28 பிப்ரவரி 2019

சத்தமாக சொல்லுவோம், யுத்தம் வேண்டாம்.



நாட்டினுள் நடந்து முடிந்த இரு இனங்களுக்கிடையிலான் யுத்தமும் இரு நாடுகளுக்கிடையிலான் யுத்தமும் ஒரே பாதிப்பை தரக்கூடியதா?
ஆசியாக்கண்டத்தின் இரு நாடுகளுக்குள் போர் பிரகடனப்படுத்தப்பட்டால் இலங்கையின் வாழும் மக்களில் நிலை என்ன?

அண்டை நாடுகளின் போர்ச்சூழல் நாம் கைகொட்டி கேலி பேசி, வன்மம் தீர்க்கும் நிலையிலா இருக்கின்றது?

இந்தியா / பாகிஸ்தான் யுத்தம் ஆரம்பித்தால் வட இந்திய மாநிலங்களை போல் தென் இந்திய மாநிலங்கள் அன்றாக வாழ்க்கை சூழல் மாற்றங்கள், பொருளாதார நெருக்கடிகளை கொண்டு வரலாம் என்றாலும் நேரடிப்பாதிப்பை உணர சற்று காலமெடுக்கலாம்.
உலக அமைப்பில் இலங்கையின் அமைவிடம் ஆசியாவின் ஏனைய நாடுகளை கண்காணிக்கும் கேத்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனால் இலங்கையும் அங்கே வாழும் மக்களும் யுத்தப்பிரதேச மக்களை போல் நேரடி பாதிப்பை அடைவார்கள்

இந்தியா/ பாகிஸ்தான் போர் என்பது 
இரு நாடு மட்டுமல்ல இரு மதங்களுக்கிடையிலான போராக உலக நாடுகளை இருகூறாக்கும்.
ரஷ்யாவும்,அமெரிக்காவும்,சமாதானம்,சமாதானம் எனும் வெள்ளை கொடியை ஆட்டிக்கொண்டே தங்கள் ஆயுதப்பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பார்கள்.அடி,வெட்டு,குத்து என இருபக்கமும் நின்று ஏற்றி,இறக்கியும் விடுவார்கள் அப்பாவிகள் பலியாக்கப்படுவார்கள். 
உயிர் உடமை சேதாரம் பல மடங்காக இருக்கும். உலகின் யுத்தத்துக்கான சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகள் அனைத்தும் மீறப்படும்.

இரண்டு நாடுகளும் தம் கட்டுப்பாட்டை விட்டு உலகத்தின் ம்ஃவியாக்கள் கைக்குள் சிக்கி விடுவார்கள். இதை தான் இம்ரான்கானும் தன் உரையில் சொல்லி இருக்கின்றார்.
ஐரோப்பிய நாடுகள் வேடிக்கை பார்க்க, சீனாவும் ஜப்பானும், கிடைத்த வரை இலாபம் என பிடுங்க பார்க்கும்.
ஈழத்தில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டபோது பேச்சுவார்த்தை எனும் பெயரில் ஐ,நா எனும் பூனையை நடுவராக்கி அதன் கையில் சமாதானம் எனும் கேக் துண்டை கொடுத்து உனக்கு, எனக்கு என வேடிக்கை காட்டி,தட்டித்தடவி நம்பிக்கை தந்து நட்டாற்றில் இல்லை நடுக்கடலில் தள்ளி விட்டது போல இரு நாடுகளுக்கும் தூதுப்புறாக்களை அனுப்பி சமாதானப்பேச்சுவார்த்தையும், யுத்த தளபாடங்களின் விலைப்பேரங்களும் அடுத்தடுத்த மேசையில் விவாதிப்பர்கள்.
கடந்த முப்பதாண்டுகளாகவே மத்திய கிழக்கு நாடுகளில் போர் மூளும் அபாயச் சூழல் ஏற்படும் போதெல்லாம் உலகலாவிய ரிதியில் முக்கியமாக ஐரோப்பாவில் விமான சேவைகளை ரத்தாக்கும் காரணத்தை ஆராய்ந்துள்ளோமா? இனி அறிந்து கொள்ளலாம்.. விமானப்போக்குவரத்துகள் தடைப்பட்டால் கப்பல் போக்குவரத்துக்களுக்கான இலகு தளமாக இலங்கை இருக்கும்.
🔘யுத்தம் வந்தால் இராணுவம் எங்கோ சண்டை பிடிக்கின்றது,செத்து மடிகின்றது என பேஸ்புக் ஸ்டேட் பார்த்து ஆங்கிரி ரியாக்‌ஷனை தட்டி விட்டு சினிமா பார்க்க முடியாது.
🔘யுத்தம் வந்தால் அது மனிதர்கள் நேருக்கு நேர் மோதிடும் யுத்தமாக இராது. உலகின் சட்டங்களிலிருந்து மறைத்தும், ஒளித்தும் வைத்திருக்கும் அணு ஆயுதங்களுடனான யுத்தமாகவே இருக்கும்.
🔘வானம் சண்டை போடும், மேகம் அழுது வடியும். 
நம்ம தலைக்கு மேல் எந்த நொடியும் குண்டு விழும் எனும் நடுக்கத்தோடு வாழும் படி அணு ஆயுதங்களை பயன் படுத்தும் யுத்தமாகவே இருக்கும். அக்கினி பற்றி எரியும்.

