10 மார்ச் 2017

மருந்தெனும் பெயரில் மயக்கமா ?

கடந்து போன வருட முடிவும் இந்த வருட ஆரம்பமும் எங்கள் வீட்டில் மகன், மகள்  இருவருக்கும் ஒருவகை வைரஸ் காய்ச்சல், இருமல் தடிமலுடன் தான் ஆரம்பமாகியது.
எப்போதுமே காய்ச்சல், இருமல் என வந்தால் உடனடியாக டாக்டர்களிடம் செல்லும் வழக்கமில்லை என்பதனால்  அவ்வாரங்கள் பள்ளி விடுமுறை நாளும் என்பதனால் ஒருவாரம் வரை வீட்டு மருந்து, இருமல் தேனீர், தேன் என  குடித்து  குணப்படுத்தலாமா என முயற்சித்து  பள்ளியும், வேலையும் தொடங்கிய பின்னும் அதே நிலை தொடர மெடிகல் கடிதம் வாங்கவேனும் டாக்டரிடம் போக வேண்டும் எனும் நிலையில் தான் சென்றோம்.  நாட்பட்ட இருமல், காய்ச்சல் எனில் ஆண்டியாபிட்டிக் மாத்திரைகள் தருவார்கள்,  இரண்டு நாள் பயன் படுத்தினால் சரியாகத்தான் போகும்,  பிள்ளைகளுக்கு குணமாகி விட்டதென நினைக்க... மாசி மாத ஆரம்பத்தில் எனக்கு ஆரம்பித்தது. 

ஹோட்டல், பார்ட்டி, ஆர்டர் என எப்போதும் சக்கர நிலையில் வீட்டுக்கும் கடைகளுக்கும் ஹோட்டலுக்கும் ஓடிக்கொண்டிருப்பதனால்,,, நோய்கள் வந்தாலும் அதை கவனிக்காமல் வலி மாத்திரை ஒன்றை   சாப்பிட்டு விட்டு   வேலைகளை கவனிப்பேன். முடியாமல் போகும் போது நன்கு போர்த்திட்டு தூங்கியும் விடுவேன். ஆனாலும் இந்த முறை வந்த காய்ச்சல், இருமல் கிட்டத்தட்ட 15 நாட்கள் அடித்து போட்டது போல் படுத்த படுக்கையில் கொண்டு விட்டது. முழுமையாக ஒரு மாதம் என் அன்றாட பணிகளை பாதித்து விட்டது. 

இதே போல் ஒரு வைரஸ் பரவல் 17 வருடங்களுக்கு முன் என் மகன் இரண்டு வயதாக இருந்த போது  வீட்டில் அனைவரையும் ஆட்டிப்படைத்து ஒரு மாதத்தின் பின்னே அகன்றது. மீண்டும் இந்த தடவை  கைகாலெல்லாம் பிச்சி பிச்சி போட்டது போல் இழுக்க ஆரம்பித்து வலியுடன் ,  பயங்கர சூடும், தொடர் இருமலுமாக வீட்டு மருந்துகளுக்கு  எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில்  ஐந்தாம் நாள் டாக்டருக்கு போன் செய்தால்  எங்கள் குடும்ப வைத்தியர் விடுமுறையில் சென்றிருந்தார் என்பதனாலும்   இப்படி எல்லோருக்கும் இங்கே பரவிக்கொண்டிருப்பதனால்  காய்ச்சலுக்கு பாவிக்கும் மாத்திரையை தொடர்ந்து பாவிக்கவும், நிரம்ப தேனீர்களை குடிக்கவும், சொன்னார்கள், தேனீர் என்பது இங்கே மூலிகை தேனீர் போன்றதே,,, மிண்ட் தேனீர், துளசி இலை தேனீர், தேயிலை தேனீர்,  இன்னும் பல 

பத்து நாட்கள் ஆகியும் இருமல் அதிகமாகி  நெஞ்சின் அடிப்பகுதி வயிறு என தாங்க முடியாத வலி ஏற்படவும் மீண்டும்  அவசரகால   டாக்டரிடம் சென்றே ஆக வேண்டும் என சென்று   இரத்தம் சோதித்து மாத்திரை  களை வாங்கி வந்தாகி விட்டது. 

இரவும் பகலும் மூன்று நேரமும் டாக்டர் கொடுத்த மாத்திரையை ஒழுங்காக குடிக்க ஆரம்பித்தேன். எனக்கே என்னால்  தாங்க முடியாத  தொடர் இருமல் எப்படியேனும் விட்டு போனால் போதும் எனும் நிலை. 

