26 பிப்ரவரி 2019

#எங்கே_முகிலன்?

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

காதால் கேட்பதும் பொய், கண்ணால் பார்ப்பதும் பொய்,தீர விசாரித்து அறிவதுவே மெய் என்பார்கள்.
எந்தச்செயலையும் செயல்படுத்துவதற்கு முன்பு, அதற்கான சூழல்,தேவை,பயன்,நன்மை,தீமை என ஆராய்ந்து அறிந்து செயல்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
*காலமுணர்ந்து உடனடிச்செயல்பாடு 
*ஆராய்ந்து அறிந்த பின் நீண்ட கால செயல்பாடு

எனும் இரண்டில் எந்த செயல்பாடு எமதாக இருக்க வேண்டும் என்பதை அந்த சம்பவம் சார்ந்த கடந்தகால,நிகழ்கால,எதிர்கால முக்கியத்துவம் கருதி முடிவெடுக்கப்பட வேண்டும்.
“ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை, எவ்வளவு நல்லது” (நீதி. 15:23) தேவையான நேரத்தில் எமது செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது.
தாமதப்படுத்தப்படும் நீதியும், செயல்பாடுகளும் உயிர்க்கொலைகளுக்க்கு நிகரானதே?
பொதுப்பணியில் ஈடுபட்டிருக்கும் மனிதர்கள் குறித்த விமர்சனங்கள் வரும் போது அதன் சாதக, பாதகங்களையும், நமக்கு நாமே ஆராய்ந்து அறிந்து முடிவெடுப்பதே நல்லது.
அனைத்து செயல்பாடுகளின் பின்னாலும் விமர்சனம் இருக்கும். குற்றங்குறைகளும்,அரசியலும் கரைந்தே இரையும்.
இருக்கட்டுமே❗️ 
100 வீதம் அனைத்திலும் நிறைந்தவர் யார்?

குற்றம் குறைகள் இல்லை எனில் அவன் மனிதனல்ல மகான், மனிதர்களில் மகான்களை தேடுவதனால் நமக்கு நடக்க கூடிய நன்மை என்ன?
கடந்த கால வரலாறுகளை ஆராய்ந்து பார்த்தோமானால் சமுகம் சார்ந்த மக்கள் தேவைகளுக்காக தம்மை அர்ப்பணித்த பலரின் செயல்பாடுகளை அவர்களின் சுய ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்குவதன் மூலம் தடைசெய்து ஒடுக்கி அடக்கி இருப்பார்கள். மக்கள் ஆதரவை இழக்க வைத்திருப்பார்கள்.
மக்களுக்கான குரல் கொடுப்பவரின் குரல் வளையை நசுக்க எதிராளிகள் கையாளும் மிகவும் கேவலமான வழி முறை இதுவெனலாம்,
1.முகிலன் என்பவர் யார்? அவரின் கடந்த கால வாழ்க்கை எப்படியானது? என்ன பணியில் இருந்தார்? தன் சொந்தப் பணியை விட்டு மக்கள் தேவைகளுக்காக செயல்ப்படுவது பஞ்சு மெத்தை வாழ்க்கையை தரும் என எதிர்பார்த்திருப்பாரா?
2. அவர் தானாக காணாமல் போனாரா?
3. காணாமல் போக வைக்கப்பட்டாரா?

4. தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை சம்பவங்களில் நடத்தப்பட்ட அரசு சார்பான விதி மீறல்களை ஆவணமாக்கி, அதை வெளியிட்ட பின் ஒளிந்து கொள்வது தமது அத்தனைகால உழைப்பினையும் விரயமாக்கும் என ஆராய்ந்துணராமல் செயல்ப்பட்டிருப்பாரா?

5. அவரின் குடும்ப வாழ்க்கை, சொந்த சுய வாழ்க்கைப்பிரச்சனையில் மன உளைச்சலினால்  ஒதுங்கி ஓய்வெடுக்கும் முடிவை எடுக்க வேண்டுமானால் அரசுக்கும்,அதிகாரங்களுக்கும் எதிரான ஆவணங்களையும் தேடி சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? அதை செய்யாமலே இருந்திருக்கலாமே?

தன்னை தான் மறைத்துக்கொண்டு கண்ணாமூச்சி விளையாட்டின் மூலம் ஸ்டெர்லைட் பிரச்சனையை மக்களுக்கு உணர்த்தி பேசு பொருளாக்கலாம் என்பது சிறு பிள்ளைத்தனமான செயல்பாடென்பதோடு அவர் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் என புரிந்து கொள்ள முடியாதவரா?
பொது மக்கள் கைப்பாவைகளா?

🔘முட்களும், கற்களும் மேடுகளும் நிறைந்த சமூகப்பணியில் சுற்றுசூழலை பாதுகாக்க போராடும் முக்கிய களத்தில் செயல்படும் மனிதஎ தானாக திடிரென மாயமாகிப்போனால் அது வரையான செயல்பாடுகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகிப்போய் விடும் என்பதை புரியாமல் செயல்படக்கூடியவரா?