நாட்டின் தலைவர்களும், முக்கியமானவர்களும், செல்வந்தர்களும் தம்மை பாதுகாத்து கொள்வார். இலங்கையில் கூட பல சிங்கள அரசியல் வாதிகள் தம் வீடுகளுக்கு கீழ் பாதுகாப்பான நிலவறைகளை முன்னேற்பாடாக கட்டி வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.
🔘அப்பாவி பொதுமக்கள் தான் பாதிக்கபப்டுவார்கள். கொத்துகொத்தாய் செத்து வீழ்வார்கள். அங்கவீனர் ஆவார்கள். 40 வீரர்களுக்காக தேசபக்தி எனும் பெயரில் போரினை நியாயப்படுத்துவோர் எனவெல்லாம் பாகுபாடு பார்க்காது அனைவர் மேலும் குண்டு விழும். இனம் மதம், ஜாதி பேதமெல்லாம் பார்த்து அணுகுண்டு வீசப்படாது. மேலிருந்து விழும் குண்டுக்கு பேதமெல்லாம் இல்லை. மொழியும் இல்லை.
இந்தியா வானிலிருந்து குண்டு வீசி 300 பேரை கொன்றதாக சொன்னதை கேட்டு கெக்கலிக்காதீர்கள். அதே குண்டு உங்கள் மேல் அதே வானிலிருந்தும் போடப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
⁉️ஆசியாவில் யுத்தம் மூண்டால் முழு இலங்கையும் ஆயுதக்களஞ்சியமாகிப்போகும்.
இலங்கையின் பல பாகங்களையும் வல்லரசு நாடுகள் சடுதியில் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும். ஏற்கனவே அமெரிக்காவும், சைனாவும் இலங்கையில் தம் இருப்பை ஸ்திரமாக்கி வீட்டார்கள். கடலோரப்பிரதேசங்களை விட்டு இனி அவர்கள் அசையப்போவதே இல்லை.இந்தியாவும் அபிவிருத்தி எனும் பெயரில் தானம் வார்த்து தன் இருப்பை தக்க வைக்க முயற்சிக்கின்றது. கண் மூடி கண் திறக்க முன் நாம் அனைத்தையும் இழந்திருப்போம்.
முதலாம், இரண்டாம், உலக மகா யுத்த காலத்தில் எந்த பக்கமும் சாராமல் இருந்தும் சுவிஸ் நாடு எப்படி அனைத்து நாடுகளாலும் பாதிக்கப்பட்டதோ அதை விட 100 மடங்கு மோசமாக இலங்கையும் இலங்கை மககளும் ஆசியாவில் போர் ஏற்பட்டால் பாதிக்கப்படுவார்கள். இன்றிருக்கும் பாதுகாப்பு சூழல் கூட கேள்விக்குறி ஆகும், நிம்மதி பறி போகும். பதட்டம் நிலைக்கும்.
முள்ளி வாய்க்கால் யுத்தத்தில் வன்னிவாழ் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள் என்றாலும் முழு இலங்கையும் பொருளாதார ரிதியிலான பின்னோட்டத்தையும், 40 ஆண்டுகள் தொடர்ந்த யுத்தத்தின் விளைவுகளையும் அனுபவித்து கொண்டு தான் இருக்கின்றது.
மீண்டும் நம் மக்களை அடிமைப்படுத்தும் யுத்தம் தேவையா?
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பது போல் 
கலை,கல்வி மட்டுமலல் அன்றாட வாழ்வில் மாற்றங்கள் அனைத்தும் தமிழ நாட்டினூடாகவே நாம் பின்பற்றுகின்றோம். இல்லை என சொல்லி நம்மை நாம் ஏமாற்றுகின்றோம்.

இந்தியாவின் வீழ்ச்சியும் எழுச்சியும் இலங்கையை அசைக்கும்.
இனி ஒரு யுத்தம் தேவையா? சிந்திப்போம்.
தயவு செய்து சமூக ஆர்வலர்களும்,ஆன்றோர்களும் தம் கருத்தினை பகிருங்கள்.
இளையோருக்கு உணர்த்தும் படியாக கருத்துக்களை முன் வையுங்கள். 
வழி நடத்துங்கள்.


ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்
இனி ஒரு போர் வேண்டாம்.




2 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஈழத்தில் அழிந்ததை விடவா....எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்.... தாங்கள் சொன்னது உண்மைதான்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. ஈழத்தின் அழிவு என்பது உள் நாட்டு யுத்தம்,இந்தியா/ பாகிஸ்தான் யுத்தம் என்பது தெற்காசியாவின் யுத்தம் எஞும் போது ஈழத்தை போல் 100 மடங்கு அதிக அழிவும் பாதிப்பும் இருக்கும், அதை புரிந்து கொண்டால் போதும். இனி ஒரு யுத்தம் வேண்டம என நாம் உணர்வோம்.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!