ஆனால் ... மாத்திரை குடித்ததும்,,,  நன்றாக   தூக்கம் தூக்கமாக வந்தது,   அதிலும் இரவில் தான் எந்த இருமல் மாத்திரை குடிக்க வேண்டும் என்பதனால் குடித்ததும் தூங்கி விடுவேன். அடுத்த நாளிலுருந்து  உடம்பிலிருந்த சத்தெல்லாம் வடிந்தது போலும், வெறும் கூடு மட்டும் நடமாடுவது போலும்... எனர்ஜியே இல்லை,  100 மீற்றர் தூரம் நடந்தாலும் .. நடக்கவே முடியவில்லை என்பது வேறு விடயம். முடியவே இல்லை. இப்படி ஒரு உணர்வும் உடல் நிலையும் நான் இதுவரை என்னில் உணராதது. 

மீண்டும்  எங்கள்” குடும்ப டாக்டரிடம் போன் செய்து அவர் திரும்பி விட்டதனால் அங்கே சென்று  இருமலுக்கு இன்ஹோலரும்,,, அதாவது இதுவரை ஆஸ்துமா இல்லை எனினும் இருமல் நிற்கும் வரை இன்ஹோலர் பாவிக்க கொடுத்தார். கூடவே  முன்னர் கொடுத்தது போல் இரவில் பாவிக்கும் இருமல் மாத்திரையும் கொடுத்தார்.. நான் இன் ஹோலர் எடுத்து கொண்டு இருமல் மாத்திரையை நான்கைந்து நாட்கள் எடுக்காமல் விட்டேன். 

நான்கு நாட்கள் முன் மீண்டும்  தொடர் இருமல் தொடரவும், இந்த வாரமிருந்து ஹோட்டலும் அதிக ஆர்டர் வேலை என்பதனாலும்  எத்தை தின்றால் பித்தம் தெளியும் எனும் நிலையில்  தூங்க முன் மீண்டும் அந்த இருமல் மாத்திரையை குடித்தேன். அடுத்த ஒரு மணி நேரத்தில்... எனக்கு ஏன் உடம்பு கூடு போல் சத்தே இல்லாமல்  ஆனது, தலை சுத்து மயக்கம் போல் தொடர் தூக்கம்   அனைத்துக்கும் காரணமாய் இருந்தது எதுவெனவும்,  புரிந்திட முடிந்தது. கண்ணை திறக்கவே முடியவில்லை, மீண்டும் வந்த வழிக்கேவா என   இயலாமையுடன்  கைகால் எல்லாம் ஒருவகை இழுப்பும் ஆரம்பிக்க தூங்கவும் முடியாமல்   விழிப்பும் முழிப்புமாக... கடவுளே...மாத்திரை எனும் பெயரில்   நான் குடித்ததே என்னை மேலும் சோர்ந்து போக செய்து விட்டது. 

அடுத்த நாள் ஹோட்டல் வேலை, ஆயத்தங்கள் செய்ய வேண்டும் என நிரம்ப திட்டம் இட்டிருந்தேன், அத்தனையும்  என் உடல் நிலையால் பாழாக  மீண்டும் உடலில் எனர்ஜி இல்லாத உணர்வோடு வெறும் கூடு நடமாடுவதாக உணர்வுடன் ஒருவித மயக்க நிலையில்... படுத்தே இருந்தேன். மகன் வேலையால் வந்ததும், மாத்திரையில்  எழுதி இருக்கும் பக்கவிளைவுகள்  குறித்து படித்து சொல் மகன் என்றேன்.அதை படிக்க கூட முடியாத மயக்க உணர்வு எனக்குள்.நான் உணர்ந்தவை அத்தனையும்... அங்கே பக்க விளைவுகளாக...! 

மொத்தத்தில் இருமல் மருந்தென  குணப்படுத்தும் என நினைத்து குடித்த மாத்திரையே எனக்குளிருந்து  என்னை பாடாய் படுத்தி இருக்கின்றது. என் ;பணிகளை தடை செய்து இயலாமல் போக செய்திருக்கின்றது.  பொதுவாக நான் எந்த வியாதி வந்தாலும் சட்டென மாத்திரை பாவிப்பதில்லை, இயலவில்லை எனும் சூழல் வந்தால் தான்  மாத்திரை பாவிப்பது, சிறுவயதிலிருந்தே மாத்திரை மருந்தை கண்டால் அத்தனை வெறுப்பு.

