள்.

உன்னால் முடியும், உன்னாலும்முடியும், உன்னால் தான் முடியும் என என்னை எனக்குள் இருப்பதை வெளிக்கொணர்ந்து என்னை வானம் தொட வைத்த அன்பான நட்புக்களை கொண்ட நாடு இது.

நிறைகள் போல் குறைகளும் இருந்தாலும்  நிறைவானது வரும் போது குறைவானது மறைந்தே போகும் படியாய்  நாட்டுப்பற்றுக்கொண்ட மக்களை கொண்ட நாடு இது! 

இயல்பிலேயே அன்பில் ஊறிய இம்மக்கள் வந்தாரை வாழவைக்கும் தர்மப்பிரபுக்கள் என்றாலும் மிகையில்லை.புலம்பெயர்ந்து அகதியாய் வரும் ஒருவருக்கு உலகில் எங்குமே கிடைக்காத வசதிகளையும், வாய்ப்பையும், பாதுகாப்பையும் தரும் அருமையான தேசம் இது,

இந்த நாட்டைக்குறித்தும் இதன் சிறப்புக்கள் குறித்தும் எனக்கு தெரிந்த வரை சிறு தொடராய் இங்கே பகிரலாம் என நினைக்கின்றேன்!

 நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் உறவுகளே!

இப்பதிவை படிப்பவர்கள் இந்த நாட்டை குறித்து அறியும் ஆர்வத்தோடு படித்து கருத்துக்களை இட்டால் மகிழ்வேன்.

 சுவிஸ்ஸர்லாந்த் 
Switzerland

சுவிட்சர்லாந்து (Switzerland) அல்லது சுவிஸ் கூட்டமைப்பு நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.

சுவிஸ் நாட்டின் எல்லைகளாக வடக்கே ஜேர்மனி, மேற்கே பிரான்ஸ், தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லெய்செஸ்டீன் ஆகிய நாடுகள்உள்ளன.


                                   சுவிஸர் லாந்தை சுற்றி இருக்கும் தேசங்கள்... 
                                                       படம் நன்றி  இணையம் 
சுவிட்சர்லாந்து வரலாற்று நோக்கில் ஒரு கூட்டமைப்பு .ஆனால் 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது.

41,285 சதுர கிமீ பரப்பளவில் தோராயமாக 8,014,000 மக்கள் தொகை (2012) கொண்ட நாடு.1,853,400 மொத்த மக்கள் தொகையில் (23 %) வெளி நாட்டவர்களை கொண்ட நாடு!

சுவிஸ் நாடு 26 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி குடியரசு ஆகும்.

கூட்டமைப்பின் அதிகாரத் தலைமையிடமாக பெர்ன் நகரமும் நாட்டின் பொருளாதார மையங்களாக இரண்டு உலகளாவிய நகரங்களான ஜெனீவாவும் சூரிச்சும் திகழ்கின்றன!

ஆட்சி மொழிகளாக ஜேர்மன், பிரெஞ்ச், இத்தாலி, உரோமன் போன்ற மொழிகள் உள்ளன!

சுவிஸ் நாடு அதன் மொழிகளுக்கு ஏற்பவே ஆழைக்கப்படுகின்றது.

Schweiz..ஜேர்மன் 
Suisse.. பிரெஞ்சு
Svizzera.. இத்தாலி 
Svizra.. உரோமன்
Switzerland.. ஆங்கிலம் 

ரோமன் கத்தோலிக்க, புரொடஸ்டான் கிறிஸ்த்தவர்களை அதிகம் கொண்ட நாடு இது!எனினும் மதவிடயத்தில் அவரவருக்காக தனிப்பட்ட சுய நிர்ணய உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடும் இதுவே!

கிறிஸ்தவ நாடென சொன்னாலும் கிறிஸ்தவர்கள் என்பதனால் சட்டங்கள் இளகுவதுமில்லை அன்னிய மதத்தார் என்பதனால் இறுக்குவதும் இல்லை.!

தனி மனித சுதந்திரம் பொது நன்மைக்கும் சட்டத்துக்கும் உறுத்தலாய் ஆகாத வரை மதங்களை மதிக்கும் மக்களை கொண்ட தேசமும் இதுவே!

சுவிஸ்ஸர் லாந்த் என்றால் சட்டென நினைவுக்கு வருவது வங்கியும் கறுப்புப்பணமும்,ஹனிமூன்  ஜோடிகளும் தான்!

அதையும் தாண்டினால் மாட்டின் கழுத்தில் கட்டும் மணி, சாக்லேட், வாட்ச் என   நினைவில் வந்து மறையும்.

தொடர்வேன்!