வழமை போல் இவர் மீதும், பெண், மண் என சிறு பிள்ளைத்தனமான குற்றத்தாட்டுக்களை வைத்து பிரச்சனையில் தீவிரத்தை திசை திருப்பி விடும் பணியில் அரசும், அதிகாரங்களும் ஒருமுனைப்பாக செயல்படும் போது, அரசின் அதிகாரத்தையும், செல்வாக்கையும், முகிலனையும் ஒரே தராசில் நிறுத்துவது எது அல்லது எவர்?

☑️அதிகாரத்தையும், செல்வாக்கையும் தம் வசம் வைத்திருப்போருடன் இவை எதுவுமே இல்லாத சமானிய மனிதனின் உயிரை பணயம் வைத்து , நீதி, நியாயம் என போராடும் போது ஆராய்ந்து அறிந்தே செயல்படுகின்றோம் என்று ஒதுங்கி நின்று ஓரமாய் வேடிக்கை பார்ப்பதனால் நாம் அடையும் நன்மை என்னவாக இருக்கும்?

☑️சந்தர்ப்ப சூழல் அதிகாரங்களுக்கு சாதகமாக இருக்கும் போது 100 ல் பத்து வீதம் முகிலன் கடத்தப்பட்டு, அவரின் உயிருக்கு ஊறுகள் ஏதேனும் ஏற்படுத்தப்பட்டிருந்தால் நமது ஆராய்வுகளையும், சந்தேகங்களையும் எங்கே போய் கொட்டுவோம்.
⁉️எதையெதையோவெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்புகின்றோம், பரப்புகின்றோம். மக்கள் பிரச்சனைகள் என வரும் போது மட்டும் அதை சந்தேகத்துடன் நோக்குகின்றோம். மௌனமாகி கடக்கின்றோம்? கேள்விகளை முன் வைக்கின்றோம்.

கேள்வி கேட்க வேண்டியவர்களிடம் கேட்கப்படுவதில்லை என்பதும் மகக்ளுக்காக போராடுவோரை மக்கள் முன் குற்றவாளிகளாக்கி, நமக்கான ஆளுமைகளை ஒடுக்கி, உளவியல் ரிதியில் பயத்தை, தோல்வியை உருவாக்கும் சூழ்ச்சிக்கு நம்மை அறியாமல் உதவி புரிகின்றோம் என்பதும் நாம் உணர்ந்தே ஆக வேண்டும்.

மனிதர்கள் எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு பலவீனம் இருக்கும். அவன் சொந்த வாழ்க்கையில் எப்படிப்பட்டவனாகவும் இருக்கட்டும். நமக்கென்ன?

✍️பொதுமக்களுக்கான பணியில் அவன் செயல்பாடு எப்படி இருந்தது?
☑️மது,மாது,பொருள், புகழ் என எதற்குமே அசையாத மனிதர்கள் எவரும் இவ்வுலகில் இலர் எனும் போது மக்களுக்காக போராடிய ஒருவனின் கடந்த கால செயல்பாடுகளை ஆராய்ந்து நிகழ்கால அவசியம், அவசரம் உணர்ந்து செயல்படுவதே அறிவுடையோர் செய்யக்கூடியது.
அவன் சொன்னான், இவன் சொன்னான் என எவன் எவனோ சொல்வதை நம்பும் நமக்கு அவன் என்னவானான் எனும் தேடலை நம்ப முடியாமல் போவது ஏன்?
கறை,திரை இல்லாத மனிதர்களை தேடுவதை விட நம் முன் இருக்கும் ஆக்கிரமிப்புக்கள், அடிமைப்படுத்தல் எனும் கடலின் கரையை அடைவது எப்படி என தேடுவதே முக்கியமாக இருக்கின்றது
பொதுப்பணிகாக தம்மை அர்ப்பணிப்போரின் சுய வாழ்க்கையை விமர்சிக்காமல், மக்களை அடிமைப்படுத்த முயற்சிக்கும் அதிகாரம், ஆணவங்களோடான போராட்டத்திலிருக்கும் செயல்பாடுகளையும்,அதன் முக்கியத்துவத்தையும், விளைவுகளையும் புரிந்துணர்வோடும் அவசர அவசியம் புரிந்தும் அணுக வேண்டும்.
நாளை நாளை என நாளை கடத்துவதும், கால நேரம் சூழல் புரிந்து செயல்படாமல் மதில் மேல் பூனைகளாக ஆராய்ந்து பார்த்து செயல்பட போகின்றோம் என சொல்லி வேடிக்கை பார்ப்பதும், காலம் கடந்த நியாயங்களும், நீதிகளும் எவருக்கும் பயன் தரப்போவதே இல்லை.
தமக்கென சுய சிந்தனை தெளிவு இல்லாமல் அடுத்தவர் பேச்சைக்கேட்டு அமைதியாக கடப்பவர்கள் சமூகத்தின் நன்மைகளை குறித்து சிந்திப்பவர்கள் அல்லர்.
நம் எதிராளி வேகம் மட்டுமலல் விவேகமாகவும் செயல்படுகின்றான் என்பதை நாம் இன்னும் உணரவே இல்லை
“ பரிசுத்தவான் என தன்னை சொல்பவன் இவன் மேல் முதலாவது கல்லெறியக்கடவன்

2 கருத்துகள்:

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!