இந்த இருமல் மாத்திரை போல்,,  முதுகுவலி, கைகால் மூட்டு வலி என  நாம் டாக்டரிடம் செல்லும் போது அவர்கள் தரும் மாத்திரைகளும் நம்மை டிப்பரேசிவ் எனும் மன அழுத்த  நோய்க்குள் கொண்டு விடுகின்றதென் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கின்றேன். வலிகளுக்கு நிவாரணம் தேடி போனால் எப்போதும் தூக்கம், ஒருவகை சோர்வு, எதிலும் ஆர்வமில்லாத தன்மை, தனிமை உணர்வு, தன்னிரக்கம்  என பல பக்கவிளைவுகளுடன் கூடிய மாத்திரைகளே வலி நிவாரணியாக எமக்கு கொடுக்கப்படுகின்றது.

இனிமேல் என்ன மாத்திரை தந்தாலும் அதிலிருக்கும் பக்கவிளைவுகள்  குறித்து ஆராயாமல்  பயன் படுத்துவதில்லை என முடிவும் எடுத்து விட்டேன். 

மருந்தெனும் பெயரில் எமனை வரவழைக்கின்றோமா?
கவனமாக இருங்கள் உறவுகளே.  


15 கருத்துகள்:

  1. அதாவது மாத்திரைகள் உட்கொள்ளும் பொழுது சாதாரண நேரத்தைவிட அதிகமான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் உடல் தாங்கும் காரணம் இப்பொழுது மாத்திரைகளில் எல்லா நாடுகளிலுமே அதிக பவர் சேர்க்கின்றார்கள்

    அதேநேரம் நம்மால் உண்ண முடியாது இதுதான் அவஸ்த்தை உடல்நிலை கவனம் கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  2. என்ன தான் மருந்து வெறுப்பு இருந்தாலும் முதலிலே குடும்ப மருத்துவரிடம் சென்று இருக்கலாமே என்று சொல்லத் தோன்றுகிறது... இப்போது அனைவரும் நலம் தானே...?

    பகிர்வு அனைவருக்கும் ஒரு பாடம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்றிருக்கலாம், இந்தமாதிர காய்ச்சல், இருமல் எனும் போது உடனடியாக மூன்று நாட்களுக்குள் அபாயிண்ட்மெண்ட் தர மாட்டார்கள், எத்தனை நாட்களாக காய்ச்சல் இருக்கின்றது, எத்தனை வீதம் வெப்பம் இருக்கின்ன்றது என எல்லாம் கேட்டு முதலில் நன்கு தேனீரும் நீரும் தினம் 3 லீற்றர் கணக்கில் குடிக்கவும்,சாதாரண காய்ச்சல் மாத்திரையும் பயன் படுத்தி பார்க்க சொல்வார்கள். ஐந்தாறு நாட்கள் அது தொடர்ந்தால் தான் இரத்தத்தில் வைரஸ் கலந்ததா என சோதிப்பார்கள்.சில காய்ச்சல் ஓரிரு நாளில் குணமாகியும் விடும்,அதை விட இங்கே அனைத்தும் இன்சுரன்ஸ் தான் எனினும் நாங்களும் பத்து வீதம் ஒவ்வொரு தடவையும் பில்லுக்கு பணம் செலுத்த வேண்டும் என்பதனால்.. அவசியம் இல்லை எனில் பெரும்பாலோனோர் மருத்துவரை நாடுவதை தவிர்த்து விடுவோம். மருத்துவரிடம் செல்வதே மெடிகல் கடிதம் வாங்க தான் எனும் நிலை தான் இருக்கும்,, வேலை செய்ப்வர்கள், பள்ளி மாணவர்கள் மூன்று நாட்கள் மருத்துவரின் மெடிகல் இல்லாமல் வீட்டில் நிற்கலாம். அதற்கு மேலும் எனில் மருத்துவரின் பற்றுச்சீட்டு அவசியம்.

      நீக்கு
  3. நல்ல தகவல் நிஷா . கவனமா இருங்க நிஷா .இந்த தகவல் அனைவருக்கும் பயன்படும். நானும் முடிந்த வரை டாக்டரிடம் போக மாட்டேன். வீட்டு வைத்தியம் தான். கொஞ்ச நாளாகவே எனக்கும் இந்த இருமல் இருந்தது. ஜலதோசம் தொடர்ந்து இந்த வறட்டு இருமல் வரும். அதிலும் மாதா மாதம் வரும் . நானும் மாத்திரை , டானிக் என மாத்தி மாத்தி சாப்பிட்டும் போகும் போது தான் போவேன் என அடம்பிடித்து 10 நாள் இருக்கும் . பிறகு 15,20 நாளில் மீண்டும் வரும். பார்த்தேன் இது சரிபட்டு வராதுனு இங்கே யுனானி ஹாஸ்பிடல் போய் பார்த்தேன். அவுங்க நெல்லிக்காய் சேர்த்து செய்த மாத்திரை எழுதுக் குடுத்தாங்க. இருமல் வரும்போது வாயில் போட்டு சப்பி சாப்புடுங்கனு சொன்னாங்க லேகியம் குடுத்தாங்க . அதை சாப்பிட்டேன். இப்போது சலதோஷம் வரும் ஆனால் வறட்டு இருமல் வருவதில்லை.

    பதிலளிநீக்கு
  4. வழிகாட்டும் விரிவான பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  5. கவனம்..
    எத்தனைதான் படிக்க...?

    பதிலளிநீக்கு
  6. பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகளே இல்லை என்று சொல்லாம்

    பதிலளிநீக்கு
  7. உடல்நிலை சரியில்லை என்ற அறிகுறி தெரியும் போதே உடனடியாக மருந்துகளை உட்கொள்ள வேண்டும் அதையும் வேலை தவறாமல் எடுக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  8. சொந்த பிஸினஸை கவனித்து கொள்ளும் போது இப்படி நேர்ந்தால் மிக மிக கஷ்டமே ஆனால் அந்த கஷ்டங்களையும் எளிதாக சமாளிக்க கூடிய மனதிடம் உங்களிடம் உள்ளது என்பதை அறிவேன்

    பதிலளிநீக்கு
  9. இதுக்குதான் சொல்லுறது இருமல் ஜல்தோஷம் போன்றவை வரும் போது சரக்கை மொடக் மொடக் என்று குடித்துவிட்டு பெப்பர் சிக்கன் போன்ரவை சாப்பிட்ட்டு தூங்கினால் சரக்கிற்கு பயந்து இருமல் ஜலதோஷம் எல்லாம் ஒடியேப் போய்விடும் இனிமே இப்படி பிரச்சனை வந்தால் டாக்டர் மதுரைத்தமிழனந்தாவிடம் அட்வைஸ் கேட்கவும் அட்வைஸ் இலவசமே மருந்தும் டாக்டர் வீட்டிற்கு வந்தால் இலவசமாக கொடுக்கப்படும்

    பதிலளிநீக்கு
  10. நான் மீண்டும் வருகிற 13 இல்
    அமெரிக்கா பெண் வீட்டிற்குச் செல்கிறேன்
    இப்போது பதினைந்து நாளாகவே
    நானும் என் மனைவியும் டயட்டில்
    இருக்கப் பழகிக் கொண்டோம்
    அனுபவம் அப்படி
    அருமையான பதிவு
    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
  11. இப்ப நலமாப்பா நிஷா ..நீங்க சொன்ன அத்தனையும் உண்மை குறிப்பா இருமல் மருந்துகள் ஆஸ்த்துமா பிரச்சினைகளுக்கு தரப்படும் மருந்துகளால் அதிக மனசோர்வு மற்றும் டிப்ரஷன் சிம்ப்டம்ஸ் கோபம் எல்லாம் ஏற்படும் ..எனக்கு 2015 வரை அப்படி நடந்தது ஒவ்வொருமுறையும் அலர்ஜி மருந்து தருவாங்க போலன் அலர்ஜிக்கு மற்றும் சைனஸுக்கு ..நாள் முழுக்க மயக்கமா இருக்கும் மூச்சும் அடைக்கும் அதை நிறுத்தினபிறகே சரியானேன் ..இருமல் நேரத்தில் சைனஸ் அதிகரிக்கும் உணவு பழங்களை சாப்பிடக்கூடாது ..டேக் கேர் .

    பதிலளிநீக்கு
  12. விரிவான அவசிய விழிப்புணர்வுப் பகிர்வு...
    தாங்கள் உடல் நலம் பாருங்கள்...

    பதிலளிநீக்கு
  13. நல்ல பதிவு! பல மருந்து பற்றிய தகவல்கள் அடங்கிய பதிவு! உங்கள் அனுபவம் உட்பட! சரி தற்போது எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறோம்.

    உங்களுக்கு மனோதிடம் அதிகம் எனவே மீண்டு வந்துவிடுவீர்கள் என்பது அறிந்தாலும், உடல்நலம் பேணுங்கள்!

    பதிலளிநீக்கு
  14. நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!